(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 5/7 – இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம்

சென்னை வளர்ச்சிக் கழகம்

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்

முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு

பயன்பாட்டு அடிப்படையில்

கலைச்சொற்கள்

6/7

Act Of Legislature – சட்டமன்றச் செயன்மை

மாநிலங்களின் சட்டப் பேரவைகளால்(சட்டமன்றக்கீழவை, மேலவைகளால்) இயற்றி ஏற்கப்பெறும் செயன்மைகளைக் குறிக்கும்.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயன்மை என்பதாகும்.

Act of misconduct – தீய நடத்தை

தனித்தோ பிறருடன் சேர்ந்தோ உயர் அதிகாரியின் சட்டபூர்வமான முறையான ஆணைக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாமை அல்லது பணியாமை. முதலாளியின் வணிகம் அல்லது சொத்து தொடர்பில் இரண்டகம், நேர்மையின்மை, நம்பிக்கையின்மை, நாணயமின்மை, திருட்டு, மோசடி யுடன் செயற்படல்.

வெறுப்பு நடத்தை, சேதம், திருட்டு, பாதுகாப்பற்ற நடத்தை, பொதுக்கொள்கை மீறல்கள் ஆகியன முதன்மையான தீய நடத்தைகளாகும்.

சட்டத்தொழிலில், அதில் ஈடுபடுவோரால் வேண்டுமென்றே தவறான நோக்கத்தில் செயற்படல். அஃதாவது, தன்னல நோக்கங்களுக்காகத் தொழில் நெறிகளை மீறும் செயல்.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் நடத்தை என்பதாகும்.

Act of parliament – நாடாளுமன்றச் செயன்மை

நாடாளுமன்றச் சட்டங்கள், சட்ட அதிகாரத்தின் சட்டவாக்க அவையால் (மக்களவை, மாநிலங்களைவயால்/ நாடாளுமன்றத்தால்) நிறைவேற்றப்படும் சட்ட வரைவுகளைக் குறிக்கும்.

சில சமயங்களில் முதன்மைச் சட்டம் (primary legislation) என்றும் குறிப்பிடப்படுகின்றன.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயன்மை என்பதாகும்.

Act Of Parties –     தரப்பினரின் செயல்

எந்த ஒரு செயல், நிகழ்ப்பாடு(விவகாரம்), ஒப்பந்தம், வணிகப் பரிமாற்றம் அல்லது சட்ட நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபாடுள்ள அல்லது ஆர்வமுள்ளவர்கள் தரப்பினர் எனப்படுகின்றனர்.

வழக்காடியின் எதிர்நிலையில் உள்ளவரும் தரப்பார் எனப்படுகின்றனர்.

 சிலர் குறிப்பதுபோல் கட்சியினர் என்றால் அரசியல் கட்சியைச் சார்ந்தவர் எனப் பொருள் வரும் . எனவே, அச்சொல்லைப் பயன்படுத்த வேண்டா.

ஒப்பந்தம் அ்ல்லது வணிகப் பரிமாற்றத்தில் ஈடுபடுநர் உடன்படிக்கையின் தரப்பாராகக் கருதப்படுவர். பூசல் அல்லது தகராறு,  வழக்காக மாறும் பொழுது வழக்காடிகள் வழக்கின் தரப்பினர் என அழைக்கப் படுகின்றனர்.

 வழக்கு தொடுக்கப்பட்ட பின்பு கூடுதல் தரப்பினர் சேர்க்கப் படலாம்.

நீதிமன்ற நடவடிக்கைகளில் வழக்கு தரப்பினர் பொதுவான சொற்களால் அழைக்கப் படுகின்றனர். உரிமை வழக்கில், வழக்கு தொடுப்பவர் வாதி என்றும் வழக்கிற்கு ஆளாகிறவர் எதிர்வாதி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

குற்ற வழக்குகளில் அரசாங்கத் தரப்பு அரசு என்றும் எதிர்த்தரப்பு எதிரர்/எதிர்வாதி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

மேல்முறையீடு செய்பவர் மேல் முறையீட்டாளர் என்றும் அதற்கு உள்ளாகிறவர் மேல்முறை யீட்டு எதிரர் எனவும் அழைக்கப் படுகின்றனர்.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.

Act of public enemy  – பொது எதிரியின்  செயல்

குமுகாயத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள ஆளின் செயல்.

“பொது எதிரி” என்பது 1930 களில் அமெரிக்காவில் முதன்முதலில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்.

குமுகாயத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும், குற்றச் செயல்கள் புரிவோரையும் சட்ட முரண் செயல்களைச் செய்வோரையும் குறிப்பது.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.

Act Of State –    அரசுச் செயல்

கொள்கை அல்லது அரசின் தேவைக்காக இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. எனவே, இறையாண்மை சார் செயல் என்றும் கூறுகின்றனர்.

இறையாண்மை சார் செயல் அல்லது இறைமை நிலைச் செயல் என்பதன் மூலம், ஒரு நாடு தன்னுடைய இறைமை நிலையில் மற்றோர் இறையாண்மை நாட்டுடன் அல்லது அம்மக்களுடன் மேற்கொள்ளும் செயலைக் குறிக்கின்றனர். இச்செயல் அந்நாட்டின் செயலாண்மைப் பணியிலிருந்து – நிருவாகச் செயலிலிருந்து – வேறுபட்டது. இது குறித்து எந்த நீதிமன்றத்திலும் வழக்கிட முடியாது.

அரசுச்செயலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அச்செயலைச் செய்தவர் பொறுப்பாக மாட்டார். சான்றாகப் பொதுநலன் கருதி சாலையை அகலப்படுத்துதல், பாலம் அமைத்தல், போன்ற நலப்பணிகளைப் புரிய நிலத்தைக் கையகப்படுத்தும் அரசின் செயலைப் புரியும் சட்ட முறைமையான அதிகாரி குற்றவாளியாக மாட்டார்.

அஃதாவது, இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்துகையில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய சட்டப்படியான அதிகாரி பொறுப்பாக மாட்டார். ஆனால், உரிய சட்டத்தில் இழப்பீடு குறிக்கப்பட்டிருந்தால் மட்டும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படும்.

அரசின் அனைத்துச் செயல்களையும் குறிப்பிடாமல், சட்டத்தால் உருவாக்கப்பட்ட தனி விலக்குரிமைகள், தடைகள், வழக்காய்வு செய்யலாகாது என நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரமுறை விளம்புரைகள் ஆகிய சிலவற்றைச் சுட்டும் செய்கை. (சவுராட்டிர அரசு எதிர் ஃகாசி இசுமாயில் 1960 உ.நீ.அ.(SCR) 537).

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.

Act of terrorism – வன் செயல்

பயங்க வாதம் என்கிறோம். வாதம் என்றால் ஒன்றிற்காக வாதிடுவதைத்தான் குறிக்கிறது. வன்முறைப் போக்கிற்காகப் பேசுவதுடன் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதையும் குறிக்கிறது. எனவே, வன்முறைச் செயல் > வன் செயல் என்றே சொல்லலாம்.

இதனைத் தன்னாட்டு வன்முறை என்றும் பன்னாட்டு வன்முறை என்றும் கூறலாம்.

தன்னாட்டு வன்முறை அல்லது உள்நாட்டு வன்முறை என்பது அரசியல், சமயம், குமுகம், இனம் அல்லது சுற்றுச்சூழல் இயல்பு போன்ற உள்நாட்டுத் தாக்கங்களிலிருந்து மேலும் கருத்தியல் இலக்குகளுக்காக தனியர்கள்,  குழுக்களால் செய்யப்படும் வன்முறை, குற்றச் செயல்கள்.

பன்னாட்டு வன்முறை என்பது வெளிநாட்டு வன்முறைக் குழுக்களால் அல்லது வன்செயல் ஆதரவு நாடுகளால், ஈர்க்கப்பட்ட அல்லது அவற்றுடன் தொடர்புடைய தனியர் அலலது குழுக்களால் மேற்கொள்ளப்படும் வன்செயல்கள்; பிற நாட்டு வன்முறைக் குழுக்களுடன் தொடர்புடையவர்களின் வன் செயல்கள்.

வன்செயல்களுக்கான திட்டமிடல், பரப்புரையும் குண்டு வெடிப்பு, கொலை, கொள்ளை, தொடரிகளைக் கவிழ்த்தல் போன்ற வன்முறைகளை விளைவிப்பதால் வன் செயலே.

இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

(தொடரும்)