(அதிகாரம் 10. இனியவை கூறல் தொடர்ச்சி)

arangarasan_thirukkural_arusolurai_attai

01 அறத்துப் பால்

02. இல்லற இயல்   

அதிகாரம் 011. செய்ந்நன்றி அறிதல்

 

           பிறரது நல்உதவிகளை மறவாமல்,

        நன்றியராய் இருத்தலை அறிதல்.

 

  1. செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும்,

     வானகமும், ஆற்றல் அரிது.

 

       தான்செய்யாப் போதும், பிறர்செய்

       உதவிக்குப், பூமி,வான் ஈ[டு]ஆகா.

 

  1. காலத்தி னால்செய்த நன்றி, சிறி(து)எனினும்,

     ஞாலத்தின் மாணப் பெரிது.

 

       காலத்தே செய்த நல்உதவி,

       சிறி[து]எனினும், உலகினும் பெரிது.     

 

  1. பயன்தூக்கார் செய்த உதவி, நயன்தூக்கின்,

     நன்மை, கடலின் பெரிது.

 

       பயன்கருதார் செய்த உதவியின்

       நன்மை, கடலினும் பெரிது.          

 

  1. தினைத்துணை, நன்றி செயினும், பனைத்துணைஆக்,

     கொள்வர், பயன்தெரி வார்.

 

        சிறிய உதவியின் பயனையும்

       சிந்திப்பார், பெரிதாய் மதிப்பார்.

 

  1. உதவி வரைத்(து)அன்(று), உதவி; உதவி,

     செயப்பட்டார் சால்பின் வரைத்து.

 

         உதவியின் பெரும்பயன், உதவியைப்

     பெற்றாரின், பண்பைப் பொறுத்தது.

 

  1. மறவற்க, மா(சு)அற்றார் கேண்மை; துறவற்க,

     துன்பத்துள் துப்(பு)ஆயார் நட்பு.

 

       தூய நட்பை மறக்காதே;

   துன்பத்தில் உதவியவரைத் துறக்காதே.

 

  1. எழுமை எழுபிறப்பும், உள்ளுவர், தம்கண்

     விழுமம் துடைத்தவர் நட்பு.

 

         துன்பம் துடைத்தாரது நட்பை,

     நன்றியர் எப்பிறப்பிலும், நினைப்பர்.

 

  1. நன்றி மறப்பது, நன்(று)அன்(று); நன்(று)அல்ல(து),

     அன்றே, மறப்பது நன்று.

 

     என்றும் செய்ந்நன்றியை மறவாதே;

       அன்றே தீமையை மறந்துவிடு.

 

  1. கொன்(று)அன்ன, இன்னா செயினும், அவர்செய்த

     ஒன்று,நன்(று), உள்ளக் கெடும்.

 

         கொலைபோல், தீமைசெயினும், அவர்செய்

       ஒருநன்மையால், அத்தீமை கெடும்.

 

  1. எந்நன்றி கொன்றார்க்கும், உய்(வு)உண்[டு]ஆம்; உய்(வு)இல்லை,

     செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

 

       உதவியை, மறந்த எவருக்கும்,

     உயிர்வாழ்க்கை என்றும் இல்லை

– பேராசிரியர் வெ. அரங்கராசன்

  (அதிகாரம் 012. நடுவு நிலைமை)