(தமிழ் வளர்கிறது! 16-18 : தொடர்ச்சி)

 

தமிழ் வளர்கிறது! 19-21 : 

 

ஆங்கிலத்தில் கணக்கெழுதும் வேலை பார்ப்போன்

அவரசத்தில் ஒருபிழையை எழுதி விட்டால்

பாங்கினிலே பணிசெய்யத் தகுதி யில்லை

படிப்பில்லை என்றவனை விலக்கி வைப்பார் !

ஓங்கிவளர் தமிழ்மொழியில் கலைப டைப்போர்

உண்டுபண்ணும் பெரும்பிழைகள் ஒன்றி ரண்டா?

ஈங்கிதனைக் கூறிடவோர் ஆளும் இல்லை

எழுத்தாளர் பிழைத்தமிழும் கொழுத்துப் போச்சாம் ! (19)

 

 

அரைப்படிப்புக் காரரெல்லாம தமிழ்வ ளர்க்கும்

ஆர்வமுள்ள எழுத்தாள ராகி விட்டார் !

திரைப்படத்தின் எழுத்தாள ரெல்லா மிந்தத்

திருநாட்டில் அறிஞர்களாய் உலவு கின்றார் !

உரைப்படிப்புப் பண்டிதரோ புதுமை யென்றால்

ஒதுங்குகின்றார் ! நூற்பொருளில் திருத்தம் சொன்னால்

கறைப்படுத்தி விட்டோமென் றலறு கின்றார் !

காண்பதெல்லாம் விந்தைகளே ! தமிழர் நாட்டில்! (20)

 

ஏனென்று கேட்பதற்கோர் ஆளு மின்றி

இருக்கின்ற காரணத்தால் தமிழர் நாட்டில்

தானென்று திரிகின்ற போக்குக் கொண்டார்

தலைகனத்துத் திரிகின்ற நிலைமை கண்டோம்.

பேனொன்று தலையேறி இருந்து விட்டால்

பெருமையுள்ள தாய்விடுமா என்று பார்த்தால்

யானென்றும் உயர்ந்தவனென் றெண்ணு கின்ற

அவர்நிலைமை யறிந்திடுவார் உண்மை காண்பார்!  (21)

(தொடரும்)

பாவலர் நாரா. நாச்சியப்பன்:

தமிழ் வளர்கிறது