(தோழர் தியாகு எழுதுகிறார் 46 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

அம்பேத்துகரைக் காவிச் சிமிழுக்குள் அடைக்க இந்துத்துவக் கயவர்கள் செய்யும் முயற்சி கண்டு வெகுண்டெழுந்து பேராசிரியர் மருதமுத்து அவர்கள் அம்பேத்துகர் நினைவு நாளில் எழுதியுள்ள முகநூல் இடுகையை இன்றைய தாழி மடலில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்:

நானும் தேச விரோதி!

ஆம், மருதமுத்துவாகிய நான் அழுத்தந்திருத்தமாக அறிவிக்கிறேன்—

நானும் தேசவிரோதி!

இன்று வரை இந்துத்துவா வாதிகள் எல்லோரும் தந்தை பெரியாரைத்  தேச விரோதி என்கிறார்கள், வெள்ளைக்காரனின் கைக்கூலி என்கிறார்கள். (எச்சு.இரசாவின் நம் ஒளியலைப் பேச்சு)

நேற்றுவரை தந்தை அம்பேத்துகரையும் தேசவிரோதி என்றார்கள், வெள்ளைக் காரனின் கைக்கூலி என்றார்கள். (அருண் சோரியின் ஆய்வு நூல்)

இன்று அம்பேத்துகரை சனாதன இந்துவாகச் சித்திரித்துக் காட்டுகிறார்கள்.

இந்த அக்கிரமத்தை எதிர்க்கும்,  தோழர் திருமா உட்பட அனைவரையும்,தேச விரோதிகள் என்று தூற்றுகிறார்கள்.

“திருமாவளவா, உன்னை அடிக்கிற அடியிலே உன் வாயாலேயே “வந்தேமாதரம், செய் இந்து!” என்று சொல்ல வைக்கலே நாங்க இராணுவம் கிடையாதுடா!” என்று இந்துவெறி தலைக்கேறிய குருமூர்த்தி மிரட்டுகிறான் காணொளி மூலம்.

(“அடிக்கிற அடியிலே” என்பதை மட்டும் சொல்லாமல் சொல்லியிருக்கிறான் இந்த ம.சே.கா.ப./CRPF காவிக் கயவன். திருமாவளவன் அடிக்குப் பயந்து தன் கொள்கையை மாற்றிக் கொள்பவர் என்பது இதன் பொருள்)

இதுதான் இனி இந்தியா என்றால், இது அம்பேத்துகரின் முத்திரை தாங்கிய சனநாயக, மதச் சார்பற்ற, சமூக நீதிக்கு இடமளிக்கும் இந்தியா அல்ல. அல்லவே அல்ல! 

இப்படிப்பட்டதாகத்தான் இந்தியத்தேசம் நீடிக்கும் என்றால்—

பெரியார், அம்பேத்துகர் வழியில் நானும் தேசவிரோதியே!

அதாவது–

நானும் இந்துத்தேச விரோதியே!

தந்தை அம்பேத்கர் நினைவு நாளில் அவர் முழக்கத்தை நினைவூட்டுகிறேன்—-

“சாதி என்பது தேசவிரோதமானது” (“CASTE IS ANTI-NATIONAL”)

—————————————————————–

ஆம் நண்பர்களே,

சாதிய சனாதனம் தேச மக்கள் அனைவர்க்கும் முதன்மையான எதிரி.

அதைப் போதித்த தந்தை அம்பேத்துகரையே நீ சனாதன வாதியாகச் சித்தரித்தால்—-

இனி,

நானும் தேசவிரோதி!!!!!!!

இதை வாசிக்கும் அனைவரும் அவ்வாறே மாறுங்கள் என்று பணிவோடு கோருகிறேன்.

இதைத் தவறாமல் பகிருங்கள், பரப்புங்கள்!

அன்புடன்,

மருதமுத்து

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல்  32