[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) – தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை)

இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி

  “பேராசிரியர் இலக்குவனார் இலங்கைத் தமிழர் நலன் குறித்து அப்பொழுதே பேசினார். வரைபடம் ஒன்றில் இலங்கையில்  தமிழர்பகுதியைத் தனியாகக் காட்டிப்  புத்தகம் ஒன்றில் வெளியிட்டார். திருச்சி வானொலி உரை ஒன்றில், இலங்கையில் உள்ள தமிழர்கள் தன்னுரிமையுடன் வாழ்ந்தால்தான் அவர்கள் அங்கே உரிமையுடன் நிலைத்து வாழ முடியும் என்றார். அக்காலக்கட்டத்தில் இலங்கைக்குச் செல்ல அழைப்பு வந்தபொழுது இவர் வந்தால் இலங்கை இரண்டாகும் என்று காரணம் சொல்லி இலங்கை நுழைவுரிமையை மறுத்து விட்டது”

என்றார். ஓர் உண்மையான தலைமைப் போராளியால்தானே  விடுதலை வேட்கையைத் தொலைநோக்குக் கண்ணோட்டத்துடன் கணிக்க இயலும். இந்திய அரசு தன் நாட்டு நலனுக்காக இலங்கைத் தமிழர்களைப் பலி கொடுக்கும் என்று எழுதியும் பேசியும் வந்தவரல்லவா? அவரது முன் விழிப்புணர்வை நாம் சரியாகப் பயன்படுத்தாததால்தானே ஈழத்தில் இன்றைய  இனப்படுகொலைகள் பெருமளவு பெருகி நம் ஆருயிர் தமிழர்களை இழந்து வருகிறோம்.

  பணி இல்லாத பொழுதும் மனச்சான்றுக்கு ஏற்ப நேர்மையாய் வாழ்ந்த பேராசிரியரின் சால்பிற்குச் சான்றாகவும் ஒரு நிகழ்ச்சியைத் திரு முருகு பாண்டியன் தெரிவித்தார்.

 “ஐந்தாம் படிவம்(பத்தாம் வகுப்பு)வரைதான் பள்ளியில் நடத்தப்பட்டது. பேராசிரியர் இலக்குவனார் வந்த பின்புதான் பள்ளி இறுதி வகுப்பு எனப்படும் (ஆறாம்படிவ)பதினொன்றாம் வகுப்பிற்கான  இசைவைப் பெற்றார். இதுவும் மக்கள் நலனையே நாடும் அவரது உயரிய பண்பைக் காட்டும். அப்பொழுது பள்ளிக் கல்வி இயக்குநராக இருந்த தம் நண்பர் திரு நெ.து.சுந்தரவடிவேலு அவர்களைச் சந்தித்துப் பள்ளிக்கு ஆறாம் படிவத்தின் (பதினொன்றாம் வகுப்பின்) தேவையை வலியுறுத்தினார். பேராசிரியர் இலக்குவனார் கல்லூரியில் பணியாற்றுவதற்குரிய முழுத் தகுதி உடையவராக இருப்பினும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்தான் தலைமை ஆசிரியராக முடியும். பதினொன்றாம் வகுப்பிற்கு இசைவு தந்தால் வேறு ஒருவரைத் தலைமை ஆசிரியராக ஆக்க வேண்டும். பேராசிரியர் இலக்குவனார் இயக்குநர் என்ற முறையில் செயல்பட வேண்டும் என்று இயக்குநர் தெரிவித்தார். விதிக்குக் குறுக்கே தான் நிற்கவில்லை என்றும் பகுதி மக்களின் வளர்ச்சிக்காகக் கட்டாயமாகப் பதினொன்றாம் வகுப்பு தேவை என்றும் சொல்லி இசைவாணை பெற்று வந்தார். வந்த பின்பு பள்ளியை நடத்துவோருக்குப் பெரும் அதிர்ச்சி. பதினென்றாம் வகுப்பு இப்போதைக்குத் தேவையில்லை என்றும் பேராசிரியர் இலக்குவனாரே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பேராசிரியர் இலக்குவனாரோ, இச்செயல் மாணவர் நலனுக்கு எதிரானது எனக் கூறி இதனை ஏற்கவில்லை. பள்ளிக்கல்வி இயக்குநர் கூறியவாறு பள்ளி இயக்குநராகவாவது தொடர வேண்டும் என வேண்டினர். “பள்ளியின் பொருளியல் நிலைக்கு அது வீண் செலவாகும். எனவே, பள்ளி நலனுக்கு எதிராக இச்செயல் அமையும்” என்று பேராசிரியர் இலக்குவனார் மறுத்து விட்டார். தனக்கு வேண்டியவாறு விதிகளை உருவாக்கிப் பதவிகளை அடைவோர் நடுவே நடைமுறை விதிகளுக்கு இணங்கப் பதவியைத் துறந்த பேராசிரியர்போல் ஒரு மாமணியை எங்கும் பார்க்க இயலாது.”

    திருவெறும்பூரில் பணியைத் துறந்த பின் முன்பு விருதுநகரில் தம்மிடம் பயின்ற மாணவர் அழைப்பிற்கிணங்கப் புதுக்கோட்டை சென்றார். அங்குத் தனிப்பயிற்சிக் கல்லூரி எதுவும் இல்லை யாதலின் பேராசிரியர் இலக்குவனார் அதனைத் தொடங்க வேண்டும் என்றே அவர் அழைத்திருந்தார். அப்பணியுடன் வழக்கமான தமிழ்த் தொண்டுகளை ஆற்றவும் பேராசிரியர் இலக்குவனார் தவறவில்லை.

(தொடரும்)

 – இலக்குவனார் திருவள்ளுவன்