(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (11) –  தொடர்ச்சி)

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

(12)

3.ஒருமைப்பாட்டு உணர்வுதொடர்ச்சி

  அடிமையில் மோகமும், அடிமைத்தனமும் ஒழிக்கப் படவேண்டும். அதற்கு மக்கள் விழிப்பும் எழுச்சியும் பெற்றாக வேண்டும். கொடுமைகள் நீக்கிக் கொள்கைகள் காத்து பெரிய முன்னேற்றம் ஆக்கி, விந்தைகள் நிலைக்கச் செய்து, வெற்றி மேல் வெற்றி சேர்த்து, தந்தையர் நாட்டை ஏற்றம்தனில் நிலை நாட்டி வைப்போம் என்று முழக்கமிடுகிறார் பெருங்கவிக்கோ. பாரினில் பாரதம் மேன்மை பெற்று விளங்க நாட்டில் உற்பத்தி பெருக வேண்டும்; ஓங்கிடும் நலங்கள் எல்லாம் விற்படு குறியைப் போல மேலோங்க வேண்டும்! வேண்டும்!

அற்புதம் இந்தியர்கள்

அரும்திற உழைப்பென்றேதான்

பற்பல நாடும் போற்றும்

பாய்புகழ் பெருக வேண்டும்

என்று அவர் ஆசை வளர்க்கிறார். அவரது கனவுகள் மேலும் பெருகுகின்றன. –

தன்னிறைவாக நம்மின்

 தாய்நாட்டு மக்களெல்லாம்

பன்னலம் அடையவேண்டும்!

பாரெலாம் நம் பொருட்கள்

 நன்னலப் பவனி வந்து

 நலம்தர வேண்டும்! எங்கும்

இன்னல்கள் இல்லா வாழ்க்கை

இலங்கிடச் செய்ய வேண்டும்!

தனி மனிதர் வாழ்விலும் சரி, நாட்டின் நிலைமையிலும் சரியே, வளமும் நலமும் பெருகுவதற்கு எல்லாரும் உழைத்தாக வேண்டும். இது தவிர்க்க முடியாத விதியே ஆகும். இதைக் கவிஞர் ஒவ்வொரு கட்டத்திலும் அழுத்த மாக எடுத்துக் கூறுகிறார்.

 இல்லாமை ஒழிய வேண்டும்

எல்லாரும் உழைக்க வேண்டும்

 நல்லாறாம் ஈதொன்றைத்தான்

 நாமென்றும் ஏற்கவேண்டும்!

வல்லமை சொல்லில் அல்ல,

 வற்றாத செயலில் காட்டி

வெல்லவே வேண்டும் நம்மின்

வேதனை மாற்ற வேண்டும்’

என்று அவர் அறிவுறுத்துகிறார்.

(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்