(தோழர் தியாகு எழுதுகிறார் 56 தொடர்ச்சி)

சமந்தா எழுதுகிறார்:

பொருளியல்:

வட்டியை உயர்த்தி வறியோரை வாட்டி…

பசித்தவர் புசிக்க உணவு தர வேண்டும்.. உணவா?… தவித்த வாய்க்குத் தண்ணீர் கூடத் தராமல் காயப் போடுவதுதான் இந்தியா உட்பட அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளின் வாடிக்கையான நடைமுறையாக உள்ளது.

அதன் படி, இந்தியச் சேம( ரிசர்வு) வங்கியின் ஆறு உறுப்பினர் கொண்ட பணவியல் கொள்கைக் குழு, திசம்பர் 5 முதல் 7 வரையிலான தனது இருமாதக் கொள்கைக் கூட்டத்தில் வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதமான மறு கொள்முதல் ஒப்பந்தம்(‘ரெபோ’) விகிதத்தை 0.35% உயர்த்தியுள்ளது.  ம.கொ.ஒ.(ரெபோ)விகிதம் 5.9%இலிருந்து 6.25%ஆக உயர்ந்துள்ளது. இதனால் கல்வி, வாகனம், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும். சேம வங்கி இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து ம.கொ.ஒ.(ரெபோ விகிதத்தை 2.25% உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக, நிலையான வைப்பு வசதி (SDF) விகிதம் 6.00% ஆகவும், துணை நிலை வசதி (MSF) விகிதம் , வங்கி விகிதம் 6.50% ஆகவும் உள்ளது.

பொதுத்துறை அமைப்புகள் ஒன்றையொன்று வலுப்படுத்த வேண்டும். அது நவீன தாராளமயத்திற்கு (புதுத் தாராளியத்துக்கு) பிடிக்குமா? பிடிக்காது… அப்படியென்றால் அதன் ஒட்டுவாலான பாசக-விற்கும் பிடிக்காது. தனியார் துறையை வலுப்படுத்துமாறு பொதுத்துறை நிறுவனங்களை நெருக்குகிறது பாசக அரசு. தற்போது பொதுத்துறை நிறுவனங்களின் உபரி நிதியை தனியார் துறை பரிமாற்ற நிதிகளின் குறுகியக் காலத் திட்டங்களில் முதலீடு செய்ய நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தும் இந்த தாராளமய முடிவு கடும் கண்டனத்திற்குரியது. இது வரை, மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் (சிபிஎசுஇ) தங்கள் உபரி நிதியை இந்தியப் பங்கு, பரிவர்த்தனை வாரியம்(SEBI/செபி) ஒழுங்குமுறைக்குட்பட்ட பொதுத்துறை பரிமாற்ற நிதிகளில் வைப்பு முதலீடு செய்யவே அனுமதிக்கப்பட்டன.

இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி(ஐடிபிஐ) வங்கியில் வெளிநாட்டு நிதி, முதலீட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு 51% க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.

பொருளாதார வல்லுநர்கள் 51 பேர் நிதியமைச்சர் நிருமலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வரவிருக்கும் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களை உயர்த்துமாறும், போதுமான மகப்பேறு சலுகைகளை வழங்குமாறும் கேட்டுள்ளனர்.

தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் (NOAPS) கீழ் முதியோர் ஓய்வூதியத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பை மாதத்திற்குக் குறைந்தது உரூ.200 என்பதிலிருந்து (2006 முதல் மாற்றப்படாமல் உள்ளது) உரூ.500 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும், ஓய்வூதியம் பெறும் 2.1 கோடி பேருக்கு இதற்கெனக் கூடுதலாக உரூ. 7,560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கைம்பெண் ஓய்வூதியத்தை 300   உரூபாயிலிருந்து குறைந்தது 500 உரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் இதற்குக் கூடுதலாக உரூ.1,560 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) விதிமுறைகளின்படி மகப்பேறு உரிமைகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், இதற்குக் குறைந்தது 8,000 கோடி உரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் தில்லி பொருளியல் பள்ளி( )மதிப்புநிலைப் பேராசிரியர்  சீன் திரேசு (Jean Drèze); இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனப்(IGIDR)பொருளியல் பேராசிரியர் ஆர். நாகராசு, தில்லி இதொ.நு.(ஐஐடி) பொருளியல் பேராசிரியை இரீத்திகா கேரா, கலிபோர்னியா பெருக்குலி பல்கலைக் கழகப் பொருளியல்  பேராசிரியர் பிரணாபு பருதான் ஆகியோர் அடங்குவர்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 36