(அதிகாரம் 064. அமைச்சு தொடர்ச்சி)

attai_kuralarusolurai

02. பொருள் பால்       
06. அமைச்சு இயல்
அதிகாரம் 065. சொல்வன்மை    

கேட்பார் உள்ளம் கொள்ளும்படி,

சொற்களைச் சொல்லும் வல்லமை.

 

  1. நாநலம் என்னும் நலன்உடைமை, அந்நலம்,

    யாநலத்(து) உள்ளதூஉம் அன்று.

 

        எல்லாத் திறன்களுள்ளும் மிகச்சிறந்த

        வெல்திறன் பேச்சுத் திறனே.

 

  1. ஆக்கமும், கேடும், அதனால் வருதலால்,

     காத்(து)ஓம்பல் சொல்லின்கண் சோர்வு.

 

        வளர்ச்சியும், வீழ்ச்சியும், தரும்பேச்சைத்,

        தவறு இல்லாது பேசுக.

 

  1. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க், கேளாரும்

     வேட்ப மொழிவ(து)ஆம் சொல்.

 

        கேட்டாரையும் கவர்ந்து, கேளாரையும்,

        கேட்கத் தூண்டும்படி, பேசுக.

 

  1. திறன்அறிந்து சொல்லுக, சொல்லை; அறனும்,

     பொருளும், அதனி(ன்)ஊங்(கு) இல்.

                       

        கேட்பார்திறன், சொல்திறன் ஆராய்ந்து

        பேசினால், அறம்பொருள் சிறக்கும்.

 

  1. சொல்லுக சொல்லைப், பிறி(து)ஓர்சொல், அச்சொல்லை

     வெல்லும்சொல் இன்மை அறிந்து.             

 

        வெல்லும்சொல் இல்லாதபடி, ஆராய்ந்து,

        வெல்லும்படி சொல்லைச் சொல்லுக

 

  1. வேட்பத்,தாம் சொல்லிப், பிறர்சொல் பயன்கோடல்,

     மாட்சியின் மா(சு)அற்றார் கோள்.     

 

        அறிஞர், விரும்பும்படி பேசுவர்;

        பிறர்பேச்சையும் கேட்டுக் கொள்வர்.

.

  1. சொலல்வல்லன், சோர்(வு)இலன், அஞ்சான், அவனை

     இகல்வெல்லல் யார்க்கும் அரிது.                    

 

        சொல்வல்லமை, உளறாமை, அஞ்சாமை,                     

        உள்ளார், சொல்வதில் வெல்வார்.

 

  1. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம், நிரந்(து),இனிது

     சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

 

        நிரலாய்ச் சொலவல்லார் இன்சொல்லை,

        உலகார் எல்லாரும் பின்பற்றுவார்.

 

  1. பலசொல்லக் காம்உறுவர் மன்ற, மா(சு)அற்ற

    சிலசொல்லல் தேற்றா தவர்.

                      

        சிலசொற்களில் நல்லதைச் சொல்லாதார்,

        பலசொற்களில் சொல்ல விரும்புவார்.       

 

  1. இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர், கற்ற(து)

     உணர விரித்(து)உரையா தார் 

 

        படித்ததை விரித்துச் சொல்லற்கு

        முடியாதார், மணம்இல்லா மலர்.

(அதிகாரம் 066. வினைத் தூய்மை)

  • பேராசிரியர் வெ. அரங்கராசன்