தமிழன் பெட்பு

தமிழன் என்றோர் இனமுண்டு;

       தனியே அவற்கொரு குணமுண்டு;

அமிழ்தம் அவனுடை வழியாகும்;

       அன்பே அவனுடை மொழியாகும்.       1

அறிவின் கடலைக் கடைந்தவனாம்;

       அமிழ்தத் திருக்குறள் அடைந்தவனாம்;

(1)பொறியின் ஆசையைக் குறைத்திடவே

       பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.       2

கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்

       கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான்;

புவியில் இன்பம் பகர்ந்தவெல்லாம்

       புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.       3

பத்தினி சாபம் பலித்துவிடும்

       பாரில் இம்மொழி ஒலித்திடவே

சித்திரச் சிலப்பதி காரமதைச்

       செய்தவன் துறவுடை ஓரரசன்.       4

சிந்தா மணி, மணி மேகலையும்,

       பத்துப் பாட்டெனும் சேகரமும்,

(2)நந்தா விளக்கெனத் தமிழ் நாட்டின்

       நாகரி கத்தினை மிகக்காட்டும்.       5

தேவா ரம்திரு வாசகமும்

       திகழும் சேக்கி ழார்புகழும்

ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்

       உரைகளும் தமிழன் வாழ்வாகும்.       6

தாயும் ஆனவர் சொன்னவெலாம்

       தமிழன் ஞானம் இன்னதெனும்;

பாயும் துறவுகொள் பட்டினத்தார்

       பாடலும் தமிழன் பெட்பெனலாம்.   

நேரெதும் நில்லா ஊக்கமுடன்

       நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்

பாரதி என்னும் பெரும்புலவன்

       பாடலும் தமிழன் தரும்புகழாம்.       8

கலைகள் யாவினும் வல்லவனாம்

       கற்றவர் எவர்க்கும் நல்லனாம்

நிலைகொள் பற்பல அடையாளம்

       நின்றன இன்னும் உடையோனாம்.       9

சிற்பம் சித்திரம் சங்கீதம்

       சிறந்தவர் அவனினும் எங்கே சொல்?

வெற்பின் கருங்கல் களிமண் போல்

       வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்.       10

உழவும் தொழிலும் இசைபாடும்

       உண்மை; சரித்திரம் அசைபோடும்;

இழவில் அழுந்திடும் பெண்கூட

       இசையோ டழுவது கண்கூடு.       11

யாழும் குழலும் நாதசுரம்

       யாவுள தண்ணுமை பேதமெலாம்

வாழும் கருவிகள் வகைபலவும்

       வகுத்தது தமிழெனல் மிகையலவாம்.       12

கொல்லா விரதம் பொய்யாமை

       கூடிய அறமே மெய்யாகும்;

எல்லாப் புகழும் இவை நல்கும்;

       என்றே தமிழன் புவிசொல்லும்.       13

மானம் பெரிதென உயிர்விடுவான்;

       மற்றவர்க் காகத் துயர்படுவான்;

தானம் வாங்கிடக் கூசிடுவான்;

       ‘தருவது மேல்எனப் பேசிடுவான்.       14

சாதிகள் தொழிலால் உண்டெனினும்

       சமரசம் நாட்டினில் கண்டவனாம்;

நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்

       நிறைகுறை யாமல் செய்தவனாம்.       15

உத்தமன் காந்தியின் அருமைகளை

       உணர்ந்தவன் தமிழன்; பெருமையுடன்

சத்தியப் போரில் கடனறிந்தான்;

       சாந்தம் தவறா துடனிருந்தான்.       16

குறிப்புரை:- (1) பொறியின் ஆசை – ஐம்பொறிகளின் விருப்பம்.

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகள்.

(2) நந்தா விளக்குஅணையா விளக்கு (5); பெட்புஆசை,

அன்பு, பெருமை (7); நேர்ஒப்பு (8); வெற்புமலை;

சாந்தம்அமைதி

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்