(உ.வே.சா.வின் என் சரித்திரம் 74 : புலமையும் அன்பும் – தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம்-45 தொடர்ச்சி

அன்னபூரணி

ஆசிரியரது அன்பைப் பற்றி நினைத்துக் கொண்டே இராமையருடன்
அவர் அழைத்துச் சென்ற வீட்டுக்குள் நுழைந்தேன். “அன்னபூரணி” என்று
இராமையர் தம் தமக்கையை அழைத்தார். பலசமயங்களில் சாதாரணமாகத் தோற்றும் சில நிகழ்ச்சிகள் முக்கியமான சில சமயங்களில் மனத்தில் நன்றாகப் பதிந்து விடுகின்றன. என் நிலையையும் என் பசியறிந்து உணவுக்கு ஏற்பாடு செய்யும் என் ஆசிரியர் அன்பையும் நினைத்தபடியே மற்ற விசயங்களை மறந்திருந்த எனக்கு “அன்னபூரணி” என்ற அப்பெயர் ஏதோ நல்ல சகுனமாகத் தோற்றியது. ஒரு விதமான
ஆனந்தமும் ஏற்பட்டது. எனக்கு ஆகாரம் உதவ அன்னபூரணியையே அவர்
அழைத்தால் என்ன சந்தோசம் விளையுமோ அத்தகைய சந்தோசம்
உண்டாயிற்று. காசியில் அன்ன பூரணி அம்பிகையின் திருக்கோயில் விசேடச்
சிறப்புடையதென்று கேள்வியுற்றிருந்தேன். முதல் நாள் இரவு காசிக்
கலம்பகத்தைப் படித்தபோது காசி நகரத்தை மனத்தால் அனுபவித்தேன்
;
மறுநாள் காலையிலே அன்ன பூரணி தேவியே எனக்கு அன்னம் படைத்ததாகப்
பாவித்துக்கொண்டேன். “நமக்குக் குறைவில்லை என்பதை இறைவன் இத்தகைய
நிமித்தங்களால் உணர்த்துகிறான்” என்று நினைத்து மகிழ்ந்தபடியே அன்ன
பூரணியம்மாள் இட்ட ஆகாரத்தை உண்டு மீட்டும் பிள்ளையவர்களை
அணுகினேன்.

பாடம்

“காசிக் கலம்பகத்தில் எஞ்சிய பாடங்களையும் படித்து விடலாமே”
என்று ஆசிரியர் சொன்னார். குமாரசாமித் தம்பிரான் முதலியவர்கள் பாடம்
கேட்பதற்காக வந்தார்கள். முதல் நாளைக் காட்டிலும் அதிக ஊக்கத்தோடு
நான் அன்று படித்தேன். முற்பகலில் அந்தப் பிரபந்தம் முடிந்தது. அப்பால்
குமாரசாமித் தம்பிரானும் வேறு சிலரும் பிள்ளையவர்களைப் பார்த்து, “இந்த
இரண்டு தினங்களில் ஒரு நல்ல நூலைக் கேட்டு முடித்தோம். ஐயா அவர்கள்
இங்கேயே இருந்து பாடம் சொன்னால் இன்னும் பல நூல்களை நாங்கள்
கேட்போம். எங்கள் பொழுதும் பயனுள்ளதாகப் போகும்” என்று கேட்டுக்
கொண்டனர்.

ஆசிரியர் மாயூரம் சென்று சில தினங்களில் வந்து அவர்கள்
விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்களித்தார். திருவாவடுதுறைக்
காட்சிகளையும் அங்கு உள்ளோரின் அன்பையும் கண்ட எனக்கும்
பிள்ளையவர்கள் திருவாவடுதுறைக்கே வந்திருந்தால் நன்றாக இருக்குமென்ற
எண்ணம் உண்டாயிற்று.

சோழ மண்டல சதகம்

அன்று பிற்பகலில் திருமலைராயன் பட்டணத்திலிருந்து ஆசிரியரைப்
பார்க்க வந்த கனவான் ஒருவர் தாம் கொண்டுவந்த சோழ மண்டல சதக ஏட்டுப் பிரதியைப் பிள்ளையவர்களிடம் கொடுத்தார். அதை வாங்கிய ஆசிரியர் என்னிடம் அளித்துப் பிரித்துப் படிக்கும்படி சொன்னார். புதிய நூல்களைப் படிப்பதில் எனக்கு அளவில்லாத சந்தோசம் உண்டு. ஆதலால் அதை ஊக்கத்தோடு படிக்க ஆரம்பித்தேன்.
அங்கங்கே அவர் விசயங்களை விளக்கிக்கொண்டே சென்றார்.

சோழ மண்டல சதகமென்ற பெயரைக் கேட்டவுடனே எனக்கு நான்
படித்த சதகங்களின் ஞாபகந்தான் வந்தது. நீதிகளை நூறு நூறு பாடல்களால்
எடுத்துக் கூறும் அந்தச் சதகங்களில் உள்ள செய்யுட்களைப் போன்ற
பாடல்களை இச்சதகத்திற் காணவில்லை. “சதகமென்றால் பெரிய பாட்டுக்களாக
இருக்குமே
” என்று ஐயுற்று நான் வினாவியபோது, நீதி சதகங்களுக்கும்
மண்டல சதகங்களுக்குமுள்ள வேற்றுமையை ஆசிரியர் விரிவாக எடுத்துச்
சொன்னார்.

ஒவ்வொரு நாட்டின் பெருமையையும் அந்நாட்டில் வாழ்ந்திருந்த
அரசர், புலவர், உபகாரிகள் முதலியோருடைய பெருமையையும் தனியே
தொகுத்துப் பாடுவது ஒரு சம்பிரதாயமென்றும், அப்படிப் பாடிய நூலே சோழ
மண்டல சதகமென்றும், அதனை இயற்றியவர் வேளூர் ஆத்மநாத
தேசிகரென்றும், படிக்காசுப் புலவர் தொண்டை மண்டலச் சிறப்பைப் பாராட்டிப்
பாடிய தொண்டை மண்டல சதகம் மிகவும் சிறந்ததென்றும்
கூறினார்.

விடை பெற்றது

சில மணி நேரத்தில் சோழ மண்டல சதகம் முழுவதையும் நான் படித்து
முடித்தேன். அதிலே குறிப்பிட்டுள்ள சில பழைய வரலாறுகள் விளங்கவில்லை.

அப்பால் பிள்ளையவர்கள் என்னை நோக்கி, “இப்படியே என்னுடன்
மாயூரம் வரலாமல்லவா?” என்று கேட்டார்.

“இல்லை. புத்தகங்கள், வத்திரங்கள் முதலியன ஊரில் இருக்கின்றன.
ஐயாவைப் பார்த்து எப்போது வரலாமென்று கேட்டுப் போகவே வந்தேன்.
போய் உடனே திரும்பிவிடுகிறேன்.”

“அவசரம் வேண்டா. ஊருக்குப் போய் இன்னும் சில தினங்கள்
இருந்து விட்டே வரலாம். அதற்குள் நான் மாயூரம் போய்விடுவேன். அங்கே
வந்து விடலாம்.” அன்றிரவு திருவாவடுதுறையில் தங்கியிருந்து மறுநாட்காலையில் நான் ஆசிரியரிடம் விடை பெற்றுச் சூரியமூலை போய்ச் சேர்ந்தேன். என்
தந்தையார் முதலியவர்களிடம் குரு பூசைச் சிறப்பையும் ஆசிரியருடைய
அன்புச் செயல்களையும் பற்றித் தெரிவித்தேன்.
கேட்டு அவர்கள் மிகவும்
மகிழ்ந்தனர்.

சூரிய மூலையில் பத்து நாட்கள் வரையில் இருந்து பழைய
பாடங்களைப் படித்து வந்தேன். அப்பால் ஒரு நாள் தந்தையாரை
அழைத்துக்கொண்டு மாயூரம் வந்தேன். பிள்ளையவர்கள் அங்கே
இருந்தார்கள். என் தந்தையார் மாயூரத்தில் ஒரு நாள் தங்கி மறுநாள்
விடைபெற்றுச் சூரிய மூலைக்குச் சென்று விட்டார்.

மாயூர நிகழ்ச்சிகள்

நான் மாயூரம் வந்தபோது பிள்ளையவர்கள் சவேரிநாத பிள்ளைக்கும்
வேறு சிலருக்கும் சிரீ சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தங்களைப் பாடம்
சொல்ல ஆரம்பித்திருந்தார். நால்வர் நான்மணி மாலை முதலிய சில
பிரபந்தங்கள் நிறைவேறியிருந்தன. நான் போன சமயத்தில் பிட்சாடன நவமணி
மாலை நடந்து வந்தது. அத் தமிழ்ப் பாடத்தில் நானும் கலந்து கொண்டேன்.
இடைவேளைகளில் முன்பு நடந்த பிரபந்தங்களையும் கேட்டு முடித்தேன்.
மத்தியில் ஆசிரியர் காரைக்காலில் இருந்த ஓர் அன்பர் விரும்பியபடி அவ்வூர்
சென்று அப்படியே திருவாரூர், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களுக்குப்
போனார். மாயூரத்தில் என்னுடன் சவேரிநாத பிள்ளை இருந்து வந்தார்.

மாயூரத்தில் நான் சாப்பிட்டு வந்த விடுதிக்குக் கொடுக்க வேண்டிய
பணம் கொடுக்க இயலாமையால் அங்கே ஆகாரம் செய்யப் போகவில்லை.
ஆதலால் அரிசி முதலியவற்றைப் பெற்று நானே சமையல் செய்து சாப்பிடத்
தொடங்கினேன். பிள்ளையவர்கள் வெளியூர்ப் பிரயாணத்தில் இருந்தாலும்
என்னை மறக்கவில்லையென்பதை அவரிடமிருந்து சவேரிநாத பிள்ளைக்கு
வந்த ஒரு கடிதம் வெளிப்படுத்தியது திருச்சிராப்பள்ளியிலிருந்து அதை
எழுதியிருந்தார். அதில் ஆசிரியர் என்னைச் சாக்கிரதையாகக் கவனித்துக்
கொள்ள வேண்டுமென்று சவேரிநாத பிள்ளைக்குத் தெரிவித்திருந்தார்.

சில தினங்களில் ஆசிரியர் மாயூரத்துக்குத் திரும்பி வந்தனர்.
வந்தவுடன், நானே சமையல் செய்து சாப்பிடுவதை அறிந்து அவர் மிகவும்
வருத்தமுற்று என்னிடம் மூன்று உரூபாயைக்கொடுத்து, “இதைக் கொண்டு போய் விடுதியிற் கொடுத்துச் சாப்பிட்டு வாரும்” என்று அனுப்பினார். அது முதல் பழையபடி முன் சொன்ன விடுதியிலேயே ஆகாரம் செய்துவந்தேன்.

அம்பர்ப்புராணம்

ஒரு நாள் ஆசிரியர் தம் புத்தகக் கட்டில் உள்ள ஒர் ஏட்டுச் சுவடியை
எடுத்து வரச் சொன்னார். அவர் முன்னமே பாடத் தொடங்கி ஓரளவு
எழுதப்பெற்று முற்றுப் பெறாதிருந்த அம்பர்ப் புராண ஏட்டுச் சுவடி அது;
‘திருவம்பர்’ என்னும் தேவாரம் பெற்ற சிவத்தல வரலாற்றைச் சொல்லுவது.
அதை முதலிலிருந்து என்னைப் படித்து வரும்படி சொன்னார். நான் மெல்லப்
படித்தேன். அவ்வப்போது சில திருத்தங்களை அவர் சொல்ல அவற்றை நான்
சுவடியிற் பதிந்தேன். இரண்டு மூன்று தினங்களில் அதில் உள்ள பாடல்கள்
முழுவதையும் படித்துத் திருத்தங்களும் செய்தேன். “இந்த நூலை ஆரம்பித்து
ஒரு வருடமாகிறது. அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. இதை முன்பு நான்
சொல்லச் சொல்ல ஒருவர் எழுதினார். அவர் திருத்தமாக எழுதக்
கூடியவரல்லர். நான் ஏதாவது சொன்னால் அதைக் காதில் வாங்கிக்
கொள்ளாமல் சில இடங்களில் வேறாக எழுதியிருக்கிறார். இப்படி இவர்
செய்திருப்பாரென்று சந்தேகப்பட்டுத்தான் மறுபடியும் படிக்கச் சொன்னேன்.
சொல்வதைச் சரியாக எழுதுவோர் கிடைப்பது அருமையாக இருக்கிறது” என்று
சொல்லிவிட்டு, “இனி இந்தப் புராணத்தை விரைவில் முடித்துவிடவேண்டும். நீர்
ஏட்டில் எழுதலாமல்லவா?” என்று என்னை ஆசிரியர் கேட்டார்.

“காத்திருக்கிறேன்” என்றேன் நான்.

“திருவாவடுதுறைக்கு வந்து இருப்பதாகச் சொல்லியிருக்கிறேன்.
தம்பிரான்களுக்குப் பாடம் கேட்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாக
இருக்கிறது. இதை அங்கே போய் முடித்துவிடலாம்” என்று அவர் சொன்னார்.
அப்போது நான் திருவாவடுதுறைப் பிரயாணம் சமீபத்தில் இருப்பதை அறிந்து
சந்தோசமடைந்தேன்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.