(ஏ, தாழ்ந்ததமிழகமே! 7/8 தொடர்ச்சி)

[1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.]


கொலை வாளினை எடு

அந்தக் காலத்திலே இன்னல் ஏற்பட்டால், ‘இட்ட முடன் என் தலையில் இன்னவாறு என்றெழுதி விட்ட சிவனும் செத்து விட்டானோ. முட்டப் பஞ்சமே வந்தாலும் பாரமவனுக்கே’ என்று பாரம் பழிகளை ‘அவன்’ மேல் சுமத்தினார்கள்; பதிலை எதிர்பார்க்காமல் இடைக்காலத்தில், ‘கேட்டவரம் அளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்காள், கூட்டோடு எங்கே குடிபோனீர்’ என்று கடவுளைப் புலவர்கள் தேட ஆரம்பித்தார்கள். ஆனால் பாரதிதாசனோ, “கடவுளைக் காண முடியவில்லை. ஆகையால் கடவுள் வந்து கடுங்கோலர்களைத் தண்டிப்பார் என்று நினைக்காதே; கொலை வாளினை எடடா;
நாம்தான், அந்த மதோன்மத்தர்கள் மண்டையிலே அடிக்க வேண்டும்” என்கிறார். அந்தக்கால மக்கள் ‘கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில், கடும் புலிவாழும் காடு நன்றே’ என்று அரண்மனையைவிட ஆரண்யமே மேல் என்று ஆரண்யம் புகுந்தார்கள், அரசாட்சியைப் பற்றிக் கவலைப்படாமல்.

பாரதியார் வந்தார் “தனி ஒருவனுக்கு உணவில்லை யெனில் இந்த சகத்தினை அழித்திடுவோம்” என்று அழகாக அரசியலைத் தாக்கச் சொன்னார் மக்களை. ஆனால், பாரதிதாசனோ, கொலை வாளைக் கையில் கொடுத்து நேரே நம்மைக் களத்திலே கொண்டு வந்து நிறுத்துகிறார்.

காதலும் வீரமும்

பாரதிதாசன் தென்றலைப் பற்றியும், தமிழைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும்தானே பாடினார்; காதலைப் பற்றிப் பாடியிருக்கிறாரா என்றால் வேண்டிய மட்டும் பாடியிருக்கிறார்; அவர் கவிதைப் பகுதிகளில் எந்தப் பகுதியைப் படிக்காவிட்டாலும் காதல் பகுதியைப் பற்றி யாரும் படிக்காமலிருக்கமாட்டார்கள் என்பதற்காக, நான் காதலைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. காதலையும் வீரத்தையும் பாடும் படியும், பாடி ஆடும்படியும், அதை இசையிலே காட்டும்படியும், அவரது காவியங்களும் கவிதைகளும் சொல்லுகின்றன. தமிழ் நாட்டிலே காதலைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும் புலவர்கள் அதிகம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் காரணம், தமிழ் நாட்டின் இயற்கை எழில். இங்குச் சுற்றிப் பார்த்தால், இங்கிலாந்தில் காணப்படுவது போலச் சுண்ணாம்புக் குன்றுகள் தோன்றா; அழகிய குன்றுகளுக்குப் பக்கத்திலே சாலைகள்; சாலைகளுக்குப் பக்கத்திலே சோலைகள்; வற்றாத சீவநதிகளுக்குப் பக்கத்திலே அவை பாய்கின்ற நன்செய்கள்; நன்செய்களிலே நிற்கும் பஞ்சை உழவர்கள்; அந்த உழவர்கள் பாடும் பள்ளு; அந்தப் பள்ளு நெஞ்சை அள்ளும் விதம். இந்தக்கவின் பொருந்திய காட்சி தமிழனுக்குக் காதலை ஊட்டுகிறது. காட்டை நாடாக்கியிருக்கிறார்கள். ஒரு காலத்திலே, விந்திய மலைக்குத் தெற்கே காடாயிருந்ததைப் பிற நாட்டார் கண்டு மெச்சத் தகுந்த அளவு மட்டுமல்ல, பொறாமைப் படும் அளவுக்கு அழித்து நாடுகளும் வீடுகளும் அமைத்திருக்கிறார்கள். வியாபாரத்திலே தழைத் தோங்கி இருக்கிறார்கள். வீரத்திலே திளைத்திருக்கிறார்கள். இன்னும் வீரம் போற்றப்படுகிறது போர்க்-களங்களிலே!

தமிழனுடைய வீரம் மங்காதிருக்கக் காரணம், தமிழனுடைய வீரத்திற்கும் பிறருடைய வீரத்திற்குமிருந்த வித்தியாசமே. தமிழன் என்றும் அக்கினியாகசுத்திரம் உபயோகித்த தில்லை; பாசுபதத்தைப் பயன்படுத்தியதில்லை. அவனது ஆயுதங்கள் அவனிரு பருத்த தோள்கள். இடையிலே வாள்; வாள் ஏந்தக் கை; கைக்கேற்ற கருத்து; கருத்துக் கேற்ற களம்; களத்துக்கேற்ற காட்சி; அங்குப் பிணக்குவியலைக் கண்டு பயப்படாத காட்சிக் கேற்ற கம்பீரம். கனக விசயரைக் கைது செய்ய கங்கைக்கரைக்குச் சென்றான் சேரன் செங்குட்டுவன் என்றால், சென்றான் வீரர்களுடன்; வீரர்கள் சென்றனர் வாள்களோடு; திரும்பினர் வெற்றியோடு, அன்று ஆரியம் தாள் பணிந்தது வாளுக்காக. சேரன் செங்குட்டவன் வெற்றி பெற்றான் என்றால், ஐயனுடைய அருளாலல்ல; மழையைப் பொழியும் வருணாசித்திர மில்லாமல், அழிக்கும் அக்கினியாசித்திரம் இல்லாமல், சேரன் சண்டையில் வெற்றி பெற்றான்.

இந்த அசித்திரங்கள், குலோத்துங்கன் இராசராசன், போன்றவர்கள் பருமா மீது படையெடுத்த போதும் பிற நாடுகளைப் பிடித்த போதும் உபயோகப்படவில்லை. உபயோகப்பட்டதாகச் சான்றுகளில்லை; தமிழர்களுக்கு ஒரு வீசை இரும்பு; ஒரு சிறிய உலைக்கூடம்; கொஞ்சம் மூளை இவை இருந்தால் போதும், வாள் வடிக்க. வாள் வடித்து விட்டார்களானால், அவர்களுக்கு முன்னேயே இருக்கின்ற அஞ்சாநெஞ்சமும், அருமைக் கையும் போதும். பருண சாலைகள் அமைக்க வேண்டியதில்லை; நிகும்பல யாகங்கள் ஏதும் செய்ய வேண்டியதில்லை; ஐயனின் அருளைப் பெற. எப்பொழுது அம்மையும் அப்பனும் சண்டை சச்சரவுகளில்லாமலிருக்கிறார்கள் என்ற நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவேண்டியதில்லை. அந்த மாதிரியான தமிழனின் வீரத்தை அழகாகப் பாடியுள்ளார் பாரதிதாசன்.

பாரதிதாசன்

பாரதிதாசன் பாக்கள், தமிழனின் வீரத்தையும் காதலையும் நினைவூட்டும்; பாரதிதாசன் படம் அதற்கு உறுதுணையாயிருக்கும். பாரதிதாசன் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து அவருக்குப் பாராட்டுதல் செய்வதற்கும்; செய்வதற்குக் காரணாமாயிருந்தவர்களுக்கும், இப்பணியைத் தொடங்கிய அருமை மாணவர்களுக்கும் உறுதுணையாக நின்று பேராதரவு அளித்த பேராசிரியர்களுக்கும் எனது வணக்கம். அவர்களை நன்றாக, மனமார வாழ்த்துகிறேன். பாரதிதாசன் முகத்திலே அமைதி தவழாது; அதற்குப் பதிலாக புரட்சி வாடை வீசும். கோபம் சுவாலை வீசும். திரு. வி. க. ஆண்மையில் பெண்மை காணுவது போலக் காண முடியாது. அவரது முகத்திலே மீசை கறுத்து முறுக்கேறியிருக்கும். அவருடைய முகத்திலே யோகத்தின் சின்னங்களைக் காண முடியாது. தியாகத்தின் தழும்புகளைக் காணலாம். அவர் அண்மையிலே புதுவையில் சிலரால் காலித்தனமாகத் தாக்கப்பட்டார். ஆனால், புதுவையில் பட்ட தியாகத் தழும்புகள் இந்தப் படத்திலே தெரியாது. அந்தத் தியாக மூர்த்தியின் திருவுருவப் படம் தமிழ்நாடு எங்கணும், மாட மாளிகைகளிலே, மாடமாளிகை மட்டுமல்ல; மண் குடிசைகளிலே, மண் குடிசைகளிலே மட்டுமல்ல; மக்களுடைய மனத்திலேயும் பிரகாசிக்க வேண்டும். அவரது ஆவேசம் எல்லாருக்கும் உண்டாகுமாக; அவரது ஒவ்வொரு கவிதையும் இந்நாட்டின் விடுதலைக்காக வெடி குண்டுகளாகுமாக! அவரது ஒவ்வொரு கவிதையும் ஒரு உரூசோவாக மாறுமாக! அவரது ஒவ்வொரு கவிதையும் ஒரு வால்டேராக மாறுமாக!

ஏ தமிழ்நாடே! ஏ தாழ்ந்த தமிழ் நாடே! தேய்ந்த தமிழ் நாடே!
தன்னை மறந்த தமிழ் நாடே! தன்மானமற்ற தமிழ் நாடே!

நன்றிகெட்ட தமிழ்நாடே! கலையை உணராத தமிழ் நாடே!
கடவுளின் இலட்சணத்தை அறியாத தமிழ் நாடே!
மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ் நாடே!
ஏ, சோர்வுற்ற தமிழ் நாடே! வீறுகொண்டெழு! உண்மைக் கவிகளைப் போற்று!
உயி்ர்க் கவிகளைப் போற்று! உணர்ச்சிக் கவிகளைப் போற்று!
புரட்சிக் கவிகளைப் போற்று! புத்துலகச் சிற்பிகளைப் போற்று!!!

என்று கூறி, உங்கள் அனைவரின் சார்பாகவும், பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது படத்தைத் திறந்து வைக்கிறேன்.

ஏ, தாழ்ந்த தமிழகமே!

பேரறிஞர் அண்ணா