( தமிழ்ச்சொல்லாக்கம் 639- 647தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 648-653

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

648. வசனம் – உரை நடை

ரசவாதிகள் – பொன் செய்வோர்

649. காபிரைட் – உரிமை

நூல்   :           மதிமோச விளக்கம் (1929) நான்காம் பதிப்பு

நூலாசிரியர்         :           தூசி. இரா ச கோபால பூபதி பக்கம் : 4 நான்காம் பதிப்பின் முன்னுரை

எழுதியவர் :           நா. முனிசாமி முதலியார் –

(ஆனந்த போதினி பத்திராதிபர்)

650. அமிர்தம் – சாவா மருந்து

651. சரிகை – பொன் நூல்

நூல்   :           நளாயினி வெண்பா (1929), பக். 4, 28

நூலாசிரியர்         :           திருப்பத்தூர் சா. அ. சண்முக முதலியார்

652. Blotting Paper – ஒட்டுத்தாள்

குதிரைப் பந்தயத்தில் பணங்கட்டி, தோல்வியடைந்து, கையில் வண்டிச் சத்தமும் இன்றி நடந்து வீடு நோக்கி வரும்போது தோற்றுப்போன பெருந் தொகையை எண்ணி எண்ணி கண்ணீர்விடும் உத்தமர்களின் கண்ணீரை (பிளாட்டிங் பேபரால் ) ஒட்டுத்தாளால் துடைக்க ஓர் ஆள் தேவை. அந்த ஆளுக்குக் குதிரைப் பந்தயத்தார் சம்பளந் தருவார்கள். விருப்பமானவர்கள் பந்தயக் குதிரையின் மூலம் மனு கொடுத்துக் கொள்ளவும்.

இதழ் :           ஆனந்த வி ச ய விகடன் (1928, ஏப்பிரல்) தாய் – 1 பிள்ளை – 3 – பாக்கட் விகடங்கள் – பக்கம் – 93

ஆசிரியர்    :           விகடகவி பூதூர், வைத்திய நாதையர்

653. கிருட்ணன் – கறுப்பன்

இவர்கள் இராமாயணத்தைப் பற்றி எடுத்துக் கூறும் கதையைக் குருடன் கனா என்று கூறலாம். அவர்கள் கதை கீழ்வருமாறெல்லாம் போகிறது.

இராமாயணம் தமிழ்க்கதை ; தமிழன் கதை. அக்கதை திராவிடர் இந்தியாவிற்கு வந்த கதையே. குரங்குகள் எனப்படுவோர், தமிழர்க்கு முன் இந்நாட்டில் வாழ்ந்த குடிகள். இராமன் திராவிடன், தமிழன். அவன் பெயரும் தனித் தமிழ். இராமன் என்பதில் இரா என்பது இரவு, இரும்பு, இருந்தை, இரு, இருமண் முதலியவற்றைப் போலக் கருமை என்பதைக் குறிப்பதாகும். மன் என்பது ஆண்பால் விகுதி. ஆகவே, இராமன் என்ற சொல், கருநிறமுடைய பெருமானைக் குறிக்கின்றது. இராமனது நிறமும் தமிழர் நிறமன்றோ? தாசுயுக்கள் என்ற திராவிட மக்களின் தலைவனைக் கறுப்பன் (கிருட்ணன்) என்ற பெயர் கொண்டழைத்து அவன் ஆரியர்களை ஆட்டி வைத்த கொடுமையை எடுத்துக் கூறுகின்றது ரிக்வேதம். ஆகவே கண்ணன் இராமன் என்பன தமிழ்க்கடவுளின் பெயர்கள், தமிழ்த்தலைவரின் பெயர்கள். அன்றியும், திருமால் தமிழ்க்கடவுள் அன்றோ? முல்லை நிலத்தில் வாழ்ந்த தமிழ்மக்கள் அவரைத்தானே வழிபட்டு வந்தனர்.

நூல்   :           சுயமரியாதை கண்டன திரட்டு (1929) பக்கம் – 6

கட்டுரையாளர்    :           தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, எம்.ஏ., பி.எல். எம். எல். சி.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்