தமிழில் முதல் சிறுகதை?

தமிழில் முதல் சிறுகதை எது? என்ற தலைப்பில்  முனைவர் ஆர்.எசு.யாக்கோபு(சேக்கபு) ஒரு சிறிய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இதன் முதல் பதிப்பு 2013இல் வெளியாகியுள்ளது.

மூன்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் மேய்ந்தபொழுது, என் பார்வை பதிவான இந்த நூலை வாங்கினேன்.

தமிழ் இலக்கியவரலாற்றில் வ.வே.சு.(ஐயரின்) ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதைதான் முதல் சிறுகதை என்று கூறப்பட்டு வருகிறது.

ஆனால் மகாகவி பாரதிதான் ‘துளசிபாய்’ என்ற முதல் சிறுகதையை எழுதியவர் என ஆய்வாளர்கள் சிலர் ஆதாரம் காட்டி வருகின்றனர்.

ஆனால், எழுத்தாளர் ஆர்.எசு.யாக்கோபு அவர்களின் தேடுதல் முயற்சிகளில்  சாமுவேல் பவுல்(ஐயர்) எழுதிய சிறுகதைதான் முதல் சிறுகதை என்பதைத் தேடிக் கண்டு பிடித்து ஆதாரத்துடன் நிறுவுகிறார்.

நூலாசிரியரான ஆர்.எசு.யாக்கோபு, சாமுவெல்(ஐயர்) படைத்த ‘சரிகைத் தலைப்பாகை’ என்ற கதைதான் முதலாவது சிறுகதை எனக் கூறியுள்ளார் . அவரே இப்படி எழுதுகிறார்:

‘தமிழில் முதல் புதினம் பிரதாப முதலியார் சரிதம்’ என்று கண்டுகொண்டது போன்று, தமிழில் சிறுகதை எதுவென்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே என் அவா. அந்த எண்ணம் என் உள்ளத்திலே பல ஆண்டுகளாக உறுத்திக்கொண்டே இருந்தது.. அந்த நோக்கில் நிறையப் படிக்க ஆரம்பித்தேன்..அதன் விளைவே இச் சிறுநூல். தமிழில் முதல் சிறுகதை எது? என்றசிற்றாய்வு. ரிசி மூலம், நதிமூலம் போன்று கண்டுபிடிக்க முடியாத சிக்கலான ஒன்று அல்ல” என்கிறார்  முனைவர் ஆர்.எசு.யாக்கோபு( சேக்கப்)

இன்று நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் வாழும் வாசகர்களே நீங்களும் தேடித்தான் பாருங்களேன்.

அந்தோணி சீவா

ஞானம் – சனவரி 2019(224)  பக்கம் 23