(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.21 தொடர்ச்சி)

தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்
மாணவரியல்

22. தொழில் அறிதல்

  1. மெய்யுறுப் புக்கொடு செய்வது தொழிலே.

தொழில் என்பது உடலால் உழைப்பது ஆகும்.

  1. தொழிலா லுலகந் தோன்றிநிற் கின்றது.

உழைப்பினால் உலகம் அழியாமல் இருக்கின்றது.

  1. தொழிலிலை யெனிலுல கழிவது திண்ணம்.

தொழில் இல்லை எனில் உலகம் அழிந்து போவது உறுதி ஆகும்.

  1. தொழிலிலார் வறுமையுற் றிழிவெலா மடைவர்.

தொழில் செய்யாதவர்கள் வறுமை நிலை அடைந்து அவமானப்படுவர்.

  1. அரியநற் றொழில்சில வறிதல்யார்க் குங்கடன்.

உயர்ந்த, சிறந்த தொழில் சிலவற்றைக் கற்றுக்கொள்ளுதல் அனைவரின் கடமை ஆகும்.

  1. படைக்கல மனைத்தும் பண்பொடு பயில்க.

படைக்கலன்களை இயக்குவதைக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

  1. படைவகுத் தமர்செயு நடையெலா மறிக.

போர் செய்யும் முறைகளை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

  1. புவிகடல் விண்மிசை போவவூர்ந் தறிக.

பூமி, கடல், வானம் இவற்றில் பயணம் செய்யக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

  1. எவ்வகை யுருவு மெடுத்திடப் பழகுக.

தம் உருவத்தை மறைத்து வேறு உருவத்தில் தோன்றிடப் பழகுதல் வேண்டும்.

  1. உழவுவா ணிகங்கைத் தொழில்சில வறிக.

உழவுத்தொழில், வாணிகம், கைத்தொழில் முதலியவற்றைக் கற்றல் வேண்டும்.

வ.உ.சிதம்பரனார்

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.23. திருந்தச் செய்தல்)