keattuppaarungal

 

     இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்

     இல்லையென்று சொல்லுவதில்லை

     கருணையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்

     காட்சிதர மறுப்பதுமில்லை 

      ஆணவத்தை அகற்றிப்பாருங்கள் – அவன்

      அரவணைக்கக் கரத்தைநீட்டுவான்

      நாணயாமாய் நடந்துபாருங்கள் – அவன்

      நாளுமெங்கள் அருகில்வந்திடுவான்

     உணர்வுகொண்டு பாடிப்பாருங்கள் – அவன்

     உள்ளமதில் வந்துநின்றிடுவான்

     தெளிவுடனே நாளும்தேடுங்கள்  அவன்

     விரைவினிலே உதவவந்திடுவான்

     ஏழ்மைதனை இரங்கிப்பாருங்கள் – அவன்

     எங்களுடன் இணைந்துநின்றிடுவான்

     தோழமையாய் இருந்துபாருங்கள் –அவன்

     துயர்துடைக்க வந்துநின்றிடுவான்

     கண்மணியே என்றுபாடுங்கள் – அவன்

     கருணைமழை பொழிந்துநின்றிடுவான்

     கண்ணீரால்நனைத்துப்பாருங்கள் – அவன்

     காலமெலாம் உதவிநின்றிடுவான்

     சினமதனை அகற்றிப்பாருங்கள் – அவன்

     தனைமறந்து பக்கம்வந்திடுவான்

     தனிமையிலே இருந்துபாருங்கள் – அவன்

     இனிமையெலாம் தந்துநின்றிடுவான்

     காதலுடன் பாடிப்பாருங்கள் – அவன்

     கணப்பொழுதில் வந்துநின்றிடுவான்

     ஒளியென நினைத்துப்பாடுங்கள் – அவன்

   நலமனைத்தும்தந்துநின்றிடுவான்

    நெறியுடனே நின்றுபாடுங்கள் – அவன்

    நீதிதர மறுப்பதுமில்லை

    பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்

    பூரணமாய் தந்துநின்றிடுவான்

kaieanthungal

 

தரவு – முதுவை இதயத்து