எல்லா நாளும் ஒரு நாளே!

இன்பமும் துன்பமும் வரு நாளே!

இன்பம் வந்தால் மயங்கா தீர்!

துன்பம் கண்டால் துவளா தீர்!

பிறர் துன்பம் நீங்க உதவிடு வீர்!

அவர்இன்பம் காண முயன்றிடு வீர்!

மொழிச் சிதைப்பரை ஒதுக்கிடு வீர்!

இனக்கொலைஞரை ஒழித்திடு வீர்!

சாதிக் கொலைகள் இல்லாத

சமயச் சண்டை மறைந்திட்ட

ஏழ்மை எங்கும் காணாத

நன்னாள்தானே எந்நாளும்!

நாளும் மாறும் நாளில் இல்லை,

உயர்வும் புகழும் வாழும் முறையும்!

அல்லன நீக்கி நல்லன எண்ணில்

ஒவ்வொரு நாளும் புது நாளே!

இலக்குவனார் திருவள்ளுவன்