(தமிழ்நாடும் மொழியும் 3 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும்

பழைய கற்காலம்

நினைப்பிற்கெட்டா நெடுங்காலத்துக்கு முன்னர்க் கதிரவனிடமிருந்து ஒரு சிறு பகுதி தெறித்து விழுந்தது. விழுந்த பகுதி படிப்படியாகக் குளிர்ந்தது. பிறகு அதிலே நீரில் வாழ்வன தோன்றின. பின்னர் நீரிலும் நிலத்திலும் வாழவல்ல உயிர்கள் தோன்றின. இவ்வாறு பல்வேறு வகையான உயிர்கள் தோன்றித் தோன்றி இறுதியிலே மனிதன் தோன்றினான் என அறிஞர் பலர் நமது தோற்றம் குறித்துக் கூறியுள்ளனர்.

தோன்றிய மனிதன் முதலிலே விலங்குகள் போல வாழ்ந்தான். வாழ்க்கையிலே சிறிது சிறிதாக முன்னேறினான். விலங்குகள் போல வாழ்ந்த மனிதன் காலப்போக்கிலே மலைக்குகைகளில் வாழலானான். பின்னும் பல ஆண்டுகள் உருண்டோடின. மனிதன் கற்களைப் பயன்படுத்தத் தொடங்கினான். அக் கற்கள் மூலம் அவன் தனக்கு வேண்டிய உணவைப் பெறலானான்; தன்னைப் பிற உயிரினின்றும் காக்கத் தொடங்கினான். இவ்வாறு மனிதன் கற்களைக் கொண்டு தனக்கு வேண்டியன ஆக்கவும், தீங்கினின்றும் தன்னைக் காக்கவும், பிற உயிரைத் தாக்கவும் பயன்படுத்திய காலமே பழைய கற்காலமாகும். நாகரிகத்தின் முதற்படிதான் பழைய கற்காலம்.

பழைய கற்காலத்திலே மனிதன் கரடுமுரடான கற்களையே பயன்படுத்தினான். அவனுக்கு உணவாகப் பயன்பட்டவை காயுங் கிழங்கும் கனிகளுமே தாம். பழைய கற்கால மனிதனின் முந்தையர் யார்? அவர்தாம் கொரில்லா, சிம்பென்சி, கிப்பல், உரேங்குடாண் என்பவராம். இவர்களின் எலும்புக்கூடுகள் தென்னகத்திலே ஏராளமாகக் கிடைக்கின்றன. எனவே பழைய கற்கால மனிதனின் தாயகம் தென்னாடே எனில் தவறில்லை. கரடுமுரடான கல்லைக் கற்கால மனிதன் உடனே பயன்படுத்தவில்லை. முதலில் அவன் கிளைகளையும் கொப்புகளையும் பயன்படுத்தினான்.

முட்டை வடிவான கோடரிகள், ஈட்டிகள், குழி தோண்டு கருவிகள், வட்டக் கற்கள், ஒருபக்கம் மட்டும் கூர்மைத் தன்மை வாய்ந்த கருவி, நீண்ட கத்திக் கற்கள், சுத்தியல் போன்றவை கற்கால மனிதன் பயன்படுத்திய கற்கருவிகளுள் குறிப்பிடத் தக்கனவாகும். கருவிகள் செய்கின்ற அளவுக்கு மென்மையும் உரிய வன்மையும் வாய்ந்த கற்பாறைகள் தென்னகத்திலே செங்கற்பட்டு, சித்தூர், கடப்பை, கருநூல் ஆகிய மாவட்டங்களில் உள்ளன. அவற்றை இன்றும் காணலாம். மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பழைய கற்கால மனிதன் வாழ்ந்த குகைகள் காணப்படுகின்றன.

கற்கருவிகளின் மூலம் கற்கால மனிதன் வேட்டையாடினான்; வேட்டையாடி விலங்குகளின் இறைச்சியை அப்படியே உண்டான். இறைச்சியை உண்ணற்கேற்றவாறே அவன்றன் பற்கள் அமைந்திருந்தன. அதுமட்டுமல்ல; பழைய கற்காலக் கருவிகளிற் சிலவும் இறைச்சியைக் கிழிக்கவே செய்யப்பட்டன போல அமைந்துள்ளன.

இவ்வாறு வேகாப் புலாலை உண்ட மனிதன் காலப்போக்கில் நெருப்பைக் கண்டுபிடித்தான். முதலில் மூங்கிலைக் கண்டான்; அவை ஒன்றோடொன்று உராய்வதினால் நெருப்பு உண்டாவதைக் கண்டான். உடனே அவன் இரண்டு மரக் கட்டைகளைக் கொண்டு தீயுண்டாக்கினான். இறைச்சியை வேகவைத்தான்; உண்டான். பிறகு தீக்கடைக்கோல், சக்கிமுக்கிக் கற்கள் என்பனவற்றைக்கொண்டு தீ உண்டாக்கினான்.

இவ்வாறு தீ உண்டாக்கி வாழ்ந்த மனிதன் ஓரிடத்திலும் நிலைத்து வாழவில்லை. நாடோடி வாழ்க்கையே அவன் நடத்தினான். ஆனால் நாளாகஆக இன உணர்ச்சி அவன் உள்ளத்தில் தோன்றிப் பரவலாயிற்று. எனவே சேர்ந்து வாழலானான். ஆகவே மனிதக் கூட்டம் உண்டாயிற்று. இவ்வாறு தோன்றியது மனித சமுதாயம். இவர்களின் சந்ததியினர் இன்றும் மலைகளில் வாழ்கின்றனர். பண்டைக் கால மக்கள் இறந்தவரைக் கழுகுக்கும் நரிக்கும் இரையாகுமாறு வீசிச் சென்றனர். இவ்வழக்கம் இன்றைக்கும் திபெத்திலே காணப்படுகின்றது.

பழைய கற்காலத்தின் தொடக்கத்தில் வாழ்ந்த மனிதன் ஆடையற்றவனாகவே அலைந்தான். நாள் பலசென்றன. மரவுரியினையும், இலைகளையும் ஆடையாக அவன் பயன்படுத்தினான். பின்னர்த் தோலாடை பயன்படுத்தப்பட் டது. ஆகப் பண்டையக்கால மனிதன் எளிய உடையே பூண்டான். அவ்வுடைக்கேற்றவாறே தட்ப வெட்ப நிலையும் அமைந்திருந்தது.

இனி கலைகளைப் பார்ப்போம். பண்டைக்கால மனிதன் ஓரளவுக்குக் கலை உணர்ச்சி உடையவனாகவும் வாழ்ந்தான். அவன்றன் கலையுணர்ச்சியைத் தெள்ளத் தெளியக்காட்டும் ஓவியங்கள் பல இன்றும் ஐரோப்பிய நாடுகளிலே மலைக் குகைகளிலே காணப்படுகின்றன. தென்னகத்துக் குகைகளை ஆராய்ந்த பேரறிஞர் உட்டு என்பவர் தொடக்கத்தில் தென்னகத்திலே பழைய கற்கால ஓவியங்கள் இல்லை என்று கூறினார். ஆனால் அதற்குப் பின்னர் நடத்தப்பெற்ற ஆராய்ச்சிகள் அவர் கருத்தைப் பொய்யாக்கிவிட்டன. பழைய கற்காலக் குகை ஓவியங்கள் இரெய்கார் என்னும் இடத்திற்கு அருகிலுள்ள சிங்கன்பூரில் (Singhanpur) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தகைய குகை ஓவியங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் வகையான ஓவியம் வேட்டைத் தொழிலைப் பற்றியதாகும். இரண்டாம் வகையான ஓவியம் எதைக் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மூன்றாவது வகையான ஓவியம் விலங்குகளைப் பற்றியதாகும். இவ்வோவியங்களிலே குறிப்பிடத்தகுந்தது பொங்கும் உணர்ச்சியே. ஒவ்வொரு ஓவியமும் உயிர் ஓவியமாகும். நான்காவது ஓவியம் சித்திர எழுத்துகளைக் கொண்டதாகும். இச் சித்திரங்கள் எகிப்து நாட்டுப் பானை முதலியவற்றில் வரைந்துள்ள சித்திரங்களை ஒத்திருக்கின்றன.

பழைய கற்கால மக்கள் எந்த அளவுக்குச் சமயவுணர்ச்சி யுடையவர்களாக இருந்தார்கள் என்பதை அறியப் போதுமான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. பண்டை மக்களின் சவத் தாழிகளோ, மயானக் கரைகளோ தென்படவில்லை. இதிலிருந்து அவர்கட்கு இறந்த பின்றை உயிர் வாழும் என்பதிலே நம்பிக்கை இல்லை என நாம் அறியலாம். ஆனால் இயற்கையில் அம்மனிதன் நம்பிக்கை உடையவன் என்பது மட்டும் ஒருவாறு தெரிகிறது. தன்னை இயக்கும் சக்தி ஒன்று உலகில் உண்டு என்பதைப் பண்டை மக்கள் அறிந்திருந்தனர். இவ்வித உணர்வு தான் பழைய கற்காலத்திலே பரவி இருந்ததே தவிர வேறு கடவுள் உருவங்கள் இருந்தனவாகத் தெரியவில்லை. ஆனால் தேவி வணக்கமும் நில வணக்கமும் பண்டைய மனிதன் வழக்கத்தில் இருந்தன என்பது தெரிகிறது. மாக்களினின்றும் நோயினின்றும் தம்மைக் காக்குமாறு அன்னையை அம்மக்கள் வேண்டினர் போலும். நாளாக ஆக இவ்வுணர்வு பெருக, பரவ, உணர்ச்சி வடிவில் இறையைக் கண்டவன் கல்லிலே கடவுளைக் காணத் தலைப்பட்டான்.

இனி பழைய கற்கால மனிதன் பேசிய மொழியினைப் பற்றிப் பார்ப்போம். தொடக்கத்தில் மனிதன் தன் எண்ணங்களை வெளியிடாமல் தவித்தான்; துடித்தான். தனக்கு மேலே சிறகடித்துப் பறக்கும் பறவைகளைப் பார்த்தான். முதலிலே அவற்றைப் போலவே ஒலித்தான். பின்னர்ச் சைகைகளைக் கொண்டு தன் கருத்தைத் தெரிவித்தான். இவ்வளவு நாகரிகம் அடைந்தும் இன்னும் நம் பேச்சில் பாதி அளவுக்கு மேல் சைகைகளே நிரம்பியுள்ளன. பின்னர் மனிதன் தான் பார்த்த உருவங்களை வரைந்து தன் கருத்தை உணர்த்தினான். இவ்வாறு படிப்படியாக முன்னேறி இறுதியிலே சொற்களைக் கண்டான்; கருத்தைத் தெரிவித்தான்.

பண்டை மக்கள்-பழைய கற்கால மக்கள் பதப்படுத்தாத கரடுமுரடான கற்களைப் பயன்படுத்தினர்; புலாலையும் காய் கிழங்குகளையும் உண்டனர்; தோலாடை இலையாடை உடுத்தினர்; இறந்தோரை வீசி எறிந்தனர்; அன்னை வணக்கம் கைக்கொண்டனர்; ஓரளவிற்கு ஓவிய உணர்வும் உடையவராக யிருந்தனர்.

புதிய கற்காலம்

நாகரிகப் படிகளிலே இரண்டாவது படி புதிய கற்காலமாகும். கரடுமுரடான கற்களைப் பயன்படுத்திய மனிதன் வழவழ என ஒளிபொழியும் தீட்டிய கல்லைப் பயன்படுத்திய – காலமே புதிய கற்காலமாகும். இக்காலத்தில் மனிதன் பல துறைகளிலும் முன்னேறலாயினான்; தன் வாழ்க்கை முறையைப் பல துறைகளிலும் மாற்றிக்கொண்டான்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்