(ஊரும் பேரும் – முகவுரையும் நன்றியுரையும் தொடர்ச்சி)

ஊரும் பேரும்

1. தமிழகமும்‌ நிலமும்‌

தமிழகம்

பழம்‌ பெருமை வாயந்த பாரதநாட்டின்‌ தென்பால்‌ விளங்குவது தமிழ்நாடு. சேர சோழ பாண்டியர்‌ என்னும்‌ மூவேந்தரால்‌ தமிழகம்‌ தொன்றுதொட்டு ஆளப்பட்ட தென்பர்‌. பொதுவுற தமிழகம்‌ நோக்கும்பொழுது பழந்‌ தமிழகத்தில்‌ மேல்நாடு சேரனுக்கும்‌, கீழ்நாடு சோழனுக்கும்‌, தென்னாடு பாண்டியனுக்கும்‌ உரியன வாயிருந்தன என்பது புலனாகும்‌. இங்ஙனம்‌ மூன்று கவடாய்‌ முளைத்தெழுந்த தமிழகம்‌ மூவேந்தரது ஆட்சியில்‌ தழைத்தோங்கி வளர்ந்தது.*1

நால்‌ வகைப்பட்ட நிலங்கள்‌. தமிழகத்தில்‌ அமைந்‌திருக்கக்‌ கண்டனர்‌ பண்டைத்‌ தமிழர்‌.*2 மலையும்‌மலைசார்ந்த இடமும்‌ ஒரு வகை. காடும்‌, காடு சார்ந்த இடமும்‌ மற்றொரு வகை. வயலும்‌, வயல்‌ சார்ந்த இடமும்‌ பிறிதொரு வகை. கடலும்‌, கடல்‌ சார்ந்த இடமும்‌ நிலவகை இன்னொரு – வகை. இந்‌ நான்கும்‌ முறையே, குறிஞ்சி, முல்லை, மருதம்‌, நெய்தல்‌ என்னும்‌ பெயர்களாற்‌ குறிக்கப்‌ பட்டன. நால்வகை நிலங்களையுடைய காரணத்தால்‌, நானிலம்‌ என்ற பெயர்‌ பூமிக்கு அமைவதாயிற்று.*3 ஆயினும்‌ பிற்காலத்தில்‌ பாலையும்‌ ஒரு தனி நிலமாகக்‌ கொள்ளப்‌ பட்டது.

குறிஞ்சி நிலம்‌

மலை

தமிழ்‌ நாட்டில்‌ வளமார்ந்த மலைகள்‌ பலவுண்டு. அவற்றைச்‌ சார்ந்து எழுந்த ஊர்களிற்‌ சிலவற்றை ஆராய்வோம்‌: தமிழகத்தின்‌ வடக்கெல்லையாக விளங்குவது ” திருவேங்கட மலை. தொல்காப்பியர்‌ காலத்தில்‌ வாழ்ந்த  தமிழ்ப்‌ புலவர்‌ ஒருவர்‌;

“வடவேங்கடம்‌ தென்குமரி

ஆயிடைத்‌

தமிழ்கூறு நல்லுலகத்து”*4

என்று தமிழ்நாட்டின்‌ எல்லைகளை வரையறை செய்‌துள்ளார்‌. இவ்வாறு வட சொற்கும்‌, தென்‌ சொற்கும்‌வரம்பாக நின்றமையால்‌, தமிழ்‌ நாட்டார்‌, அம்‌ மலையை வடமலை என்று வழங்கலாயினர்‌.*5 தொன்று தொட்டுத்‌ ‘தெய்வமணம்‌ கமழ்தலால்‌, அது திருமலை என்றும்‌, திருப்பதி என்றும்‌ பெயர்‌ பெற்றது. *6

பாண்டி நாட்டின்‌ தலைநகராகிய மதுரையின்‌ அருகே ஆனை மலையும்‌ சிறு மலையும்‌ பசுமலையும்‌ அமைந்திருக்‌ கின்றன.ஆனை மலையில்‌ முற்காலத்தில்‌ சமண முனிவர்கள்‌ பெருந்‌ தொகையினராய்‌ வாழ்ந்தார்கள்‌. இக்‌காலத்தில்‌ இனிய வாழைக்‌ கனி தரும்‌ சிறுமலையும்‌ பழம்‌ பெருமை வாய்ந்த தாகும்‌. அம்‌ மலையின்‌ செழுமையைச்‌ சிலப்பதிகாரம்‌ அழகுற எழுதிக்‌ காட்டுகின்றது.* 7

சென்னைக்கு அருகேயுள்ள மலையொன்று பரங்கிமலை என்று பெயர்‌ பெற்றுள்ளது. இருநூறு ஆண்டு களுக்கு முன்னே, பரங்கியர்‌ என்னும்‌ போர்ச்சுகீசியர்‌ அங்கே குடியிருப்புக்‌ கொண்டமையால்‌ அப்பெயர்‌ அதற்கு அமைந்ததென்பர்‌.*8  திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில்‌ புதியதொரு நகரம்‌ இக்‌ காலத்தில்‌ எழுந்துள்ளது. அதற்குப்‌ பொன்மலை என்பது பெயர்‌.

தமிழகத்தில்‌ முருகவேள்‌, குறிஞ்சி நிலத்‌ தெய்வமாக விளங்குகிறார்‌. எந்த மலையும்‌ அவர்தம்‌ சொந்த மலையென்பது தமிழ்‌ நாட்டார்‌ கொள்கை.*9 ஆயினும்‌, சில மலைகளில்‌ முருகனருள்‌ சிறந்து தோன்றுவதாகும்‌. பாண்டி நாட்டுப்‌ பழனி மலையும்‌, சோழ நாட்டுச்‌ சுவாமி மலையும்‌, தொண்டை நாட்டுத்‌ தணிகை மலையும்‌, இவை போன்ற பிற மலைகளும்‌ தமிழ்‌ நாட்டில்‌ முருகப்‌ பதிகளாக விளங்குகின்றன.

கோடு

மலையின்‌ முடியைக்‌ கோடு என்னும்‌ சொல்‌ குறிப்பதாகும்‌. சேலம்‌ நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது.

சீர்கெழு செந்திலும்‌ செங்கோடும்‌ வெண்குன்‌ றும்‌

ஏரகமும்‌ நீங்கா இறைவன்‌”

என்று சிலப்பதிகாரம்‌ கூறுதலால்‌ திருச்செங்கோடு முருகனுக்குரிய பழம்‌ பதிகளுள்‌ ஒன்றென்பது இனிது விளங்கும்‌. செந்நிறம்‌ வாய்ந்த மலையின்‌ சிகரம்‌ செங்கோடு என்று பெயர்‌ பெற்ற தென்பர்‌.

தமிழ்‌ இலக்கிய மர பில்‌, மலை என்னும்‌ சொல்‌, ஓங்கி உயர்ந்த பருவதத்தைக்‌ குறிக்கும்‌. மலையிற்‌ குறைந்தது  குன்று என்றும்‌, குன்றிலும்‌ குறைந்தது பாறை என்றும்‌, அறை என்றும்‌, கல்‌ என்றும்‌ பெயர்‌ பெறும்‌.*10

குன்று

குன்றின்‌ பெயர்‌ கொண்ட ஊர்கள்‌ தமிழ்நாட்டிற்‌ சில உண்டு. பாண்டி நாட்டுத்‌ திருப்பரங்குன்றமும்‌*11 தொண்டை நாட்டுத்‌ திருக்கழுக்குன்றமும்‌ பாடல்‌ பெற்ற மலைப்‌ பதிகளாகும்‌. ஆர்க்காட்டு நாட்டில்‌ குன்றம்‌ என்பது குணம்‌ என மருவி வழங்கும்‌. குன்று நெற்குன்றம்‌, நெடுங்குன்றம்‌, பூங் குன்றம்‌ என்னும்‌ பெயர்கள்‌ முறையே நெற்குணம்‌, நெடுங்குணம்‌, பூங்குணம்‌ என மருவி உள்ளன.*12

குன்றை அடுத்துள்ள ஊர்‌ குன்றூர்‌ என்றும்‌, குன்றத்தூர்‌ என்றும்‌, குன்றக்குடி என்றும்‌ பெயர்‌ பெறும்‌. அப்‌ பெயர்களிலுள்ள குன்றம்‌ பெரும்பாலும்‌ குன்னம்‌ என மருவி வழங்கும்‌.*13 நீலகிரி என்னும்‌ மலையில்‌ இப்பொழுது குன்னூர்‌ என வழங்குவது குன்றூரேயாகும்‌. இன்னும்‌, தொண்டை நாட்டுக்‌ குன்றத்தூரும்‌, பாண்டி நாட்டுக்‌ குன்றக்குடியும்‌ இப்போது முறையே குன்னத்தூர்‌ என்றும்‌, குன்னக்குடி என்றும்‌ குறிக்கப்படுகின்றன.

பாறை

பாறை என்னும்‌ பதம்‌ பல ஊர்ப்‌ பெயர்களிலே காணப்படும்‌. பூம்பாறை, சிப்பிப்பாறை, தட்டைப்பாறை, குட்டைப்பாறை முதலிய பெயருடைய ஊர்கள்‌ தமிழ்‌ நாட்டில்‌ உள்ளன.

அறை

வைணவ உலகம்‌ போற்றும்‌ நூற்றெட்டுத்‌ திருப்பதிகளுள்‌ ஒன்று திருவெள்ளறை என்பது. பெரியாழ்வாரும்‌, திருமங்கையாழ்வாரும்‌ பாடிப்‌ போற்றிய  அப்‌ பழம்பதி ஒரு வெண்மையான பாறையின்மீது அமர்ந்திருக்கின்றது. அது சுவேதகிரி என்று வடமொழியில்‌ வழங்கும்‌. எனவே, வெண்பாறையின்‌ பெயரே அப்பதியின்‌ பெயராயிற்று என்பது தெளிவாகும்‌.*14

கல்

இனி, கல்‌ என்னும்‌ சொல்லும்‌ சில ஊர்ப்பெயர்களில்‌ உண்டு. பாண்டி நாட்டில்‌ திண்டுக்கல்‌ என்பது ஓர்‌ ஊரின்‌ பெயர்‌. அவ்வூரின்‌ மேல்‌ பக்கத்திலுள்ள பாறையின்‌ பெயரே ஊருக்கு அமைந்ததாகத்‌ தெரிகின்றது.*15 அது முன்னாளில்‌ சிறந்ததோர்‌ அரணாக ‌ விளங்கிற்று. பாண்டி நாட்டுக்கும்‌, கொங்கு நாட்டுக்கும்‌ இடையேயுள்ள கணவாய்களைப்‌ பாதுகாப்பதற்குத்‌ திண்டுக்கல்‌ கோட்டை ‘ பெரிதும்‌ பயன்பட்டதாகத்‌ தெரிகின்றது. சேலம்‌ நாட்டில்‌ நாமக்கல்‌ என்ற ஊர்‌ உள்ளது. ஆரைக்கல்‌ என்பது அதன்‌ பழம்‌ பெயராகும்‌. ஆரை என்ற சொல்‌ கோட்டையின்‌ மதிலைக்‌ குறிக்கும்‌. ஆதலால்‌, அவ்வூரிலுள்ள பாறையின்‌ மீது முற்காலத்தில்‌  ஒரு கோட்டை இருந்தது எனக் கொள்ளலாம்‌.*16

கிரி , அசலம்‌

மலையைக்‌ குறிக்கும்‌ வட  சொற்களும்‌ சிறு பான்மையாக ஊர்ப்‌ பெயர்களிலே காணப்படும்‌. கிரி என்னும்‌ செரல்‌ சிவகிரி, புவனகிரி முதலிய ஊர்ப்‌ பெயர்களிலே அமைந்துள்ளது. அசலம்‌‌ என்ற. வடசொல்‌ விருத்தாசலம்‌, வேதாசலம்‌, வேங்கடாசலம்‌, தணிகாசலம்‌ முதலிய ‌ பெயர்களில்‌ வழங்கும்‌.*17 இன்னும்‌ சைலம்‌, அத்திரி என்னும்‌ வடசொற்களையும்‌ இரண்டோர்‌ ஊர்ப்பெயர்களிலே காணலாம்‌.

சைலம்‌, அத்திரி

நெல்லை நாட்டில்‌ பொதிய மலைத்‌ தொடரின்‌ அடிவாரத்திலுள்ள சின்னஞ்‌ சிறிய ஊர்‌ ஒன்று, சிவசைலம்‌ என்று பெயர்‌ பெற்றுள்ளது. வானமாமலை என்னும்‌ நாங்குனேரிக்குத்‌ தோத்தாத்திரி என்ற வடமொழிப்‌ பெயரும்‌ உண்டு.

குறிச்சி

முன்னாளில்‌ குநிஞ்சி நிலத்தில்‌ வாழ்ந்த மக்கள்‌ குறவர்‌ என்று பெயர்‌ பெற்றனர்‌. அன்னார்‌ குடியிருந்த இடம்‌ குறிச்சி என்று குறிக்கப்பட்டது. ‘குறிச்சி எங்கள்‌ குறச்சாதி குடியிருப்ப தம்மே*18” என்று ஒரு குறவஞ்சி கூறுமாற்றால்‌ இவ்வுண்மை இனிது விளங்கும்‌. பொதிய மலைத்‌ தொடரின்‌ அடிவாரத்தில்‌ குறிச்சி என்ற பெயருடைய ஊர்கள்‌ பல உண்டு. ஆழ்வார்‌ குறிச்சி முதலாகப்‌ பல குறிச்சிப்‌ பெயர்களைத்‌ தொகுத்து வழங்கும்‌ முறையும்‌ நெல்லை நாட்டில்‌ உள்ளது. ஆதியில்‌ குறிச்சி என்பது குறவர்‌ குடியிருப்பைக்‌ குறித்ததாயினும்‌, பிற்காலத்தில்‌ மற்றைய குலத்தார்‌ வாழும்‌ சிற்றூர்களும்‌ அப்பெயர்‌ பெற்றன.

ஆர்க்காட்டு வட்டத்தில்‌ , கள்ளக்குறிச்சி என்பது ஓர்‌ ஊரின்‌ பெயர்‌. இராமநாதபுரத்தில்‌ பிராமணக்‌ குறிச்சி என்னும்‌ ஊர்‌ உள்ளது.

ஊரும் பேரும்

இரா.பி.சேது(ப்பிள்ளை)

(தொடரும்)

உடுக்குறி விளக்கங்கள்

1. குடபுலம்‌, குணபுலம்‌, தென்புலம்‌ என்பன முறையே சேர  சோழ பாண்டியர்‌ நாடுகளைக்‌ . குறித்தலைச்‌ சிறுபாணாற்றுப்‌ படையிற் காண்க.

2. தொல்காப்பியம்‌, பொருள்‌, அகம்‌ 5.

3. “நளன்‌ என்பான்‌ மேனிலத்தும்‌ நானிலத்தும்‌ மிக்கான்‌” – நளவெண்பா. 

4. பனம்பாரனார்‌ இயற்றிய சிறப்புப்‌ பாயிரம்.

5.’ “வட சொற்கும்‌ தென்‌ சொற்கும்‌ வரம்பாகி……….. உடை சுற்றும்‌ தண்சாரல்‌ ஓங்கிய வேங்கடத்தில்‌” – கம்பராமாயணம்‌, கிட்கிந்தா காண்டம்‌, நாடவிட்ட படலம்‌, 26.

6. “செம்மையைக்‌ கருமை தன்னைத்‌ திருமலையொருமை யானை” – – திருமங்கையாழ்வார்‌, திருக்குறுந்தாண்டகம்‌.7.

7. “வாழையும்‌ கமுகும்‌, தாழ்குலைத்‌ தெங்கும்‌, மாவும்‌ பலாவும்‌ சூழடுத்தோங்கிய தென்னவன்‌ சிறுமலை திகழ்ந்து தோன்றும்‌” – சிலப்பதிகாரம்‌, காடுகாண்‌ காதை, 83- 85.

8. சென்னை மாகாணப் பணியாண்மைக் கையேடு தொகுதி, 3, 718 /M.M.Vol.III.P. 718.

9. “சேயோன்‌ மேய மைவரை உலகம்‌” என்னும்‌ தொல்காப்பியத்தாலும்‌, “குன்றுதோறாடலும்‌ நின்றதன்பண்பே” என்னும்‌ திரு முருகாற்றுப்படையாலும்‌ இக்கொள்கை விளங்கும்‌.

10. “அறையே பாறை” – பிங்கல நிகண்டு.