காணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள் – வைகை அனிசு
காலமாற்றத்தால் காணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள்
தமிழகத்தின் தனித்த அடையாளங்களாக உலகம் முழுவதும் அறியப்படுபவை கலையும் இறைமையும்.
குறிப்பாகக் கோயில் கட்டடக்கலை இன்று வரை உலகினை ஈர்க்கும் முதன்மைக் கூறாக உள்ளது. இயற்கைச் சீற்றங்களாலும், அயலவர்களின் படையெடுப்பாலும் அழிந்து போனவை தவிர்த்து, காலத்தைத் தின்று செரித்து இன்றும் நம்முன் நின்று கொண்டிருக்கும் வரலாற்றுக் கால கட்டடங்கள் நம் பெருமையைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு கலைப் பண்பு நிறைந்த கோயில்களில் இறைவனுக்கு ஊழியம் செய்ய ஆண்களும், பெண்களும் இருந்துள்ளனர். அவர்கள் தேவ அடியார் என்றும் இறைவனுக்கு ஊழியம் செய்வோர் எனவும் அழைக்கப்பட்டனர். அவ்வாறு இறைவனுக்கு ஊழியம் செய்பவர்கள் இறைவனைப் பற்றிப் பாடவும், ஆடவும் தெரிந்த பெண்கள் இறைப்பணியிலும் கலைப்பணியிலும் தங்களை ஈடுபடுத்தியுள்ளனர். இறைவனுக்கு ஊழியம் செய்பவர்கள் கோயில் சார்ந்து அத்தனைப் பணிகளையும் செய்தார்கள். இறைவனின் திருத்தலத்தில் பக்திப் பாடல்களைப் பாடவும், விடியலில் திருப்பள்ளி எழுச்சிப் பாடி இறைவனையும், இறைவியையும் துயில் எழுப்புவதில் தொடங்கி, இரவு இருவரையும் பள்ளியறைக்குள் அனுப்பிப் பாடல்கள் பாடித் தூங்க வைப்பது வரையும் இறைஊழியர்களே ஈடுபட்டனர். அவ்வாறு ஈடுபட்ட இறை ஊழியர்களுக்குக் காலையிலும் மாலையிலும் உணவிற்காக அந்தந்த ஊர்ப்பொதுமக்கள் உணவுகளை வழங்குவார்கள்.
உலக்கை மணிகளால் அழகு செய்யப்பெறும். உலக்கையின் முன்புறமும், பின்புறமும் சட்டிகள் வைத்து வீடு, வீடாகச் சென்று தங்களுக்கு வேண்டிய உணவுகளைப் பெற்றுக்கொள்வார்கள். இதற்காக ஒவ்வொரு கோயிலிலும் இந்த உலக்கை இருக்கும். தற்பொழுது கால மாற்றத்தால் அனைத்தும் மறைந்துவிட்டது.
இருப்பினும் தேவதானப்பட்டி பகுதியில் பழமை வாய்ந்த கோயில்களில் உலக்கையும், மணியும் கோயிலிலின் ஓரத்தில் வைக்கப்பட்டு காட்சிப்பொருளாக உள்ளது. பண்டைய காலத்தின் சுவடுகள் நாளுக்கு நாள் மறைந்துவருவதுடன் மரபும் அழிக்கப்பட்டு வருவதற்கு உலக்கையும் ஒரு சான்றாக உள்ளது.
Leave a Reply