குறள் கடலில் சில துளிகள் . 26. விருப்பத்தைப் பகைவர் அறியப் புலப்படுத்தாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் . 25. உன்னையே வியந்து கொள்ளாதே! – தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள்
26. விருப்பத்தைப் பகைவர் அறியப் புலப்படுத்தாதே!
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:குற்றங்கடிதல் குறள் எண்: ௪௱௪௰ – 440)
பதவுரை: காதல-காதலித்த பொருள்கள்; விரும்புகின்ற பொருள்கள்; காதல்-விருப்பம்; அறியாமை-தெரியாமல்; உய்க்கிற்பின்-செலுத்த வல்லனாயின்.
பொழிப்பு:
தன்விருப்பம் வெளிவராவாறு அடக்கி வாழ்ந்தால், பகைப்பார் தோற்பார் (பேரா.வெ.அரங்கராசன்).
தனக்கு விருப்பமானவற்றைப் பிறர் அறியாதபடி அடக்கி வைத்திருப்பவனிடம் பகைவரின் வஞ்சகச் செயல்கள் பலிக்காது.
மணக்குடவர் உரை: காதலிக்கப்பட்ட யாவற்றின் மேலுஞ் செல்லுங் காதலைப் பிறரறியாமற் செலுத்துவனாயின் பகைவர் இவனைக் கொல்லுமாறு சிந்திக்கும் சிந்தனை இவன் மாட்டுச் செல்லாது, அயலாம். நூலென்பது அவர் கற்ற கல்வி.
பரிமேலழகர் உரை: காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் – தான் காதலித்த பொருள்களை அவர் அக்காதல் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின், ஏதிலார் நூல் ஏதில் – பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம். (அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பர் ஆகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம், வெகுளி, உவகை என்பன முற்றக்கடியும் குற்றம் அன்மையின், இதனான் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.)
மு. கருணாநிதி உரை: தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும் (௪௱௪௰)
இரா சாரங்கபாணி உரை: தாம் விரும்பும் பொருள்களின் மேலுள்ள விருப்பத்தைப் பிறர் அறிய முடியாதவாறு மனத்தை அடக்கிச் செலுத்துவானாயின், பகை வந்து அவனை வஞ்சிக்க நினைக்கும் எண்ணம் பழுதுபடும்.
“காதல என்ற சொல்லுக்கு விரும்பினவற்றை என்பது பொருள்.
காதல் என்பது விருப்பம் என்ற பொருள் தரும்.
அறியாமை என்ற சொல் அறியாவண்ணம் என்று பொருள்படும்.
உய்க்கிற்பின் என்பதற்கு செலுத்த வல்லராயின் என்பது பொருள்.
ஏதில என்பது பயனற்றது என்னும் பொருள் கொடுக்கும்.
ஏதிலர் என்ற சொல்லுக்குப் அயலர் அல்லது பகைவர் என்பது பொருள்.
நூல் என்ற சொல்லுக்கு இங்கு சிந்தனை அல்லது சூழ்ச்சி எனக் கொள்வர்.” (குறள்.திறன்)
ஒருவருக்கு ஒரு பொருளின்மேல் அல்லது உணவின் மேல் அல்லது இடத்தின்மேல் அல்லது ஆளின் மேல் விருப்பம் இருப்பின் அதனைப் பிறரறியச் செய்தால் அவ்விருப்பத்தை நுகரும் பொழுது உணவில் நஞ்சு கலந்தோ குறிப்பிட்ட பொருளை நுகர அல்லது இடத்திற்கு வரும் பொழுது தீங்கு இழைத்தோ அழிவிற்கு வழி வகுப்பர். ஆதலின் தன் விருப்பத்தைக் கமுக்கமாகவே வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றார். பொதுவாக ஆட்சித்தலைவருக்குத் தகுந்த குறளாக இருந்தாலும் தனியாளுக்கும் பொருந்தக் கூடியதே. நம் தனிப்பட்ட செய்திகளைப் பகைவர் அறியாமல் கமுக்கமாக வைத்திருக்க வேண்டும். ஆனால், பகைவர் யார் என்று அறியாமல் உட்பகைவரும் மறைமுகப் பகைவரும் இருப்பர். எனவேதான், பிறர் யாரும் அறியாமல் வைத்திருப்பின் அதில் பகைவரும் அடங்குவர் அல்லவா? அவரும் அறிய மாட்டார். ஏதிலார் என்றால் பகைவர் என்றும் பொருள். பிறர் என்றும் பொருள். எனவேதான் பிறர் அறியாமல் விருப்பத்தை நுகர வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
திருவள்ளுவர் காதல் பொருட்கள் எவை எவை என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆதலின் அவர் எல்லாப் பொருள்கள் மேலும் விருப்பத்தைப் பிறரறியாமல் கொள்ள வேண்டும் என்று சொன்னதாகத்தான் கருத வேண்டும். காமக் காதலையே கூறினார் என்றும், ஆசை நாயகியரிடம் செல்வதைக் குறிப்பிடுகிறார் என்றும் இவ்வாறான காம ஆசையின் அடிப்படையில் கூறுகிறார் என்றும் சிலர் சொல்வது பொருந்தாது. காதல் என்பதைக் காமக் காதலாக் கருதாது விருப்பம் என்றேதான் கொள்ள வேண்டும். பகைவர் அறியா வண்ணம் விருப்பத்தை அடக்கமாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார் என்பதே பொருத்தமாகும்.
எனவே,
உன் விருப்பத்தைப் பிறர் அறியுமாறு வெளிப்படுத்தாதே!
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply