தமிழ் வளர்கிறது! 1-3

 

விடுதலைத் தமிழ ரென்று

 வீறுடன் பேசு கின்ற

முடிநிலை காண்ப தற்கு

 முழக்கடா சங்க மென்று

திடுமென வீர ரெல்லாம்

 திரண்டுவந் தெழுப்பு மோசை

கடிதினிற் கேட்டேன் இன்பக்

 களிப்பினில் துள்ளி வந்தேன்.

வடவரின் பிடியி னின்றும்

 வளர்தமிழ் நாட்டை மீட்கத்

திடமுடன் தொண்ட ரெல்லாம்

 திரண்டனர் என்ற போது

கடனெலாம் தீர்ந்தவன் போல்

 களிப்புடன் ஓடி வந்து

படையினில் சேர்ந்து கொண்டேன்;

 பாடினேன் தமிழ்வாழ் கென்றே.

 

தமிழரின் நாட்டை மீட்போம்

 தமிழ்நறு மொழியைக் காப்போம்

தமிழரின் கொடியை ஏற்றித்

 தமிழ்மகள் மானம் காப்போம்

தமிழரின் அரசு நாட்டித்

 தமிழர்பண் பாடு காப்போம்

தமிழரின் வீட்டி லெல்லாம்

 தமிழ்மணம் கமழச் செய்வோம்.

 

(தொடரும்)

பாவலர் நாரா. நாச்சியப்பன்