(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

51 / 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

 52 / 69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

  பத்தாவது கட்டுரை பஞ்சதந்திரம் குறித்துக் கூறுகிறது.

பஞ்சதந்திரம்  கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும்; இது ஐந்து பகுதிகளைக் கொண்டது; 72 கதைகளில் 17 மட்டுமே மனிதப் பாத்திரங்களைக் கொண்டவை. பிறவற்றில் பறவைகளும் விலங்குகளும் பூச்சிகளும் பாத்திரங்களாகின்றன. எனினும் அவை மனிதர்களைப்போலவே நடந்து கொள்கின்றன. இது சமற்கிருதத்தில் எழுதப்பெற்ற முதல் நூலன்று. கிரேக்க மொழியிலுள்ள ஈசாப்பு கதைகளைத் தழுவியது

இவ்வாறு அறிமுக உரை தரும் பேரா.ப.ம.நா., இந்த மாதிரியான பொருளடக்கமும் வரலாற்றுப் பின்னணியும் கொண்ட பஞ்ச தந்திரம் போன்றவற்றையெல்லாம் ஒரு மொழியின் செவ்வியல் இலக்கியங்கள் என்று கருதல் இயலாது என்கிறார்.

பதினொன்றாவது கட்டுரை கதாசரித்து சாகரம்

காசுமீரக் கவிஞர் சோமதேவரால் 11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற கதை ஆறுகளின் கடல் என்னும் பொருள் கொண்ட ‘கதா-சரித-சாகரம்’. 22000 சொற்பூக்களை(சுலோகங்களை) உடையது. புத்த சமய சாதகக் கதைகளை மூலமாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டதாக இந்நூலிலேயே குறிப்பு உள்ளது. குணாத்தியா எழுதிய பிருகத்து கதாவே இதன் மூலம் எனச் சோமதேவரே குறிக்கிறார்.சோமேந்திர வியாச தாசர் பிருகத்து கதாவைத் தழுவிய பிருகத்து கதா மஞ்சரி என்னும் நூலை கதா சரித சாகரதம் வரும் முன்னரே எழுதியிருந்தார். எனினும் இவற்றிற்கெல்லாம் மூலம் சமற்கிருத நூலல்ல. பிராகிருதக் கிளைமொழியிலிருந்து சமற்கிருதத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டதே இஃது என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மேற்குறித்த நூலைப்பற்றி இத்தகவல்களை மட்டுமே பேரா.ப.ம.நா.தெரிவிக்கிறார்.

ஆதிசங்கரரும் பத்தி இலக்கியங்களும் குறித்துப் பன்னிரண்டாவது கட்டுரை விளக்குகிறது.  

வடபுலத்து இலக்கணக்காரர்கள் அவர்களுடைய மொழியை ஆராயும் முன்னரே தமிழர்கள் பிற மொழிச்சார்பில்லாத எழுத்துமுறையைக் கொண்டிருந்தார்கள் என்று பருனெல் கூறி நிறுவவும் செய்துள்ளார்.எனவே, சங்கரர் காலத்திற்கு முன்னரே தமிழ் நல்ல வளர்ச்சி பெற்றதாயும் பேரிலக்கியங்களையும் கொண்டதாகவும் இருந்தது; சமற்கிருத நூலுக்கும் தமிழ் நூல் ஒன்றுக்கும் ஒற்றுமை காணும்போதெல்லாம் அகச்சான்றுகள் கொண்டு சமற்கிருத நூலே தமிழ் நூலிலிருந்து கடன் பெற்றிருக்க வேண்டும் என்று முடிவு கட்டுவதில் தவறில்லை என்கிறார் பேரா.ப.ம.நா.

சங்கரர் தமது அத்துவைதத் தத்துவத்தைக் கண்டறிய சமயக்குரவர்களின் பாடல்களை அடிப்படையாகக் கொண்டார் என அறிஞர் எல்லீசு சான்றுகளுடன் கூறுகிறார்

சங்கரரின் அத்துவைதத் தத்துவங்களின் மூலங்கள் தமிழ் நாட்டுப்புறப்பாடல்களில் காணக்கிடக்கின்றன என்றுசார்லசு கோவர் (Charles Gover) கூறுகிறார். “அத்துவைததத் தத்துவத்தின் அடிக்கருத்துகள், திராவிடத் தொல்குடியினருக்கு(ப் பழந்தமிழருக்கு) உரியவை என்பது எல்லாப் பழைய திராவிட இலக்கியங்களின் தன்மையும் அவ்வாறிருப்பதால் உறுதி செய்யப்பெறுகிறது. இத் தொகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பாடல்கள் யாவும் தூய திராவிடத் தன்மையே கொண்டவை அல்லாமல் வேறு தன்மை கொண்டவை என்று ஒருக்காலும் கருத முடியாது. இப்பாடல்கள் எல்லாம் பிராமணச் சார்பற்றவை; பிராமணச் செல்வாக்கிற்கு எதிரானவை.”  என்கிறார்.சங்கரர் காலத்திற்கு முன்னும் பின்னும் எழுதப்பெற்ற தமிழ்ப்பாடல்கள் அத்துவைதத் தத்துவமானது நீண்ட தமிழ் மரபுடையதென்பதையும் சங்கரர் அம்மரபிற்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறார் என்பதையும் கோவர் ஐயத்திற்கிடமின்றி நிறுவியுள்ளார். 

ஆதிசங்கரர் எழுதியதாகக் கருதப்பெறும் செளந்தரிய இலகரியிலும் பழந்தமிழ் இலக்கியங்களின் செல்வாக்கைக் காண இயலும்.

இவ்வாறு சங்கச் சான்றோர் பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், பத்தி இலக்கியப்பாடல்கள் ஆகியவற்றின் அழுத்தமான செல்வாக்கு சங்கரரின் சமற்கிருதப் படைப்புகளிலும் விளக்கவுரைகளிலும் உள்ளது என்பதைப் பேரா.ப.ம.நா. நமக்கு விரிவாகச் சான்றுகளுடன் விளக்குகிறார்.

 (தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 53/69 )