(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 84 : சண்டிலி வருகை – தொடர்ச்சி)

          தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்;  

          முடியும் நடுவும் முகிலினம் படர்தரக்     110

          கொடிபடர் சந்தனக் கடிமணம் அளாவிச்

சில்லெனுந் தென்றல் மெல்லென வீச

நல்லிளஞ் சாரல் நயந்திடத் துளிப்ப

அலரும் மலரும் அடருங் கடறும்   

          பலவும் குலவி நிலவும் மாமலைக்

          காட்சியும் மாட்சியும், கடும்புனல் அருவியின்

வீழ்ச்சியும் கண்டவை வாழ்த்தினென் வாழ்த்தினென்

தென்மலைச் சிறப்பினைச் செப்புதல் எளிதோ?

கன்மலைக் காப்பியம் யாத்திட முனையின  

          பொதியம் ஒன்றே போதும் தோழி!          120

—————————————————————

          நந்தலில் – அழிவில்லாத, அந்தம் – அழகு, சேணுயர் – மிக உயர்ந்த, முகில் – மேகம், நீலப்பெருமலை – நீலமலை, திருமலை – திருப்பதி, முதுமலை – கோடைக்கானல், அடரும் – நெருங்கும், கடறு – காடு, யாத்திட – இயற்றிட.

++++

          போர்ப்பறை சாற்றிடும் ஆர்ப்பொலி என்ன

வேர்க்குலம் பேர்த்து வீறுற் றார்த்துக்

கல்பொரு திறங்கும் மல்லலம் அருவிகள்

நல்லன பலவும் நயந்தினி தாடினேன்;   

          கண்டார் வியந்திடக் கைபுனைந் தியற்றிய    125

          தண்டாது பாயும் தண்புலி யருவியில்

கொண்டான் தன்னொடுங் கூடி யாடினேன்;  

          பொங்குமா கடலெனப் பொங்கிட வீழ்ந்து

தங்கா திழிதரும் விரிபே ரருவியில்        

          கங்குலும் பகலும் கணவனும் யானும்     130

          ஆடியும் ஓடியும் ஆர்த்தும் நகைத்தும்

பாடியும் கூடியும் பன்முறை ஆடினோம்;         

          தண்முகை அவிழும் சண்பக அடவி

எண்ணரும் மலர்களை இறைத்திட வாரித்     

          தடதட ஒலியொடு தாவி இறங்கிப் 135

          படர்தரு சண்பக அருவிப் பாங்கரில்

நின்றும் இருந்தும் நிலவிய இன்பில்

ஒன்றிய உளத்தேம் உலகினை மறந்தோம்;    

(தொடரும்)