சொந்தக் காணிகளில்

குடியமர்த்தப்படும்வரை போராடுவோம்:

தொடரும் கேப்பாப்பிலவு போராட்டம்

  விமானப்படைத் தளத்திற்கு முன்பாக உள்ள வீதியில், கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த 9 ஆம்  நாள் முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  குளிரையும் வெயிலையும் பொருட்படுத்தாது தமது பூர்வீக நிலத்தினை மீட்கும் போராட்டத்தில் கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள்  2 ஆவது வாரமாகத் தொடர்ந்து  ஈடுபட்டு வருகின்றனர். .அம்மக்கள், சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படும்வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.r.

  மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப் பல்வேறு தரப்பினரும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அங்கு சென்று தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.

வெகு மக்கள் அமைப்பின் ஒன்றியம் பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்குத் தமது ஆதரவினை வழங்கியுள்ளது.

  தம் மீது கரிசனை கொண்டு பல்வேறு அரசியல் தரப்புக்களும் தம்மைச் சந்தித்து வருகின்ற போதிலும், எவரும் தமது  சிக்கலுக்குத் தீர்வை பெற்றுக் கொடுப்பதாக இல்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்  கவலை தெரிவித்துள்ளனர்.

  இதேவேளை கேப்பாப்பிலவு பிலக் குடியிருப்பு மக்களுக்கு யாழ். இளைஞர்கள் ஆதரவு தெரித்து யாழ்ப்பாணம்  பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 அதேபோல்,  கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், படையினர் வயமுள்ள தமது காணிகளை விடுக்குமாறு வலியுத்தியும் முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

படங்கள் :  ஈழ(த்)தேசம்