(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.17. தொடர்ச்சி)

தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்

மாணவரியல்

18. புறஞ்சொல்லல் விலக்கல்

  1. புறஞ்சொலல் பிறரைப் புறத்திழித் துரைத்தல்.

புறஞ்சொல்லல் என்பது ஒருவரை அவர் இல்லாதபோது இழிவாகப் பேசுதல் ஆகும்.

  1. அறங்கொலு மறத்திற் புறஞ்சொலல் கொடிது.

புறஞ்சொல்லல் அறத்தைக் கொல்லும் தீய செயல்களில் மிகக் கொடியது ஆகும்.

  1. புறஞ்சொலல் பொய்முதற் புரையெலாம் வளர்க்கும்.

புறஞ்சொல்லல் பொய் முதலான குற்றங்களை வளர்க்கும் தன்மை உடையது.

  1. புறஞ்சொலல் புறனெலாம் பொருபகை யாக்கும்.

புறஞ்சொல்லல் ஒருவனுக்கு விரோதிகள் ஏற்படக் காரணமாக அமையும்.

  1. புன்மகார் செயல்களுட் புறஞ்சொல லொன்று.

புறஞ்சொல்லல் கீழ்மக்களின் குணங்களுள் ஒன்று ஆகும்.

  1. புறஞ்சொலு நாவின ரறஞ்சொலல் வஞ்சம்.

புறஞ்சொல்லுபவர்கள் அறத்தினைப் பேசுவது ஏமாற்று வேலை ஆகும்.

  1. புறஞ்சொலு நாவினர்க் கறஞ்சொலன் மடமை.

புறஞ்சொல்லும் இயல்பு உடையவர்களுக்கு அறத்தினைப்பற்றி எடுத்துக்கூறுவது அறிவற்ற செயல் ஆகும்.

  1. புறஞ்சொலல் கேட்டலும் புன்மையென் றறிக.

புறஞ்சொல்லலைக் காதால் கேட்பதும் இழிவான செயல் ஆகும்.

  1. புறஞ்சொலி வாழ்தலிற் பொன்றனன் றென்ப.

புறம் பேசி உயிர் வாழ்வதைவிட இறத்தல் சிறந்தது ஆகும்.

  1. ஆதலாற் புறஞ்சொல லடியொடு விடுக.

புறஞ்சொல்லலை முற்றிலுமாக விட்டுவிடுதல் வேண்டும்.

 

வ.உ.சிதம்பரனார்

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum