(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07: தொடர்ச்சி)

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 08

வீட்டிலும் ஏட்டிலும் தமிழைத் தொலைக்கும் நாம்

    எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என்பது நடைமுறையில் இருக்க வேண்டும். அதற்குத், “தமிழை என்றும் உளதாகச் செய்வதற்கு அதனை மக்களுக்குப் பயன்படும் மொழியாக ஆக்குதல் வேண்டும். பயன்படு மொழியாகுங்கால் வீட்டிலும், ஊரிலும், நகரத்திலும், நாட்டிலும், உலகத்திலும் அதனை விரும்பிக் கற்குமாறு செய்தல் வேண்டும்”. என்கிறார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 284). ஆனால், இன்றைய நிலை என்ன? “தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை” என எத்தனைப் பாவேந்தர்கள் அவலக்குரல் எழுப்பினாலும் மாற்றிக் கொள்ளாத மாந்தர்களாக நாம் இருக்கின்றோம். வீட்டிலும் ஏட்டிலும் தமிழைத் தொலைக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?

இலக்கணத்தை அழித்து வருகின்றனரே!

  ஆற்றுக்குக்கரை போல் இலக்கியத்திற்கு இலக்கணம் தேவை. ஆனால், இன்றைக்கு இலக்கணத்தை அழித்து இலக்கியத்தையும் அழித்து வருகின்றனர்.

  “இன்று தமிழ் நாட்டில் எழுத்தாளர்களும் புலவர்களும் பெருகி வருகின்றனர். மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் எனத் தம்மை அழைத்துக்கொண்டு சிலர் கட்டுரைகள் எழுதுகின்றனர்; பாடல்கள் இயற்றுகின்றனர். அவர்கள் தமிழிலக்கண மரபை அறியாமலும தமிழிலக்கிய மரபைப் புறக்கணித்தும் கருத்துச் செறிவின்றி நடையழகு இன்றி எழுதிக் குவிக்க முற்படுகின்றனர்.   முன்னோர் எழுதிய இலக்கண இலக்கியங்களைக் கற்றாலன்றி நடையழகும் பொருட் செறிவும் பெறுதல் இயலாது.”(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 282) என்கின்றார் இலக்கணச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார். காலந்தோறும் இயல்பாக இலக்கண மரபில் மாற்றம் ஏற்படுவது இயற்கை. ஆனால், இலக்கணமே தேவையில்லை எனத் தப்பும் தவறுமாக எழுதிக் கொண்டு அதனையே புது இலக்கியமாகக் கூறிவருவோர் பெருகி வருகின்றனர்.

  இலக்கணங்கள் ஒலி வடிவ எழுத்துகளில் உரு வடிவங்கள் குறித்தும் கூறியுள்ளன. “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என்கிறது நன்னூல். அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வந்த இலக்கண விளக்கமும் இவ்வாறே கூறுகின்றது. ஆனால், தமிழ் வரிவத்தைச் சிதைப்பதையே நோக்கமாகக் கொண்டு சிலர் வாழ்ந்து வருகின்றனர். உரோமன் எழுத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தேவாரம் படிப்பதற்கேற்ப வரிவடிவம் அமைய வேண்டும் என்று புதுப்புது வரிவடிவங்களைக் கற்பித்தும் கிரந்த எழுத்துகளுக்கு வாழ்வு தந்து கொண்டும் உள்ளனர். தமிழின் வாழ்விற்குத் தடையாக உள்ளவர்கள் தளர்ச்சியின்றி வாழ்கையில் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?

தலைநகரின் பெயரைத் தமிழில் குறிப்பிடாமல் துணிவு உள்ளவர்கள் உளரே!

  தமிழ்நாட்டின் தலைநகரின் பெயரைத் தமிழில் சென்னை என அழைக்க 1996இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணை பிறப்பிக்கவே 50 ஆண்டுகள் ஆகி விட்டன. எனினும் இன்னும் பலர் சென்னை என்றே அழைப்பதில்லை. பல்கலைக்கழகம், உயர்நீதிமன்றம், மருத்துவமனை முதலான அரசு நிறுவனங்களை அல்லது அரசின் துறைகளைக் கூட நம்மால் சென்னை எனக் குறிப்பிட இயலவில்லை.   பிற நாடுகள் அல்லது நகரங்கள் பெயர் மாற்றம் நடக்கும் பொழுது உடனே அவை நடைமுறைக்கு வந்துவிடுகின்றன. ஆனால், தமிழர்கள் பிற நாட்டின் பெயர்கள் மாறின எனில் அவ்வாறே புதிய பெயரில் அழைப்பர். பம்பாய் மும்பை என மாறியதும் மும்பை என்று அழைக்கும் நம்மவர்களே சென்னையைச் சென்னை என்று அழைப்பதில்லை. மெட்ராசு என்று திரைப்படமும் வந்துள்ளது. தமிழ்ப்பெயர் சூட்டிய படங்கள் இப்பொழுது வருகின்றன. பெரும்பாலும் அவை நல்ல படங்களாகவே இருக்கின்றன. தமிழ்ப் பெயர் சூட்டிய படங்கள், தமிழ்ப் பண்பாட்டை எதிரொலிக்கும் படங்கள் நன்றாக இல்லாவிட்டாலும்கூட நாம் பார்த்து ஊக்கப்படுத்த வேண்டும். அதே நேரம் தமிழில் இல்லாப் பெயர் தாங்கி வரும் படங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும். அரசாணையையும் மீறி நம் தலைநகரின் பெயரைத் தமிழில் குறிப்பிடாமல் இருக்கும் துணிவு உள்ளவர்கள் இருக்கும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்கையில் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?

நீதி மன்றங்களில் தமிழ், தமிழர் நலன் புறக்கணிப்பு

  ஒன்றிய அரசில் தமிழ்நாடும் உள்ளது எனில் தமிழ்மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. நீதிமன்றங்களும் மண்ணின் மக்களான தமிழர்களின் உணர்வை மதித்துத்தான் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால், நடப்பதென்ன? உயர் நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க ஒன்றிய அரசு தடை. தமிழர்கள் தமிழர்களுக்காகக் கட்டிய தமிழ்க்கடவுள்களின் கோயில்களில் தமிழ்வழிபாட்டிற்கு உள்ள தடையை நீக்க ஒன்றிய அரசு முயல்வது இல்லை. ஒருவேளை உச்ச நீதிமன்றம் சொன்னாலும் ஒன்றிய அரசு அதற்கு முட்டுக்கட்டை போடும். தமிழ்க்கல்வி, தமிழ் வழிபாடு, தமிழ்ப்பூசாரி எனத் தமிழ் நலம் சார்ந்த தமிழ்நாட்டரசின் ஆணை எதுவாக இருந்தாலும் அதனைத் தடுப்பதையே கடமையாகக் கொண்ட நீதிபதிகளும் உள்ளனர். மக்களுக்காகத்தான் நீதி என்பதை மறந்து இல்லாத – தமிழர்க்கு உரியது அல்லாத – சடங்கு, சாத்திரங்களின் அடிப்படையில் நீதிமன்றம் தயக்கமின்றி தமிழறத்தை அழிக்கப் பார்க்கின்றனர்.