கவிதைதமிழறிஞர்கள்பாடல்

தமிழ் வளர்ச்சி – பாவேந்தர் பாரதிதாசன்

thamizh01

எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்.

இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.

வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக

விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு

தெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து

செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.

எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்

இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.

உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்

ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்

சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்!

தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்.

இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்.

எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்

தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந் தோமில்லை.

தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *