(கவிஞாயிறு தாராபாரதி 11 & 12 தொடர்ச்சி)

 

கவிஞாயிறு தாராபாரதி 13 & 14

அண்ணல்கை வில்லதுவே அன்னை சீதை
அகமெரிக்கும் விறகெனவாய் ஆன தின்று!
கண்ணீரில் சீதனங்கள் கடத்தி வந்து
கல்யாணச் சிறைபுகுந்த கைதி பெண்டிர்!
மண்ணெண்ணெய் விளக்கெரிக்கும் வழக்கம் எல்லாம்
மாண்டுவிட்ட கதையாகி மறைந்த நாளில்
பெண்ணெண்ணெய் எரிக்கின்ற பேய்கள் கூட்டம்!
பெயருக்காய்த் திருமணங்கள்! பிணமாய்ப் பெண்மை! (13)

தெருவளைவின் சந்தையதில் தேர்ந்து வாங்க
தெருப்பொருளா கால்நடையா தையல் இன்னும்?
பொருளளித்துப் பொருள்பெறுதல் பொதுவில் மெய்ம்மை!
பொருள்கொடுத்துப் பெண்கொடுக்கும் பொய்ம்மை தீமை!
கருவறைக்குள் போற்றுன்றன் கருணை தன்னை!
கயவரெனின் காட்டுன்றன் கண்ணில் தீயை!
புருவமிலை மீசையது! புலியாய் மாறு!
புதியகீதை பாடுலகைப் புரட்டிப் போடு! (14)

– சந்தர் சுப்பிரமணியன்

கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்