வளர்த்திடுவீர் செந்தமிழை! – இலக்கியன்
வருக இன்றே!
எல்லாரும் எழுதுகின்றார் பேசு கின்றார்
இதுவரைக்கும் நந்தமிழ்க்கோ ஆட்சி யில்லை
வல்லவராம் வாய்ப்பேச்சில் எழுத்தில், ஆய்வில்
வளர்ப்பதுவோ தம்பெருமை, வருவாய்க் காகச்
செல்வரெங்கும் வண்டமிழைப் புகழ்வர் எங்கும்!
செழித்ததுவோ செந்தமிழும்! முனைவ ரெல்லாம்
பொல்லாரே! காசுக்கே வாழு கின்ற
போலிகளே! இவராலே தமிழா வாழும்?
முனைவரென்ற பேராலே பல்லோர் உண்டு
முன்வந்து தமிழ் வளர்க்க யாரு மில்லை
தினமணியில் கட்டுரைகள் எழுதிச் செல்வார்
திணையளவும் தமிழ்த்தொண்டில் நாட்ட மில்லார்
வினைத்தூய்மை வினைத்திட்பம் கற்றி ருந்தும்
விளையாட்டாய் இருக்கின்றார் பயனே இல்லார்!
பனைமட்டைச் சலசலப்பா தமிழ்வ ளர்க்கும்?
பண்புள்ள தமிழுணர்வே தமிழைக் காக்கும்!
இருக்கின்ற முனைவரெலாம் இன்றெ ழுந்தால்
இருக்கின்ற தமிழடிமை இன்றே தீரும்!
தெருத்தெருவாய்த் தமிழ் வளர்ச்சிப் பணிகள் செய்யச்
செயன்முனைவர் திரண்டெழுந்தால் தமிழே ஓங்கும்
அருந்தமிழில் ஆட்சியிலை என்றி ருந்தும்
அடக்கமுடன் இருப்பதுவா முனைவர் செய்கை?
வரும்இளைஞர்க் குணர்வூட்டி எழுச்சி யூட்டி
வளர்த்திடுவீர் செந்தமிழை! வருக இன்றே!
பாவலர் இலக்கியன்
தேனமுதம் பொங்கல் மலர் 1997
பாவலர் இலக்கியன் சொல்லுவது மிகவும் சரியானதே. நேற்று இரவு என்னால் உறங்க இயலவில்லை. தமிழனின் பாதை இப்படி மாறிக் கொண்டே இருக்கிறதே என்று வருந்தினேன். இன்று காலை இலக்கியனின் பா கண்டு இதை எழுதுகிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் திட்டமிட வேண்டும். அதைச் செயற்படுத்த மாவட்டத்திற்கு ஓரு நண்பரை இணைக்க வேண்டும். இயங்க வேண்டும். பள்ளிகளும், சூழலும், தொலைக்காட்சி / பத்திரிகைகளும் – அனைத்தும் நீர்த்துப் போனது என்பதை விட நாறிப் போய் விட்டன.
இன்றைய நிலையில் செய்ய வேண்டியன என்ன ?
1) இதுவரை அச்சில் வந்தவைகளைப் பாதுகாக்க வேண்டும் ( 1950 க்கு முன் வெளி வந்தவை அனைத்தும் )
2) இதுவரை இயங்கிய தமிழாளர்களைப் பட்டியலிட்டு அவர்களது பதிவுகளை, அவர்களைப் பற்றிய குறிப்புகளைத் தொகுத்து வரிசைப்படுத்த வேண்டும். (இதைச் செய்யவில்லை என்றால் நாம் வரலாற்றைத் தொலைக்கிறோம் )
3) அயற்சொல்லில் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். நல்ல தமிழ்ச் சொற்களை பட்டியலிடுவதும், அகராதிகளாகத் தொகுப்பதும், தோன்றுகிற புதியனவற்றுக் கெல்லாம் வேரடிச் சொற்கள் கண்டு பதிவு செய்வதும் – வேண்டும்.
4) தமிழ்க் கற்பித்தலை எளிமைப்படுத்தி கற்பிக்க வேண்டும் ( மொழியாகக் கற்பிக்க வேண்டும் ) இன்றும் ஐந்து ஆண்டுகளில் எந்த மொழியும் தெளிவாகத் தெரியாமல் தமிழன் கலவையாக மாறிப்போக உள்ளான்.
5) பள்ளிகள் பண்பாட்டையும், மொழியையும் விதைக்காமல் பணத்தை மட்டுமே அறுவடை செய்வதால், காலைப் பயிற்சி இடங்கள் என பண்பாட்டுப் பயிற்சி இடங்களை அமைத்து – அதில் தமிழியத்துக்கான பயிற்சியை இளம் மாணவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும்.
6) இது போலவே இளைஞர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இடங்கள் அமைத்து பயிற்றுவிக்கப்படல் வேண்டும்.
( மழலையர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என அனைவரும் வணிகத் தாக்கத்தில் மூழ்கி விட்டனர் )
( விலங்காக வளர்ந்துள்ளானே தவிர, நுட்பத் தன்மையே கிடையாது – 60 ஆண்டுகளில் நாம் பெற்றவை இவை )
முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நல்ல உணர்வுள்ள நண்பரைகளை அடையாளம் கண்டு அவர்களை அழைத்து நாம் அவர்களுடன் கலந்துரையாடுவோம். செய்ய வேண்டியதை வரிசைப்படுத்துவோம்
அன்புடன்
பொள்ளாச்சி நசன் – தமிழம்.வலை