தீவாளி, நல்விழா நாளா? – பாரதிதாசன்
தீவாளி, நல்விழா நாளா?
நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன்என் றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
‘உனக்கெது தெரியும் உள்ளநா ளெல்லாம்
நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா? ‘
என்று கேட்பவனை ‘ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய் ‘என்று
கேட்கும்நாள் மடமை கிழிக்கும்நாள் அறிவை
ஊட்டும்நாள் மானம் உணருநாள் இந்நாள்.
தீவா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவிரே!
பாவேந்தர் பாரதிதாசன்
(தலைப்பிற்கான பட நன்றி: பாதா தளம்)
கவிதை சிறப்பு. புத்தகம் படிக்கும் வழக்கமும் அதற்கான வாய்ப்பும் அற்றவருக்கு அமிழ்தம். ஆனால், எளிய தமிழ் உரை சேர்த்து கொடுங்கள். நன்றி
பாரதி இலக்கணப் பிழையோடு எழுதியதை,புரட்சிக் கவிதான் பிழையற எழுதவைத்தார் என்ற செய்திக்கு நன்றி.தீபாவளி,நல்விழா நாளா ? கருத்துகளை இற்றைத் தமிழர் உணர்தல் வேண்டும்.