(இராவண காவியம்: 1.7.21 -1.7.25. தொடர்ச்சி)

 

இராவண காவியம்

  1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம்
  1. துணையா நின்ற மறவோரைத் துணையாக் கொண்டே யுடனாகி
    இணையா நின்ற முன்னோனுக் கெதிரா வருமா கொடியோர்போல்
    அணியா நின்ற வணிகொண்டவ் வன்னைக் கெதிரா வவ்வணியே
    புணையா வந்த பாழ்ங்கடலே பொன்றா யோநீ யின்றோடே.

27. நன்றே பழகித் துணைசெய்யும் நல்லோர் போல நலஞ்செய்தே

ஒன்றார் போலப் பாழ்ங்கடலே உயிர்கொண் டொழிந்தா யோகெடுவாய்

என்றே புலம்பித் தமிழ்மக்கள் இடம்விட் டகலா விடரெய்தித்

தன்றா யிழந்த கன்றேபோல் தம்மூ ரிழந்து தவித்தாரே.

28.அன்னை புலம்பத் தந்தையழ ஆவா வென்றே மக்களழத்
தன்னை புலம்பத் தங்கையழத் தாவா நின்றே யொக்கலொடு
பொன்னை யிழந்துங் கைவந்த பொருளையிழந்தும் மணிமாடந்
தன்னை யிழந்தும் வடபாலி தன்னை யடைந்தார் தமிழ்மக்கள்.

ஷெ வேறு வண்ணம்

29.வேலியே பயிரை மேய்ந்தால் மேலொரு காப்பின் றேபோற்

கோலியே வேலி யாகக் குழவியைத் தாய்காப் பேபோற்

சாலவே காத்து வந்த தமிழ்க்கட லெனப்பேர் பெற்ற

வேலையே கொள்ளு மானால் வேறினிச் செய்வ தென்னே.

30. என்றவ ரமைதி கொண்டா ரென்னினு மிழந்த செல்வத்

தொன்றற வொன்று வந்தாங் கூசலாட் டுறவே யுள்ளம்

கன்றியே கதறி மேலோர் கழிந்ததற் கிரங்கே லென்னும்

நன்றியல் பொருளை யுன்னி நாள்கழிந் திருக்குங் காலை

         
குறிப்பு :
    26. அணியே புணை - தன்மீது பாடிய தமிழ்ப்பாட்டுக்களின் இனிமை கண்டே 

மேலும் காணப் பொங்கியது. 28. புலம்பல் – தனித்தல், அழுதல், தன்னை – அண்ணன்.
தாவா நின்று – தாவி, விரைந்து.

(தொடரும்)
இராவண காவியம் – புலவர் குழந்தை