தமிழ்ப்போராளி இலக்குவனாரை எப்போதும் தவறாமல் மறவாமல் போற்றும் செந்தமிழன் சீமான் புகழுரை

தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப்பேரறிஞர்!

அதுநாள்வரை மாணவர்கள் ஆங்கிலத்தில் கூறிவந்த வருகைப் பதிவை அன்னைத் தமிழில் “உளேன் ஐயா” என்று உரக்கச் சொல்ல வைத்த பெருமகன்!

சங்கப் பாடல்களை முதன் முதலாகச் சிறுகதை, நாடகங்கள் வடிவில் உலகத்தமிழர் உள்ளங்களில் சேர்ப்பித்த இதழியல் முன்னோடி!

தான் வகுப்பெடுத்த கல்லூரிகளில் எல்லாம் மாணவர்களுக்கு இனப்பற்றும் மொழிப்பற்றும் ஊட்டித் தன்னந்தனியனாக ஒரு தலைமுறையையே மானத் தமிழர்களாக வளர்த்தெடுத்த பெருந்தகை!

மாணவர்களிடம் தாய்த்தமிழ்ப்பற்றை ஊட்டுகிறார் என்ற காரணத்திற்காகப் பல்வேறு மாவட்டங்களுக்குப் பணியிடம் மாற்றி அலைக்கழித்தது அன்றைய காங்கிரசு அரசு!

ஆனால், அதையே வாய்ப்பாகக் கொண்டு செல்லும் இடமெல்லாம் இந்தித் திணிப்பிற்கு எதிராக இளந்தமிழ் தலைமுறையினரிடம் தமிழ் நெருப்பைப் பற்ற வைத்த புரட்சியாளர்!

நா.காமராசன், க.காளிமுத்து, கவிஞர் இன்குலாபு, பா.செயப்பிரகாசம் என 1965 ஆம்ஆண்டு நிகழ்ந்த மூன்றாம் மொழிப்போரின் முதன்மைத் தளபதிகளாக முன்னின்றவர்கள் பலரும் ஐயா இலக்குவனார் மூட்டிய புரட்சித்தீயில் பூத்த அவரின் மாணவச் செல்வங்களே!

அன்னைத் தமிழைப் பயிற்சிமொழியாக்க மறுத்து ஆங்கிலத்திற்குத் துணை நின்ற திமுக கல்வி அமைச்சரைக் கண்டித்து அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்ட மாநிலக்கல்லூரித் தலைமைத் தமிழ்ப்பேராசிரியர் பணியினை, தன்மானத்துடன் தூக்கி எறிந்த தமிழ் மறவர் நம்முடைய ஐயா இலக்குவனார் அவர்கள்!

மொழிப்போரை முன்னின்று நடத்தியதற்காகச் சிறையேகிய ஈகி, பெரும் புலவர் ஐயா இலக்குவனார் அவர்களின் புரட்சிகரப் பெருவாழ்வினப் போற்றுகின்ற இந்நாளில் அவர் கற்பித்தவழி நின்று தமிழ் மொழியையும் மண்ணையும் விழியெனக் காப்போம் என உறுதியேற்போம்!

மொழி காத்த தமிழ் மறவர்

ஐயா இலக்குவனார் அவர்களின்

பெரும்புகழ் போற்றுவோம்!

(ஒப்பம்)

++

தமிழறிஞர்களில் தனித்துவமானவர்; ஓய்வறியாத் தமிழ்ப் பணியாளர் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் நினைவுநாள் இன்று.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பாடத்தை நீக்க முடிவு செய்தபோது, அது அரசரின் முடிவாக இருந்தாலும், அதற்கு எதிராகத் துணிந்து வாதாடியவர். தான் சென்ற இடமெங்கும் தமிழ்க் கழகங்களை நிறுவியும், இதழ்களை நடத்தியும், தனித்தமிழை வளர்த்த தமிழ்க்காவலர். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரைப் போன்ற தமிழுணர்வு பீறிட்டெழும் தலைமுறையை உருவாக்கிய ஆசிரியர். தமிழுக்காக வாழ்ந்து, தமிழுக்காகப் போராடி, தமிழைக் காக்கும் போராளிகளை உருவாக்கிய அவ்வறிஞரின் நினைவுநாளில், அவரது தமிழ்ப்பற்றையும் போராட்ட உணர்வையும் போற்றுவோம்!

– தங்கம் தென்னரசு, முகநூற்பதிவு