(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.23. தொடர்ச்சி)

தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்
மாணவரியல்

24. நன்றி யறிதல்

  1. நன்றியென் பதுபிறர் நல்கிடு முதவி.

மற்றவர்கள் நமக்குச் செய்தவையை நினைவு கூர்தலே நன்றி ஆகும்.

  1. உறவினர் முதலியோ ருதவுதல் கடனே.

உறவினர் முதலியவர்களுக்கு உதவுதல் நம் கடமை ஆகும்.

  1. பிறர்செயு முதவியிற் பெரிதொன் றின்றே.

பிறர் நமக்குச் செய்யும் உதவியைவிட பெரியது ஒன்றுமில்லை.

  1. உதவியிற் சிறந்த துற்றுழி யுதவல்.

துன்பம் ஏற்பட்ட சமயத்தில் செய்யப்படும் உதவியே சிறந்த உதவி ஆகும்.

  1. உயர்ந்தது கைம்மா றுகருதா துதவல்.

உதவியில் உயர்ந்தது பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் செய்யப்படும் உதவி ஆகும்.

  1. அறிதலெஞ் ஞான்று மதைநினைந் தொழுகல்.

நன்றி அறிதல் என்பது செய்த உதவியை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்வது ஆகும்.

  1. உதவியோர் குடியெலா முயர்வுற வுள்ளல்.

நமக்கு உதவி செய்தவர் குடும்பத்துடன் உயர்வு பெற எண்ணுதல் நன்றி அறிதல் ஆகும்.

  1. உதவியோ ரறவுரை யுடனிறை வேற்றல்.

உதவி செய்தவர்களின் அறிவுரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.

  1. உதவியோர் மிகைசெயி னுடனதை மறத்தல்.

உதவி செய்தவர்கள் ஏதேனும் குற்றங்களைச் செய்தால் உடனடியாக அதை மறந்துவிடுதல் வேண்டும்.

240.அறிதற் களவுண் டுதவி சொலக்கெடும்.

உதவி பெற்றவர் உதவியைப் பற்றிப் பாராட்டிப் பேசலாம். ஆனால் உதவி செய்தவர் உதவியைப்பற்றிப் பேசுதல் கூடாது.

– வ.உ.சிதம்பரனார்

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum