tharkolagal05

தற்கொலை தீர்வாகுமா ?

  அண்மைக் காலங்களில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. உலக நல்வாழ்வு நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 10இலட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அஃதாவது ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கின்றார். தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கையானது கொலைகள் போர்களின் மூலம் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

  உலகில் வாழும் 5% பேர் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். பால், வயது, நாடுகள் பேதமின்றி தற்கொலை எண்ணம் வேகமாகப் பரவி வருகின்றது. குறிப்பாக இளைய சமுதாயத்தினர் (15 – 19 அகவைக்குட்பட்டவர்கள்) இலட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்து கொள்கின்றனர். மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் தற்கொலை நடைபெறுகின்றது. ஆய்வறிக்கையின்படி கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்தான் தன்னைத்தானே மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளது.

tharkolagal01

  இந்தியாவிலும் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போகின்றது. கடந்த இருபது வருடங்களில் தற்கொலை நிகழ்வுகள் 3 விழுக்காடு மிகுந்துள்ளன. அதிலும் குறிப்பாக 15 முதல் 29 அகவைவரை உள்ளவர்கள் மிகுதியான அளவில் தற்கொலை செய்கின்றனர். தமிழகத்திலும் தற்கொலைகள் அதிக அளவில் நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் யாருக்குத் தோன்றுகிறது என்று சிந்திக்கும் பொழுது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், மது, போதை மருந்துகளுக்கு அடிமையானவர்கள், குடும்பம்-தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் சிக்கல்களின் காரணமாக மன அழுதத்திற்கு ஆளானவர்கள், பொருள்நிலைச் சிக்கல்கள், வேலை வாய்ப்பின்மையால் சலிப்பு அடைந்தவர்கள், ஏப்பு(எய்ட்சு), ஈழை(ஆத்துமா) போன்ற கடுமையான நோய் பீடித்தவர்கள், குறிப்பாகத் தனிமையில் வாடுபவர்கள் இவர்களிடமே தற்கொலை செய்யும் எண்ணம் மேலோங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

tharkolagal03

  பெரும்பாலான தற்கொலைகள் அற்பக் காரணங்களுக்காகவே நடைபெறுகின்றன. கணவன் – மனைவி சண்டை, ஆங்கில வழி படிப்பில் தோல்வி, தேர்வில் தோல்வி, காதல், கடன் என்று சிறிய சிறிய சிக்கல்களைக் கூட எதிர்கொள்ள முடியாமல் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

  பெருகி வரும் தற்கொலைகளை தடுப்பதற்குரிய வழிவகைகளை ஆராய வேண்டும். ஆண் – பெண், இரவு – பகல், இன்பம் – துன்பம், வாழ்வு – மரணம் என்று அனைத்தையும் இரண்டிரண்டாக படைத்துள்ள இறைவன் சிக்கல்களுடன் அதற்கான தீர்வுகளையும் சேர்த்தே படைத்துள்ளான். ஆதலால் எந்த ஒரு சிக்கலானாலும் உரியவர்களிடம் கலந்துரையாடி அதற்கான தீர்வு காண முயல வேண்டும். சிக்கல்கள், துன்பங்களை எதிர்கொண்டு வாழப் பழகினால்தான் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் வெற்றி காண முடியும்.

  இறைவன் வானம் – பூமி, இவற்றிற்கிடையே உள்ள எண்ணற்ற வாழ்வாதாரங்கள் இவற்றை எதற்காக படைத்துள்ளான்? நாம் இவ்வுலகில் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளோம்? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை காண முயல வேண்டும். அப்போதுதான் தற்கொலை போன்ற கோழைத்தனமான முடிவுகள் நம்முன் ஏற்படா.

tharkolagal02

  பிள்ளை வளர்ப்பு என்பது மிக முக்கியமான ஒரு கடமையாகும். குழந்தைப் பருவத்திலிருந்தே சூழ்நிலைகளுக்கேற்ப வாழுதல், தன்னம்பிக்கை, சிக்கல்களை எதிர்கொள்ளுதல், தேவை ஏற்படின் பிறருடைய உதவியை நாடுதல் போன்ற பண்புகளை குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்.

  இறைநெறியில் நாட்டம், சமூகத்தில் உள்ளவர்களுடன் நெருங்கிப் பழகுதல், சரியான முறையில் உடல்நலத்தைப் பேணுதல், புகை, மது போன்ற தீய பழக்கங்களில் இருந்து விலகியிருத்தல் போன்றவை மூலமும் தற்கொலை மனப்பான்மையைக் களையெடுக்க முடியும்.

  தற்கொலை குறித்த விழிப்புணர்வு பரப்புரை, அதற்கான காரணம், தவிர்க்கும் காரணிகள் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும். குறிப்பாகக் குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவம் வரை உள்ளவர்களுக்குத் தற்கொலை ஒரு சமூகக் குற்றம் என்று உணர்த்த வேண்டும்.

  தற்கொலை முயற்சி செய்பவர்களுக்கு நெறியுரைகள், அறிவுரைகள் வழங்குவதற்குரிய மையங்களை அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும். தற்கொலை எண்ணத்தைத் தூண்டக்கூடிய சமூக, (திரைப்படம், நாடகங்கள் போன்ற) கலை, பண்பாட்டுக் காரணிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசுகள் தற்கொலைகளைத் தடுக்க தனிப்பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும்.

tharkolagal04

  இறைவன் படைத்த உயிரை மாய்த்துக் கொள்வதற்கு இவ்வுலகில் யாருக்கும் உரிமை கிடையாது. இந்த வாழ்வு இறைவன் நமக்கு அளித்த அருட்கொடையாகும். இங்கு நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடிக்கும், நாளை படைத்த இறைவன் முன் விடை சொல்ல கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம். கவலைகள், தோல்விகளுக்கு அஞ்சி உயிரை மாய்த்துக் கொள்வதென்றால் இவ்வுலகில் யாரும் உயிருடன் வாழ முடியாது.

  இறைநம்பிக்கை, கடின உழைப்பு, பொறுப்பை உணர்ந்து செயல்படுதல், ஒழுக்கம் இவையே இன்றைய உலகில் வாழ்வதற்குத் தகுதியான கருவிகள் ஆகும். இவற்றை ஒரு மனிதன் பெற்றிருந்தால் எத்தகைய இயல்பிற்கு மாறான சூழ்நிலையையும் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெற முடியும்.

  ஆதலால் தற்கொலை எதிர்ப்பை மக்கள் கருத்தாக மாற்றி, அதனைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதில் அனைவரும் கரம் கோர்த்துச் செயல்பட்டால் தற்கொலை என்னும் கொடிய நோயை முற்றிலுமாக ஒழித்து விட முடியும்.

(செப்டம்பர் 10, உலகத் தற்கொலை தடுப்பு நாள்)

தரவு : முதுவை இதாயத்து