(தோழர் தியாகு எழுதுகிறார் 25 : ஏ. எம். கே. (6) – தொடர்ச்சி)

 நாற்று பறித்த ராமன்

பொன் நாடார் கொலை தொடர்பாக நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகும் தோழர் ஏ.எம். கோதண்டராமன் சில மாதக் காலம் கடலூர் மத்திய சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தார். இடையிடையே வேறு சில வழக்குகளுக்காக அவர் சென்னைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள மத்தியச் சிறையில் வைக்கப் பட்டார். கடலூர் நீதிமன்றத்தில் அவர் மீது கொலை முயற்சி வழக்கு இருந்தது.

யாவற்றிலும் பெரிய வழக்கு — சதி மற்றும் கொலை வழக்கு — தஞ்சை நீதிமன்றத்தில் ருந்தது. நானும் இலெனினும் எந்த வழக்கில் தண்டனை பெற்றிருந்தோமோ அதே வழக்கு! அந்த வழக்கில் முதல் எதிரி நான், கடைசி எதிரி ஏஎம்கே. மொத்தம் ஏழு எதிரிகளில் முதலில் பிடிபட்ட எங்கள் நால்வர் மீதும் வழக்கு விசாரணை முடிந்து தண்டனையும் கொடுத்தாயிற்று. மற்றவர்கள் அது வரை பிடிபடாததால் அவர்கள் மீதான வழக்கைப் பிரித்து(Split) நடத்தியாக வேண்டும்.

இப்போது ஏஎம்கே பிடிபட்டு விட்டதால், அவரை மட்டும் குற்றக் கூண்டில் நிறுத்தி மீண்டும் ஒரு முறை வழக்கு விசாரணையை நடத்தியாக வேண்டும்.

அப்போது திருச்சி சிறையில் இருந்த நாங்கள் தஞ்சை நீதி மன்றத்தில் ஏ.எம். கே. மீதான வழக்கு விசாரணை தொடங்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தோம். வழக்கின் மீது அக்கறை கொண்டதால் அல்ல. அது பற்றி நாங்கள் பெரிதாக யோசிக்கவே இல்லை . தஞ்சையில் வழக்கு என்றால் ஏஎம்கேயை திருச்சி சிறையில்தான் வைத்தாக வேண்டும். அவரைப் பார்த்து நான்காண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. அவரைப் பார்த்து அவரோடு பேசவும் நாங்கள் ஆவல் கொண்டு காத்திருந்தோம்.

என்னையும் இலெனினையும் பொறுத்த வரை பாச உணர்ச்சிக்கு மேற்பட்ட ஒரு காரணமும் இருந்தது. நாங்கள் எந்த இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறைப்பட்டோமோ அந்த இயக்கத்துடன் சிறையில் கருத்து மாறுபாடு கொண்டு விலகி நின்றோம். வருங்காலத்துக்கான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருந்தோம்: வெளியே எங்களை வழிநடத்திய தோழர் ஏஎம்கேயுடன் இது குறித்து விவாதிக்க விரும்பினோம். அதற்காக அவரது வருகையை எதிர்பார்த்திருந்தோம்.

தோழர் இலெனினைப் பொறுத்த வரை, ஏஎம்கேயால் ஈர்க்கப்பட்டு புரட்சிகர இயக்கத்துக்கு வந்தவர். ஆனால் நம்புவதற்கே கடினமான செய்திதான், அப்போதெல்லாம் அவருக்கு ஏஎம்கேயை ஏஎம்கே. என்று தெரியாது. பெரியவராகவும் தோழர் சங்கரனாகவும்தான் தெரியும். முன்பின் அறிமுகமில்லாத — இன்னார் என்றே தெரியாத — ஒருவரின் வழிகாட்டுதலை நம்பி ஏற்று, மனைவி மக்களைத் துறந்து உயிரைக் கொடுக்கவும் சித்தமாய்ப் புரட்சிகர இயக்கத்தில் இணைவது என்றால்… அந்தப் பெருமையில் பெரும் பங்கு ஏஎம்கேயின் ஒப்படைப்புணர்வையும் அயராத உழைப்பையும் சாரும்.

தோழர் ஏஎம்கேதான் என்னைப் பந்துவக்கோட்டை வரச்சொல்லி இலெனின், குருமூர்த்தி,  இராசப்பா முதலான தோழர்களிடம் அறிமுகம் செய்து வைத்தவர். அப்போதெல்லாம் தோழர் இலெனின் அவரைப் பெரிய ஐயா என்றும் என்னைச் சின்ன ஐயா என்றும் அழைப்பார்.

இலெனினும் மற்றத் தோழர்களும் ஏஎம் கோதண்டராமன் என்ற பெயரையே ‘கியூ’ பிரிவு போலீசார் சொல்லித்தான் தெரிந்து கொண்டார்கள். அந்தப் பெயருக்குப் பின்னாலிருந்த வரலாற்றைச் சிறையில் நான் அவர்களுக்குச் சொன்னேன்.

வட ஆற்காடு மாவட்டம் ஆரணிக்கு அருகில் உள்ள ஆனைமநல்லூர் ஏஎம்கேயின் சொந்த ஊர். நிலவுடைமைக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், பள்ளிப் பருவத்திலேயே பகுத்தறிவுக் கருத்துகளிலும் சமூகச் சீர்திருத்தத்திலும் ஈடுபாடு கொண்டு திராவிடர் கழகத்தில் இயங்கி வந்தார். திகவிலிருந்து திமுக பிரிந்த போது இரண்டும் வேண்டா என்று பொதுவுடைமைக் கட்சிக்கு மாறி விட்டார். வயது 16, ஆண்டு 1950.

வேலூர் ஊரிசு கல்லூரியிலும், பிறகு சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்த போது, தீவிர அரசியல் ஈடுபாட்டுடன் பொதுவுடைமை இயக்கத்துக்காக உழைத்தார். படிப்பு முடிந்து சிறிது காலமே வழக்கறிஞராகப் பணி புரிந்தார். வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் புரட்சிக்காகவே ஒப்படைக்கத் துடித்துக் கொண்டிருந்த அந்த இளைஞருக்குக் கறுப்பு மேலாடையும் அங்கியும் மாட்டி வழக்குரைஞர் தொழில் செய்வது சரிப்பட்டு வரவில்லை. ஒருநாள் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு முழு நேர இயக்கப் பணிக்கு வந்து விட்டார்!

மார்க்குசியப் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியராகத் தொழிற்சங்கப் பணியாற்றத் தோழர் ஏஎம்கே ஆவடி-அம்பத்தூர் பகுதிக்கு அனுப்பப்பட்டார். வில்லிவாக்கத்திலிருந்து பட்டாபிராம் வரை ஏராளமாய்ப் புதிய தொழிற்சாலைகள் முளைத்துக் கொண்டிருந்த காலம் அது. அந்தப் பகுதியில் தொழிலாளர்களை அமைப்புவழியில் திரட்டித் தொழிற்சங்கம் கட்டும் பொறுப்பை ஏஎம்கே திறம்பட நிறைவேற்றினார்.

1967 தேர்தலுக்குப் பின் மா.பொ.க. (சிபிஎம்) கட்சிக்குள் மூண்ட கருத்துப் போராட்டத்தில் தலைமையுடன் கடுமையாக மோதிக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் ஏஎம்கே. அவரோடு சேர்த்துக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களில் தொழிற்சங்கத் தலைவர் குசேலரும் ஒருவர்.

நக்குசலைட்டு(Naxalite) இயக்கம் எனப் பெயர் பெற்ற இ.பொ.க.(மா.இலெ.)/CPI(M.L.) கட்சியைத் தமிழகத்தில் தோழர் எல். அப்புவுடன் சேர்ந்து நிறுவியவர் ஏஎம்கே .உடனடி ஆயுதப் போராட்டம், சிற்றூர்ப் புறங்களில் வருக்கப் பகைவரை அழித்தொழிப்பது,  மக்கள்திரள் போராட்டங்களைக் கைவிட்டு கரந்தடிப் போர் முறையை (Guerrilla warfare) மேற்கொள்வது என்றெல்லாம் கட்சி நிலையெடுத்த போது, தயக்கமோ தாமதமோ இல்லாமல் இந்த முடிவுகளை ஏற்று, நகர வாழ்வையும் தொழிற்சங்க அரசியலையும் துறந்து தஞ்சை மாவட்டச் சிற்றூர்ப்புறத்துக்கு வந்து விட்டார் ஏஎம்கே!

முதல் சந்திப்பிலேயே என்னைப் பார்த்து, “மற்றதையெல்லாம் உடைப்பது இருக்கட்டும், உங்கள் குடும்பத்தை உடைத்து விட்டு வெளியே வாருங்கள்” என்று சொன்னவர் ஏஎம்கே.

அந்த முதல் சந்திப்பை மறக்கவியலாது. நக்குசல்பாரி இயக்கமாக அறியப்பட்ட மா-இலெ கட்சியை எனக்கு அறிமுகம் செய்தவர், என்னை இயக்கத்துக்கு வென்றெடுத்தவர் பேராசிரியர் இராதாகிருட்டிணன் (இப்போது தோழர் மருதமுத்து). அவரும் நானும் தோழர் பாசுகரனும் ஆசிரியர் தோழர் சிவானந்தமும் சில மாணவர்களும் குடந்தை நகரில் ஒரு குழுவாக இயங்கிக் கொண்டிருந்தோம். கல்கத்தாவிலிருந்து வந்து கொண்டிருந்த (இ)லிபரேசன் இதழையும் கோவையிலிருந்து வந்து கொண்டிருந்த ‘புதிய தலைமுறை’ இதழையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தோம். நாங்களே ‘புதிய உலகம்’ என்ற திங்களேடு தொடங்கத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தோம். நான் அந்த ஏட்டுக்கு ஆசிரியர் என்று முடிவாகியிருந்தது. ஆனால் எங்களுக்குக் கட்சியோடு தொடர்பில்லை.

திருச்சிராப்பள்ளியில் ஆசிரியர் தோழர் ’அசுரனோடு’ இராதாவுக்குத் தொடர்பிருந்தது. கட்சியோடு தொடர்பு வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.  

1969 செட்டம்பர்த் திங்கள் ஒரு வெள்ளிக் கிழமை இரவு அசுரனோடு பெரியவரும் (ஏஎம்கே) குடந்தையில் பேராசிரியர் இராதாவின் இல்லத்துக்கு வந்து சேர்ந்தனர். அக்கா இந்திரா எங்களுக்கு உணவு பரிமாறியவுடனே ஏஎம்கே ’உட்காருவோமா?’ என்று கேட்டு, சுற்றி எங்களை உட்கார வைத்துக் கொண்டு அறிக்கையுரை அளிக்கத் தொடங்கி விட்டார். உடனே ஆய்தப் போரட்டம், ஊர்ப்புறத்துக்குச் சென்று அழித்தொழிப்புக்கு விவசாயத் தொழிலாளர்களை ஆயத்தப்படுத்துவது என்று சொல்லி விட்டு, அழித்தொழிப்பை நியாயப்படுத்த சாரு மசூம்தார் கூறியவற்றை எடுத்துக்கட்டினார். 1905 முதல் உருசியப் புரட்சியின் தோல்வி குறித்து இலெனின் எழுதிய “மாசுகோ எழுச்சி குறித்து”/ “On the Moscow Uprising” என்ற கட்டுரையைப் படித்துக்காட்டி விளக்கினார்.   

விடியற்காலை புறப்படும் முன் ”சரி, நீங்க என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டார். “தியாகு எப்போதோ முடிவு செய்து விட்டார், கட்சித் தொடர்புக்காகத்தான் காத்திருந்தோம், இப்போதைக்கு அவரை ஆசிரியராகப் போட்டு பத்திரிகை நடத்தத் திட்டமிட்டிருக்கோம்” என்று இராதா சொன்ன போது ஏஎம்கே வேகமாகத் தலையசைத்து மறுத்தார்: ”தியாகு ஒரு பாட்டாளிய மாணவர் (proletarian student) எனத் தோன்றுகிறது. அவரை உடனே சிற்றூருக்கு அனுப்புங்கள். பத்திரிகை வேலையெல்லம் மற்றவர்கள் பாருங்கள். புரட்சிதான் அவசரப் பணி.” என்னைப் பார்த்து தியாகு, முதலில் உங்கள் குடும்பத்தை த் துண்டித்துக் கொள்ளுங்கள் (“Thiagu, you first break your family”) என்று சொல்லிப் பெரும்பண்ணையூர் தோழர் ஆர். மாணிக்கம் முகவரியை எழுதிக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார். இரண்டே நாளில் படிப்புச் சான்றிதழ்கள் அனைத்தையும் எரித்து விட்டு நான் பெரும்பண்ணையூர் சேரி போய்ச் சேர்ந்தேன்.]

அவரோடு ஏறத்தாழ ஓராண்டுக் காலம் தஞ்சை மாவட்டத்துச் சேரிகளில் வேலை செய்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. வேலை என்றால் இயக்க வேலை மட்டுமல்ல!

மக்களுடன் ஒன்றுகலப்பதன் பகுதியாக நான் வயல் வேலைக்குச் செல்லத் தொடங்கிய போது என்னை அவர் பாராட்டினார். பாராட்டிய தோடு நில்லாமல் அவரும் வயல் வேலைகளைப் பழகிக் கொண்டு செய்யத் தொடங்கி விட்டார்.

பட்டுக்கோட்டைப் பக்கம் நம்பிவயல் அருகே ஒரு சிற்றூரில் நாங்கள் இருவரும் நாற்றுப் பறிக்கும் வேலைக்குப் போயிருந்தோம். அந்த நிலம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தோழர் ஒருவருக்குச் சொந்தமானது. நாற்றுப் பறிக்க வந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் சேரிக்காரர்களே என்றாலும், குடியானவத் தெருவிலிருந்தும் சிலர் வந்திருந்தனர்.

வேலைக்கு நடுவில் அனைவருக்கும் வரப்பில் வைத்துத் தொன்னையில் கூழ் ஊற்றுவார்கள். வரிசையாக நின்று தொன்னையில் கூழ் வாங்கிக் குடிக்க வேண்டும். குடியானவத் தெருக்காரர்கள் அது வரை சேர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாலும் கூழ் வாங்கிக் குடிக்க வராமல் ஒதுங்கி நின்று கொள்வார்கள். நிலவுடைமையாளராகவே இருந்தாலும் சேரிக்காரர் சேரிக்காரர்தான்கூலிக்காரராகவே இருந்தாலும் சாதிக்காரர் சாதிக்காரர்தான் என்பதில் அவர்கள் தெளிவாய் இருப்பார்கள்.

ஏஎம்கேயும் நானும் வரிசையில் நின்று தொன்னையில் கூழ் வாங்கிக் குடித்த போது குடியானவத் தெருக்காரர்களுக்குத் திகைப்பு! அது வரை எங்களைத் தங்கள் ஆள் என்று எண்ணியிருக்க வேண்டும்!

கூழ் குடித்து முடித்து சேற்று நீரில் கைகழுவி புறங்கையால் வாய் துடைத்து வெற்றிலைபாக்கு மென்று சுவைத்தபடி ஏஎம்கே மீண்டும் நாற்றுப் பறிக்கக் கால் மடித்து உட்கார்ந்த போது அருகிலிருந்தவர் சன்னமான குரலில் கேட்டார்:

“ஏனையா நீங்களும் போய் அவன்களுடன் கூழ்  வாங்கிக் குடிக்கிறீர்கள்? ஏதோ வேலைக்கு வந்துவிட்டோம் என்பதால் சாதியை விட்டுவிட முடியுமா?”

ஏஎம்கே சிரித்துக் கொண்டே சொன்னார்: ”நாங்களும் சேரிதான். சொந்தக்காரர்கள். வெளியூரில் இருந்து வந்துள்ளோம்.”

கேட்டவர் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொண்டார். அன்றிரவு ஏஎம்கேயிடம் நான் கேட்டேன்: “நீங்கள் அப்படிச் சொன்னீர்களே, அவன் நம்மைத் தெரிந்து கொண்டு காட்டிக் கொடுத்துவிடப்  போகிறான்”

அப்போது நாங்கள் தலைமறைவாக இருந்தோம். ஏஎம்கே சொன்னார்:

நாம் புரட்சி செய்ய வேண்டும் என்றால் நம்முடைய வருக்க நிலையிலே இருந்து இறங்கி வருகிற மாதிரி சாதி நிலையிலே இருந்தும் இறங்கி வர வேண்டும். நமக்குச் சாதி இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தால் போதாது. சாதி பேரில் மிக அதிகமாக ஒடுக்கப்படுகிறவர்களுடன் ஒன்றாயிட வேண்டும். அதை மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும். அதுதான் நமக்கு உண்மையான பாதுகாப்பு.”

தஞ்சையில் நடைபெறவிருந்த வழக்கு விசாரணைக்காகக் கடலூரிலிருந்து ஏஎம்கே திருச்சி சிறைக்கு மாற்றப்படும் செய்தி கிடைத்து நாங்கள் ஆவலோடு காத்திருந்தோம். திருச்சி சிறைக்குக் கொண்டுவரப்பட்ட போது அவரும் கூட எங்களையும் மற்ற தோழர்களையும் சந்திக்கும் ஆவலோடுதான் வந்திருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அவரை எங்களோடு வைக்காமல், தனியாக ஓரிடத்தில் அடைத்து வைத்தார்கள். ஏமாற்றம்! ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள எங்களுக்குத் தேவைப்பட்டது மனவுறுதி!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு – தாழி மடல் 20