si.paa.athithanaar_athithanar athithanar-viruthu03

 

  ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 111- ஆவது பிறந்தநாளும் இலக்கிய பரிசளிப்பு விழாவும் நடைபெற்ற பொழுது மூத்த தமிழ் அறிஞர் விருதும் விருதுத் தொகை உரு..3இலட்சமும் பெற்ற ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன் ஏற்புரை வழங்கினார்:-அப்பொழுது அவர் பின்வருமாறு உரையாற்றினார்

குடும்ப உறவு

  ஐயா சி.பா.ஆதித்தனாரின் உள்ளக்கிடக்கை, வாழ்க்கை ஒவ்வொரு தமிழனும் அறிந்துகொள்ளக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய ஒப்பற்ற வாழ்வு நெறியாகும். அவரின் உன்னதமான உழைப்பே அவரை உயரச்செய்தது. தொழிலாளருடன், தொழிலாளராக வாழ்ந்து பத்திரிகையை உயர்த்திக்காட்டினார். நான் பார்த்த வரையில், ‘தினத்தந்தி’ குடும்ப உறவுபோல் எந்தப் பத்திரிகையிலும் பார்க்கமுடியாது.

  எத்தனையோ இடர்பாடுகளை கடந்து ‘தினத்தந்தி’ இன்று உயர்ந்து நிற்கிறது. பத்திரிகை நடத்தும்போது ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கையில் பணம் இல்லை என்ற நிலையில், ‘சேட்டிடம்’ வெற்றுத்தாளில் கையெழுத்திட்டுப் பணம் பெற்று ஊழியர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். தான் வேறு, தொழிலாளர்கள் வேறு என்று அவர் ஒருபோதும் நினைத்தது இல்லை.

உச்சமான தலைவர்

  காகிதம் கிடைக்காத காலத்தில் தொழிலாளர்களுடன் சேர்ந்து காகிதக் கூழ் காய்த்து, ‘காலை முதல் மாலை’ வரை அதைக் காகிதமாக மாற்ற உழைத்தார். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பத்திரிகை நடத்தினார். ‘தினத்தந்தி’ அரசியல் மாற்றத்திற்கு மிகப்பெரிய கருவியாக இருக்கிறது. ‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு’ என்று வாழ்ந்தவர். அந்தத் தொடரைஅறிமுகப்படுத்திய ஆதித்தனாரிடம் இருந்து விடாமுயற்சியை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

  தன் கோட்பாட்டில் உறுதியோடு வாழ்ந்தார். தமிழர் என்று சொன்னால் சி.பா.ஆதித்தனார்தான் முன் நிற்கிறார். தமிழுக்கும், தமிழர்களுக்கும் உச்சமான தலைவர் சி.பா.ஆதித்தனார். எங்களுக்குப் பரிசளிக்கும் செய்தியை ‘தினத்தந்தி’யில் முதல் பக்கத்தில் 8 பத்திச் செய்தியாக வெளியிட்டிருந்தார்கள். இதைவிடத் தமிழ் மொழியின் படைப்பாளர்களுக்கு வேறு என்ன பெருமை கிடைக்க முடியும். எங்களுக்கு இவ்வளவு பெரிய புகழைத் தந்த ‘தினத்தந்தி’க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ் மொழியை வளர்க்க தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பாடுபட்டது போல எல்லா தலைவர்களும் துணிந்து வெளியே வந்து போராடவேண்டும்.

‘வெல்க தமிழ்’

  எதைச்செய்தாலும் தமிழ், தமிழ் என்று ஐயா வாழ்ந்தார். அவர் நடத்திய இதழுக்குப் பெயர் ‘தமிழ்’. அவர் அமைத்த இயக்கம் ‘நாம் தமிழர்’. தாய் இல்லத்துக்குப் பெயர் ‘தமிழன் இல்லம்’. அவர் வெளியிட்ட பதிப்பகத்துக்குப் பெயர் ‘தமிழ்த்தாய் பதிப்பகம்’. அவர் அமைத்த இரண்டு இயக்க அமைப்பு பெயர்  ‘இளந்தமிழர்’, ‘மகளிர் தமிழ்மன்றம்’. எழுதிய நூல் ‘தமிழ்ப் பேரரசு’.

  அவருடைய தமிழ் உணர்ச்சிதான் எங்களைப் போன்றவர்களுக்கு உந்துதலைத் தந்தது. தமிழ் மக்கள் மானத்துடன் வாழவேண்டும், பசி, பட்டினி இல்லாமல் வாழவேண்டும். தமிழ் உணர்வோடு வாழவேண்டும் என்பதற்காகச் சி.பா.ஆதித்தனார் பாடுபட்டார்.

  ஒருமுறை ஐயா அவர்களை பார்க்க ஒரு நடிகர் வந்தார். அவர் உள்ளே வரும்போதே “தமிழ் வாழ்க” என்றார். உடனே ஐயா அவர்கள் தமிழ் எப்போதும் வாழும். அதை யாரும் அழிக்க முடியாது. ஆனால் தமிழ் வென்றதா? என்றுதான் பார்க்கவேண்டும். அதனால் தமிழ் வெல்க என்று சொல்லுங்கள் என்று அன்றே சொன்னார். அவரிடம் மட்டுமல்லாமல் எப்போதுமே தமிழ் வாழ்ந்தால் மட்டும் போதாது, தமிழ் வெல்லவேண்டும் என்பதை ஐயா அவர்கள் சொல்வார். அதையே ‘தினத்தந்தி’ தலைப்பின் கீழே ‘வெல்க தமிழ்’ என்று வெளிவருகிறது.

வாழ்க்கை வரலாறு

  இன்றைய இளைஞர்கள் சி.பா.ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துகொள்ளும் வகையில் மலிவுப்பதிப்பாக வெளியிடவேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். சி.பா.ஆதித்தனாரின் ஈகத்தை ‘தினத்தந்தி’ எப்போதும் காப்பாற்றும். ‘தினத்தந்தி’ ஒரு பல்கலைக்கழகம். அஞ்சல் வழிக்கல்வி, திறந்தவெளி பல்கலைக்கழகம் போல தமிழை வளர்க்க அன்று முதல் ‘தினத்தந்தி’ பாடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன் சி.பா.ஆதித்தனார் குறித்து அவர் எழுதிய கவிதையைப் படித்தார்.

logo-muthirai-dinathanthi