(உ.வே.சா.வின் என் சரித்திரம் 73 : திருவாவடுதுறைக் காட்சிகள் 2- தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம்-45

புலமையும் அன்பும்

குருபூசைத் தினத்தன்று இரவு ஆகாரம் ஆனபிறகு அங்கே நடைபெறும் விசேடங்களைப் பார்க்கச் சென்றேன்.சிரீ சுப்பிரமணிய தேசிகர் ஓர் அழகிய சிவிகையில் அமர்ந்து பட்டணப் பிரவேசம் வந்தார். உடன் வந்த அடியார்களின் கூட்டமும் வாண வேடிக்கைகளும் வாத்திய முழக்கமும் அந்த ஊர்வலத்தைச் சிறப்பித்தன. பல சிறந்த நாதசுவரக்காரர்கள் தங்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர். சிவிகையின் அலங்காரம் கண்ணைப் பறித்தது. பட்டணப் பிரவேச காலத்தில் சிசியர்கள் வீடுகளில் தீபாராதனை நடந்தது.

கொலுக் காட்சி

பட்டணப் பிரவேசம் ஆன பிறகு கொலு நடைபெற்றது. அப்போது கொலு மண்டபத்தில் ஆதீனத் தலைவர் வீற்றிருக்க அவருக்குப் பூசை முதலியன நடைபெறும். பூக்களால் அலங்கரிக்கப் பெற்ற மண்டபத்தின் இடையே சுப்பிரமணிய தேசிகர் அசையாமல் அமர்ந்திருந்தார். அவருடைய மேனியின் அமைப்பும் ஒளியும் ஏதோ ஓர் அழகிய விக்கிரகத்தை அங்கேவைத்துத் தூப தீபங்களுடன் பூசை செய்வதாகவே தோற்றச் செய்தன. கொலு நடைபெறும் இடத்தில் பெருங் கூட்டமாக இருந்தது. தேவாரப்
பண்ணிசையும் வாத்திய கோசமும் இடைவிடாமல் ஒலித்தன.

எல்லாவற்றையும் கண்டுகளித்துப் பின்பு பிள்ளையவர்கள் தங்கியிருக்கும் சாகைக்கு வந்தேன். ஆசிரியர் உறங்காமல் தம் நண்பராகிய மகாலிங்கம் பிள்ளையென்பவருடன் பேசிக்கொண்டே இருந்தனர். அவர்கள் பேச்சினால் அந்த மடத்துச் சம்பிரதாயங்களும் சுப்பிரமணிய தேசிகரது சிறப்பும் எனக்குத் தெரியவந்தன.

கொலு நடந்தபிறகு தேசிகர் சிரமப்பரிகாரம் செய்து கொள்ளாமல்
வந்தவர்களுக்கு விடைகொடுத்து அனுப்புவது வழக்கம். மறுநாள் காலையிலே
புறப்பட்டுப்போக வேண்டியவர்கள் குருபூசையன்று இரவே தேசிகரைத்
தரிசித்து உத்தரவு பெற்றுச் செல்வார்கள், குருபூசையன்று காலையில்
வேளாளப் பிரபுக்களும் பிறரும் தங்கள் தங்களால் இயன்ற பொருளைப்
பாதகாணிக்கையாக வைத்துத் தேசிகரை வணங்குவார்கள்
. அவர்களுக்கும்
மற்றவர்களுக்கும் அவரவர்கள் தகுதிக்கு ஏற்றபடி சம்மானம் செய்து அனுப்பும்
காரியத்தை ஆதீனகர்த்தர் குருபூசையன்று இரவு கவனிப்பார். சுப்பிரமணிய
தேசிகர் இவ்விடயத்தில் சிறிதேனும் தாமதம் செய்யாமல் வந்தவர்களுடைய
சௌகரியத்தை அனுசரித்து உடனுக்குடன் அனுப்பிவிடுவார். பிரபுக்களை
அனுப்புவதோடு வித்துவான்களையும் தக்க சம்மானம் செய்து அனுப்புவார்
.
பலர் மறுநாளும் இருந்து சல்லாபம் செய்து விடைபெற்றுச் செல்வதுண்டு.

செய்யுள் தானம்

இச்செய்திகளெல்லாம் பிள்ளையவர்களும் மகாலிங்கம் பிள்ளையும்
பேசிக்கொண்டிருந்த சம்பாசணையால் தெரியவந்தன. கொடையாளிகள்
கொடை பெறுவாருடைய சௌகரியத்துக்கு ஏற்றபடி நடந்து கொள்வதை நான்
அதற்கு முன் எங்கும் கேட்டதில்லை; கண்டதுமில்லை. சுப்பிரமணிய தேசிகர்
அத்தகையவரென்பதை அறிந்தபோது அவருக்கு ஏற்பட்டிருக்கும் புகழ் முற்றும்
தகுதியானதே என்று நினைத்தேன். நான் அக்காட்சியை நேரே சிறிது நேரம்
பார்த்துவிட்டும் வந்தேன்.

மகாலிங்கம் பிள்ளை பேசி விடைபெற்றுச் சென்ற பிறகு ஆசிரியர்
அவ்வீட்டின் இடைகழித் திண்ணையில் சயனித்துக் கொண்டார். ஒரு
நிமிடங்கூட இராது; அதற்குள் யாரோ ஒரு முதியவர் வந்தார். அவர் பெயர் பசுபதி பண்டாரமென்பது. அவர் பழைய கதையையெல்லாம் சொல்ல ஆரம்பித்தார். பிள்ளையவர்களை இளமையில் அவர் பரீட்சைஷை செய்தாராம். அவசரமாக ஊருக்குப் போக வேண்டுமாம். இன்னும் என்ன என்னவோ சுற்றி வளைத்துப் பேசினார்.
கடைசியில் தமக்கு ஒரு செய்யுள் இயற்றித்தந்தால் சுப்பிரமணிய தேசிகரிடம்
தாமே செய்ததாகச் சொல்லிச் சம்மானம் பெற அனுகூலமாகும் என்று
சொன்னார். அக்கவிஞர்பிரான் உடனே சருவசாதாரணமாக ஒரு பாடலை
எழுதச்செய்து அவரிடம் அளித்தார். அவர் அதை வாங்கிக்கொண்டு போனார்.
ஆசிரியர் மறுபடியும் கீழே படுத்தார். அடுத்த நிமிடமே மற்றொருவர்
வந்தனர். அவரும் ஒரு செய்யுள் செய்து தரும்படி யாசித்தார்.

இப்படியே ஒருவர் பின் ஒருவராக அன்று இரவு முழுவதும் பலர்
பிள்ளையவர்களிடம் பாடல் வாங்கிக் கொண்டு போய்ச் சுப்பிரமணிய
தேசிகரிடம் சம்மானம் பெற்றுச் சென்றார்கள். இந்த ஆச்சரியமான
நிகழ்ச்சிகளை நான் சில நாழிகை பார்த்தேன். பிறகு கண்ணயர்ந்தேன். விடியற்
காலையில் எழுந்தபோதுதான் ஆசிரியர் இரவு முழுவதும் தூங்கவேயில்லை
என்று தெரிந்தது.

புலவரும் புரவலரும்

பொழுது விடிந்தவுடன் அவர் அனுசுட்டானம் செய்து கொண்டு
சுப்பிரமணிய தேசிகரிடம் சென்றார். நானும் உடன் போனேன். அவர் இரவு
முழுவதும் கையோயாமல் கொடுத்தும் சலிப்பில்லாமல் காலையில் குளியல்
முதவியவற்றை முடித்துக் கொண்டு மறுபடியும் தம் திருக்கை வழக்கத்தைத்
தொடர்ந்து நடத்தி வந்தார். பிள்ளையவர்களைக் கண்டவுடனே அவருக்கு
முகமலர்ச்சியும் அதன் மேல் ஒரு சிரிப்பும் உண்டாயின. பிள்ளையவர்கள்
அவரை வந்தனம் செய்துவிட்டுத் திருநீறிடப்பெற்று ஓரிடத்தில் அமர்ந்தார்.

இராத்திரி பலபேர் தங்களுக்குச் சிரமம் கொடுத்து விட்டார்கள்போல
இருக்கிறதே!” என்று தேசிகர் கேட்டார்
. ஆசிரியர் புன்னகை பூத்தார்.

“ஒவ்வொருவரும் பாடல் சொல்லும்போது நமக்குப் பரமானந்தமாகி
விட்டது. என்ன பாட்டு! என்ன வாக்கு! எங்கிருந்துதான் விளைகிறதோ!”
என்றார் தேசிகர்.

“எல்லாம் மகாசந்நிதானத்தின் திருவருட் பலந்தான்” என்று
பணிவோடு கூறினார் ஆசிரியர். நாச்சலிக்காமல் பாடும் உங்கள் பெருமையை நேற்று இரவு நன்றாகத் தெரிந்து கொண்டோம்”

“கை சலிக்காமல் கொடுக்கும் சந்நிதானத்தின் கொடையினால் தான்
எல்லாம் பிரகாசப்படுகின்றன.”

புலவரும் புரவலரும் பேசிக்கொள்ளும் வார்த்தைகளுக்கு
அளவுண்டோ? அங்கே இருந்தவர்கள் யாவரும் விசயத்தைச் சுப்பிரமணிய
தேசிகரிடம் கேட்டு ஆச்சரியத்தால் தம்பித்துப் போனார்கள்.

தாயினும் அன்பு

பிறகு ஆசிரியர் விடைபெற்று வெளியே வந்து கொலு மண்டபத்தில்
நின்றிருந்த காரியத்தராகிய இராமையரென்பவரை அழைத்தார்; “சாமிநாதையர்
காலையில் ஆகாரம் செய்து கொள்வது வழக்கம்; அதற்கு ஏற்பாடு செய்ய
வேண்டும்” என்று அவரிடம் சொன்னார். அவர் என்னை அழைத்துக்கொண்டு
அக்கிரகாரத்துக்குச் சென்றார். தம்முடைய ஆகார விசயத்திலுள்ள
கவனத்தைக் காட்டிலும் என் ஆசிரியருக்கு என் உணவு விசயத்தில் இருந்த
சாக்கிரதை அதிகம்
. இதைப் பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன். தன்
குழந்தை வயிறு வாடப் பாராத தாயின் அன்புக்கும் என் ஆசிரியர் காட்டிய
அன்புக்கும் வேற்றுமையே இல்லை.
இதை நான் மனமார அறிந்தவன்.
கோட்டூரில் இருந்த காலத்தில் ஒரு முறை பிள்ளையவர்களைப் பற்றிப்
பேசும்போது, “பெற்ற தாயாரைவிட மிகவும் அன்பாக நடத்துகிறார்” என்று
சொன்னேன். அந்த வார்த்தைகள் என் தாயார் காதில் விழுந்தன. “என்ன
அப்பா அப்படிச் சொல்கிறாய்! தாயாரைக் காட்டிலும் ஒருவர் அதிக அன்பு
காட்ட முடியுமா?” என்று கேட்டார். என் வார்த்தைகளால் அவர் சிறிது
வருத்தத்தையே அடைந்தார். பெற்ற தாய்க்கு அன்பு இருக்கலாம்; ஆனால்
அதைச் செயலிற் காட்ட இயலாதபடி அவள் நிலை இருக்கும். என்
ஆசிரியருடைய அன்போ அவ்வப்போது செயல்களாகப் பரிணமித்தது.
அச்செயல்கள் மற்றவர்களுக்குச் சிறியனவாகத் தோற்றலாம். நான் அவற்றைப்
பெரியனவாகவே கருதுகிறேன்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.