[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி) தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ)

பேராசிரியர் இலக்குவனாரின் உழைப்பால் மக்களிடையே ஏற்பட்ட தமிழுணர்வை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய தி.மு.க. ஆட்சியிலும் இதே அவலம்தான் தொடர்ந்தது. 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டிலும்,

தமிழ்மொழிப்பற்றும் தாங்கிய புலமையும்

 இல்லோரெல்லாம் இனிதிடம் பெற்றனர்

எம்போன்றோரை எள்ளியே தள்ளினர்

எனப் பேராசிரியர் இலக்குவனார் வருந்தும் அளவிற்குத் தமிழ்ப்பகைவர்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. பகைவரையும் நட்பாக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அன்பர்களின் சிறப்பைப் புறக்கணிக்கும் போக்கு இருந்தது. இருப்பினும் கட்டணம் செலுத்திப் பேராளராகப் பங்கேற்றுத் தமிழுக்கு எதிரான கருத்துகளைத் தமிழ்ப்பகைவர்கள் ஒலிக்கும் பொழுதெல்லாம் எதிர்த்து முழங்கிய அரிமாவாகப் பேராசிரியர் இலக்குவனார் திகழ்ந்தார். குறிப்பாகப் பிரான்சு நாட்டின் பேராசிரியர் ழீன் பிலியோசா இந்தியா முழுவதும் ஆரியம் பொதுமொழியாக இருந்ததாகத் தவறான கருத்து தெரிவித்தபொழுதும் ஐராவதம் மகாதேவன் கி.மு. முதல் நூற்றாண்டில்தான் தமிழ் எழுத்து வடிவம் கண்டது என வடிகட்டிய பொய்யை உதிர்த்த பொழுதும் பேராசிரியரின் கருத்துச் சம்மட்டிகள் அவற்றைத் தவிடுபொடியாக்கின எனலாம். தமிழ் மாநாடுகளின் நிலை குறித்த பேராசிரியரின் படப்பிடிப்பு வருமாறு:

 

 இன்தமிழ் பற்றி எவரும் எதனையும்

 துணிந்து கூறுவர்; பணிந்து கேட்டிடத்

 தமிழரும் உண்டு, தமிழறி வின்மையால்.

 தமிழ் பழித்தோனைத் தாய் தடுத்தாலும்

 விடேன் எனும் வீறுவிட்டே வாழ்வோர்.

 உண்மை வரலாறு ஓர்ந்து அறியாப்

 புல்லறி வுடையோர், புதிய கருத்தென

 இன்றமிழ் நூல்கள் எழுந்த காலத்தைப்

 பின்னே தள்ளிப் பெருமை அடைவர்!

 பட்டமும் பதவியும் பாரில் பெறுவர்!

 சான்றுகள் காட்டி ஆன்ற உண்மையைச்

 சாற்றும் புலவரைத் தூற்றி ஒதுக்குவர்!

 

இன்றைக்கும் இந்த நிலையே மேலோங்கி உள்ளமையால்தான் தமிழுக்காகக் குரல் கொடுப்போர் யாருமிலர் என்னும் அவலமும் மேலோங்குகிறது.

இதற்கிடையில் கல்வியமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் தமிழ்ப்பயிற்று மொழிக்கு எதிராகப் பேசியதால், “அவர் தமிழ் நாவலரா அல்லது  ஆங்கிலக்காவலரா” எனப் பேராசிரியர் இலக்குவனார் கேட்டது அவரிடம் நடுநிலை பிறழும் உணர்வை ஏற்படுத்தியது.  நாவலர் உரைகளை ஆங்கில இதழிலும் வெளியிட்டு அவர் கருத்தைப் பரப்பிய பேராசிரியர் இலக்குவனார் தமிழ்நலம் சார்ந்து கூறிய கருத்தைத்  தனக்கு எதிரானதாக எண்ணி அவருக்கு இடையூறு தந்தார். பேராசிரியர் இலக்குவனார் மதுரைத்தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய பொழுது அங்குள்ள மாணவர்கள் நாவலரை விழா ஒன்றிற்கு அழைக்க இருந்தனர். கல்லூரி முதல்வர் இசைவு தராமல் தடுத்து விட்டார். பேராசிரியர் இலக்குவனார்,  மாணவர்கள் கருத்தைக் கேட்கும் உரிமையைப் பறிக்கக் கூடாது என்றும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதால் எல்லா வகைச் செய்திகளையும் கேட்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நல்ல பேச்சாளர்கள் அரசியல்வாதிகளாக உள்ளமையால் அவர்களைப் புறக்கணிக்க இயலாது என்றும் கூறி நாவலரைக் கல்லூரிக்கு அழைக்கச் செய்தார். யார் வருகைக்கான தடையை நீக்கப் பேராசிரியர் முனைந்து வெற்றி கண்டு வரச் செய்தாரோ, அந்த நாவலர்தாம் பேராசிரியர் இலக்குவனார் தமிழகக் கல்லூரிகளில் பணியாற்றுவதை விரும்பவில்லை. அவர் எண்ணியிருந்தால் ஒருநாளிலேயே பேராசிரியர் இலக்குவனாரின் பணிச்சிக்கல் தீர்ந்திருக்கும்.

  தமிழன்பர்கள் சிலர், மொழிபெயர்ப்பு நூல்களுக்குப் பரிசளிக்கும் திட்டம் அல்லது நிதிஉதவித்திட்டம் மூலம் ஐந்தாயிரம் உரூபாய் நிதி உதவி கிடைக்கும் என்று பேராசிரியரிடம் கூறி விண்ணப்பிக்க வேண்டினர்.  பேராசிரியர், தாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தொல்காப்பிய நூலுக்கான நிதி உதவி  வேண்டினார். உரிய பரிந்துரையுடன் கல்வியமைச்சருக்குக் கோப்பு சென்றது. “நிதி உதவி கிடைக்கும். நூல்வெளியீட்டுக் கடனை அடைக்கலாம்” என எண்ணினார் பேராசிரியர். விதி வகை இல்லாவிட்டாலும்கூட இத்தகைய மொழிபெயர்ப்பை ஊக்கப்படுத்தித் தமிழின் பெருமையை அயல் மொழிகளில் எடுத்துரைக்கப் புலவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் அரசு. ஆனால், கல்வியமைச்சரோ, “நம்மைக்கேட்டா எழுதினார்? அவரே நூலகங்களில் வைத்திட முயலட்டும். அவர்க்கு உதவி தேவை  யில்லை” எனப் பரிந்துரையை ஏற்காமல் மறுத்து எழுதியதால் அத்தொகை கிடைக்கவில்லை.

 பேராசிரியரின் தொல்காப்பிய ஆங்கில மொழி பெயர்ப்புத் திறனாய்வு நூலுக்குப் பேரறிஞர்தான் அணிந்துரை வழங்கியிருந்தார். சென்னையில் உலகத்தமிழ்மாநாடு நடைபெற்ற பொழுது இதற்கெனத் தனி அமர்வை ஒதுக்கினார். (ஆனால் இந்நிகழ்ச்சியுடன் தமிழகப்புலவர்குழு வரவேற்பையும் இணைத்ததால் நிகழ்ச்சி திட்டமிட்டவாறு அமையாமல் திசை திரும்பியது.) ஒருபுறம் முதல்வர் இந்நூலைச் சிறப்பிக்கும் வகையில் தாம்போகும் வெளிநாடுகளில் இதனை வழங்குகின்றார். மறு புறம் அனைத்துக் கல்வி நிலையங்களையும் நூல்நிலையங்களையும்  வாங்குமாறு ஆணையிடும் அதிகாரத்தில் உள்ள அமைச்சரோ மொழி பெயர்ப்பு நூல்களுக்கு உள்ள நிதிஉதவியைக்கூடத் தர மறுக்கிறார். இவ்வாறு, தமிழின் பேரைச் சொல்லித் தகுதிகள் பெற்றவர்கள் தமிழ்நலம் நாடாமலும் நன்றி கொன்றும் நடக்கும் போக்கால் வருந்திய பேராசிரியர் இந்நிகழ்வு குறித்துப் பின்வருமாறு நாட்குறிப்பில் குறித்துள்ளார்:

 

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்