(கவிஞாயிறு தாராபாரதி 3 & 4 – தொடர்ச்சி)

 

கவிஞாயிறு தாராபாரதி 5 & 6

 அல்லுலகை ஆள்கின்ற அந்தப் போதில்
ஆதவன்காண் கிழக்கிந்த அன்னை பூமி!
புல்வெளியைப் பூக்காடாய்ப் புதுக்கி எங்கும்
புன்னகையைப் புழங்கவிட்ட புதுமை தேசம்!
சொல்லுலவுங் கவிபடைத்துச் சொந்த நாட்டின்
தூய்நெறியைத் தீந்தமிழால் சொல்லிச் செல்வோர்
நல்லுலகில் அன்றமைந்த நாற்றங் காலாய்
நடைபயின்ற பாரதத்தை நயந்து நின்றார்! (5)

சேய்மையதும் அண்மையதும் தொலைந்தே ஒன்று
செய்வினையைச் செயப்பாட்டு வினையைச் செய்தார்!
தாய்மையெனத் தமிழ்மொழியின் தன்மை தன்னைத்
தமதாக்கி முன்னிலையில் படர்க வென்றார்!
ஆய்தம்போல் தனிநிலையை அடையச் செய்ய
அகச்சுட்டு புறச்சுட்டென் றறிவைச் சுட்டி
வாய்மையெனும் ஒன்றன்பால் வளர்க என்றார்!
மற்றெவையும் பயனிலைதான் எழுவாய் என்றார்! (6)

– சந்தர் சுப்பிரமணியன்