kuralneri02

v.po.pazhanivelanar01

‘இந்தி’ கட்டாயமில்லை என்று நடுவண் அரசும் அதற்கு ஒத்து ஊதிக் கொண்டு தமிழ்நாட்டு அரசும் (இல்லை, தப்பு, தப்பு, சென்னை ராச்யமும்) இந்தியைத் தமிழ்நாட்டில் நுழைக்கும் பணியில் வெற்றி பெற்றுவிட்டன.

1. தமிழ்நாடு என்று பெயரிடத் தமிழக அரசு மறுத்துவிட்டது. அமைச்சர் ஒருவர், ‘மெட்ராசு ஃச்டேட்’ என்பது இரண்டு ஆண்டுக்கு முன்னரே எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது; ஆதலால் அது தீர்ந்துபோன செய்தி; இனி அதைப்பற்றிப் பேசத் தேவையில்லை என்று வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார்.

2. தமிழ் நாட்டுக் கல்விக் கூடங்களில் பாடம் பயிற்று மொழியாகவிருக்கத் தமிழ் தகுதியற்றது என்று முடிவுகட்டப்பட்டுவிட்டது.

3. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் எல்லா மாணவர்களும் கட்டாயம் இந்தி படித்தே ஆக வேண்டும் என்பதும் பதினோராம் வகுப்பு அரசியல் தேர்வுக்குப் போகும் மாணவர்கள் இந்தியிலும் தேர்வு எழுத வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுவிட்டன. வருகிற பொதுத் தேர்வுக்குக் குறைந்த மதிப்பெண் இத்தனை பெற வேண்டுமென்று வற்புறுத்தவிருக்கின்றனர்.

4. தமிழகக் கல்வியமைச்சர் உயர்திரு பக்தவத்சலம் அவர்கள் சட்டமன்றில் ஒரு கேள்விக்கு விடையளிக்குங்கால் ‘தமிழ்நாட்டு மாணவர்களும், பொதுமக்களும் இந்தியை விரும்பிப் படிக்க முன் வரும்போது அரசாங்கம் படிக்கக்கூடாது என்று தடுக்க முமுயுயுயு?’’ என்று கூறியுள்ளார்.

5. இந்தியை எதிர்த்து ஒழித்தே தீருவோம். தமிழகத்தில் இந்தி புகவிட மாட்டோம்’ என்று ஆணவம் பேசி இந்தியப் பாராளுமன்றில், சட்டத்திற்குப் புறம்பாக, தமிழில் பேசிப் பெரும் புரட்சி செய்த தமிழ்த்தாயின் தவமகன் ஒருவர் இன்று இந்திக் கோட்டைக்குள் புகுந்து அடைக்கலமடைந்துவிட்டார். இஃது இவர் தமிழ்த்தாய்க்குச் செய்த பெருங்கேடும். நன்றிகெட்ட செயலுமாகும். தன்னலம் காரணமாகத் தாயைப் பணயம் வைக்கத் துணிந்துவிட்டார். இவர் ஒருவர் மட்டுமா? ஓர் இலக்கம் தமிழ் மறவர்களையும் உடன்கொண்டு சென்றுவிட்டாராம்.

6. நடுவணரசால் நடத்தப்பெறும் பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் இந்தி முதன்மை பெற்றுவிட்டது. இந்தியக்கூட்டு பொது ஊழியர் குழுத் தேர்வு (I.U.P.S.C.E.)க்கு இந்தியில் எழுத வேண்டும்; தெரியாதவர் சிலகாலம் ஆங்கிலத்திலும் எழுதலாமாம்.

7. தமிழக அஞ்சல்துறை, இருப்புப்பாதைத் துறைகளில் தமிழுக்கு இடமில்லாமற் போய்விட்டது, ‘எல்லாம் இந்திமயம். அத்துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் யாவரும் இந்திகற்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். கையொப்பம் கூட இனி இந்தியிற்றான் போடவேண்டுமாம்.

8. பேராயக் கட்சித் தலைவர்கள் – பச்சைத் தமிழர் காமராசர் உட்பட தமிழ்மக்கள் இந்தியைக் கற்க வேண்டுமென்று வற்புறுத்திக் கூறிவருகின்றனர். கற்காவிட்டால் அரசாங்க அலுவல் கிடைக்காமல் பின்னால் வருந்த நேரம் என்று தமிழக முழுதும் பறைசாற்றித்திரிகின்றனர்.

9. இந்திய அஞ்சலகங்களில் இனி (தந்தி) கம்பிச் செய்தியனுப்பப் பதினான்கு மொழிகளில் எதனை வேண்டுமாயினும் பயன்படுத்தலாமாம். ஆனால், தேவநாகரி எழுத்துக்களால் எழுதிக் கொடுத்தல் வேண்டுமாம். அதற்குரிய புத்தகங்கள் அணியமாயுளவாம்.

10. தமிழக இருப்புப் பாதை நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் இந்திக்கு முதன்மை கொடுத்ததை எதிர்த்து அழித்து தமிழ்க்கு முதலிடம் அளிக்கச் செய்த தமிழர் தலைவர் என்று போற்றப்பட்ட பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்களும் தமிழுக்குக் கல்லறை கட்ட கற்களை அணியம் செய்து கொண்டு, எல்லாரையும் பேராயக் கடசியில் சேரும்படி தூண்டுதல் செய்து கொண்டும் சேருகின்றவர்களைப் பாராட்டிக் கொண்டும் காமராசரின் புகழ் பாடிக்கொண்டும் உலாவருகிறார். அவர் கட்சியாகிய திராவிடர் கழகத்தில் உள்ளோரையும் அக்கட்சியில் கோரச் செய்துவருகிறார். தம்முடைய ஆயுட்குப் பிறகு தி.க.வைக் கலைத்துவிட்டு எல்லோரையும் அதிலேயே சேரச்சொல்லிவருகிறார்.

11. ‘‘இந்தியை ஒழிப்போம்; வடவர் ஆட்சியினின்றும் தமிழ்நாட்டை மீட்போம்’’ என்று செருக்கோடு பேசிய ‘தமிழகப்புலிகள்’’, பேராயக் கட்சிக் கூண்டுக்குள் போய் அகப்பட்டுக் கொண்டன.

12. தமிழகப் பேராயக் கட்சியோ தமிழகத்தை வடவர்பால் அடிமைப்படுத்த ஆவனவெல்லாம் செய்து கொண்டு வருகின்றது. காரணம் தன்னலமே. தமிழ்த்தாயை அழிக்கும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டுவிட்டது. தமிழுக்குக் கல்லறை அமைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டார்கள். விரைவில் வேலையும் முடிந்துவிடும். தமிழ்த்தாய் என்றும் தலையெடுக்காதபடி கல்லறைக்குள் அடக்கமாகப் போகிறாள்.

தமிழ்த்தாயின் கட்சிச் சார்பற்ற நன்மக்களே! உங்கள் கடமையைத் தமிழ்த்தாய்க்குச் செய்ய முன்வரப்போகிறீர்களா? அன்றித் தாயைக் கல்லறையிலிடுவதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்க விரும்புகிறீர்களா? தக்கவாறு முடிவு செய்து தாயைக் காப்பாற்ற முனையுங்கள்.

‘‘தமிழைக் கெடுப்பவரைத் தாய் தடுத்தாலும் விடேன்’’ என்று பாவேந்தர் பாரதிதாசனாரின் சூளுரையை எண்ணிப்பார்த்து ஏற்பன செய்க. இப்பொழுது அயர்ந்திருந்தால் பின்னர் பெரிதும் வருந்த நேரும். இடர்வருமுன் காக்கவிழிமின்! எழுமின்!! செயல்புரிமின்!!! இன்று ஏமாந்து பின் இடுக்கட்படாதீர்கள்.

–      குறள்நெறி:  ஆடி 31,1995 / 15.08.1964 பக்கம் 1, 8