கலைச்சொல் தெளிவோம் 34 : துயின்மை – hibernation
34 : துயின்மை-hibernation
இன்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர்க் (பெரும்பாணாற்றுப்படை : 440)
இன்றுயில் வதியுநற் காணா டுயருழந்து (முல்லைப் பாட்டு : 80)
கம்புட் சேவல் இன்றுயில் இரிய (மதுரைக்காஞ்சி : 254)
வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும் (குறிஞ்சிப்பாட்டு: 242)
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின் (நற்றிணை : 87.2)
இவைபோல் சங்க இலக்கியங்களில் 62 இடங்களில் துயில் என்னும் சொல்லும் 31 இடங்களில் துயில் என்பதன் அடிப்படையிலான சொல்லும் பயின்றுள்ளன. அவற்றுள் ஒன்று துயின்று என வரும் பின்வரும் அடியாகும்.
நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்துயின்று (புறநானூறு 159.4)
துயிலின் அடிப்படையில் துயின்று வந்துள்ளது போல் ‘துயின்மை’ என நாம் புதுச்சொல் உருவாக்கலாம்.
சில உயிரினங்கள் குளிர் காலத்தில் இயங்காமல் தூக்க நிலையிலேயே இருக்கும். இந்நிலையைத் துயின்மை என்பது சரியாக இருக்கும்.
துயின்மை-hibernation
துயிற்சி-hibernate
– இலக்குவனார் திருவள்ளுவன்
ஐயா! ‘கலைச்சொல்’ உருவாக்குகிறேன் பேர்வழி எனும் பெயரில் பலரும் பிழையான சொற்களைப் புதுக்கி வருவது பற்றி எனக்குக் கூறியவரே தாங்கள்தான். ‘தமிழ்மணி’யில் மட்டுமில்லை, முகநூலில், வலைப்பூக்களில், தொலைக்காட்சிகளில் எனப் பல இடங்களிலும் இத்தகைய ஆர்வக் கோளாறுகளின் தொல்லை தாள முடியவில்லை. இப்படிப்பட்ட நிலைமையில் தாங்கள் இந்தப் பகுதியைத் தொடங்கியிருப்பது தமிழ் கூறும் நல்லுலகிற்குச் சிறந்த ஒரு தொண்டு! பழந்தமிழ் நூல்களிலிருந்து வேர்ச்சொற்களை எடுத்து முறையாகப் புதுச்சொல் உருவாக்கும் நுட்பத்தைத், ‘முறையாகக் கலைச்சொல் உருவாக்கும்’ முறைமையைத் தாங்கள் இதன் மூலம் தெளிவுபடுத்தத் தொடங்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி ஐயா!
ஐயா
தங்களைப்போல் தமிழுக்குத் தொண்டாற்றுவர்களக் காணும்போது என் போன்று தமிழில் புலமையற்ற, தமிழ் மீது ஆர்வம் கொண்ட அனைவர்க்கும் தமிழ் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.