திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 026. புலால் மறுத்தல்
(அதிகாரம் 025. அருள் உடைமை தொடர்ச்சி)
01. அறத்துப் பால்
02. துறவற இயல்
அதிகாரம் 026. புலால் மறுத்தல்
அசைவம் உண்ணாமையும், பிறஉயிர்க்
கொலையை எண்ணாமையும் அருள்.
- தன்ஊன் பெருக்கற்குத், தான்பிறி(து) ஊன்உண்பான்,
எங்ஙனம் ஆளும் அருள்….?
உடலைப் பெருக்க, உடலுண்பான்
எங்ஙனம் அருளை ஆள்வான்….?
- பொருள்ஆட்சி, போற்றாதார்க்(கு) இல்லை; அருள்ஆட்சி,
ஆங்(கு)இல்லை ஊன்தின் பவர்க்கு.
காப்பாற்றாதார்க்குப், பொருளும், புலாலைத்
தின்பார்க்கு, அருளும் இல்லை.
- படைகொண்டார் நெஞ்சம்போல், நன்(று)ஊக்கா(து), ஒன்றன்
உடல்சுவை கண்டார் மனம்.
கொலைக்கருவி எடுப்பாரும், இறைச்சி
உண்பாரும், அருளை எண்ணார்.
- அருள்அல்ல(து) யா(து)….?எனில், கொல்லாமை; கோறல்,
பொருள்அல்ல(து) அவ்ஊன் தினல்.
கொல்லாமையே அருள்ஆகும்; கொல்லல்,
அப்புலால் தின்னல், அறம்ஆகா.
- உண்ணாமை உள்ள(து), உயிர்நிலை; ஊன்உண்ண,
அண்ணாத்தல் செய்யா(து), அளறு.
புலால்மறுப்பால் உயிர்கள் இருக்கும்;
உண்பாரை நரகமும் ஏற்காது.
- தினல்பொருட்டால், கொள்ளா(து) உல(கு)எனின், யாரும்
விலைப்பொருட்டால், ஊன்தருவார் இல்.
இறைச்சியை வாங்குவார் இல்லை
என்றால், விற்பாரும் இல்லை.
- உண்ணாமை வேண்டும் புலாஅல்; பிறி(து)ஒன்றன்
புண்அது, உணவார்ப் பெறின்.
பிறிதோர் உயிரின் புண்ஆகிய
புலாலை உண்ண வேண்டாம்.
- செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்,
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
மற்றவர் கொன்ற உடல்ஆயினும்
குற்றம்அற்ற அறிஞர் உண்ணார்.
- அவிசொரிந்(து), ஆயிரம் வேட்டலின், ஒன்றன்
உயிர்செகுத்(து) உண்ணாமை நன்று.
ஆயிரம் வேள்விகள் செய்வதைவிடக்,
கொல்லாமை, தின்னாமை நல்லது.
- கொல்லான், புலாலை மறுத்தானைக், கைகூப்பி,
எல்லா உயிரும் தொழும்.
எவ்உயிரையும் கொல்லானை, உண்ணானை,
உயிர்கள் கைகூப்பி வணங்கும்.
- பேராசிரியர் வெ. அரங்கராசன்
- (அதிகாரம் 027. தவம்)
Leave a Reply