இனிதே இலக்கியம் – 8 எண்ணும் வகையிலான கடவுள் – கம்பர்
8
எண்ணுவோர்க்கு எண்ணும் வகையிலான கடவுள் – கம்பர்
ஒன்றே யென்னின் ஒன்றேயாம்
பலவென் றுரைக்கிற் பலவேயாம்
அன்றே யென்னின் அன்றேயாம்
ஆமே யென்னின் ஆமேயாம்
இன்றே யென்னின் இன்றேயாம்
உளதென் றுரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடிவாழ்க்கை
நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா
கம்பரின் இறை வணக்கப் பாடல்களுள் இதுவும் ஒன்று.
“கடவுள் ஒருவரே என நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கடவுள் ஒருவன்தான்; வெவ்வேறு கடவுள்களாக நம்புவோருக்குப் பலவாகத் தோற்றமளிக்கிறார். அஃதாவது கடவுள் எல்லா உயிர்களையும் இயக்கும் ஒரு தனிப் பெரும் ஆற்றல் என்பதால் ஒன்றே என எண்ணுவோருக்கு ஒன்றாக விளங்குகிறார். பல உயிர்களிலும் உறைந்து உள்ளமையால் பல என எண்ணுவோருக்குப் பலவாகத் திகழ்கிறார். கடவுளுக்கு இன்னின்ன தன்மைகள் இல்லை என்றால் இல்லைதான். மாறாக கடவுளிடம் இன்னின்ன தன்மைகள் உள்ளன என்றால் உள்ளனவே. கடவுளே இல்லை என்றாலும் இல்லைதான். கடவுள் உள்ளதாகக் கருதினால் உள்ளவனே. இப்படி எல்லாத் தன்மையாகவும் தோன்றும் கடவுள் நிலை பெரிதே. சிற்றறிவுடைய நம்மால் இறைநிலையை உணர்ந்து பிழைக்கும் வழி யாதோ!”
ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இல்லார்க்குப் பல நாமம் சூட்டி அழைப்பதும் மக்கள் வழக்கம் அன்றோ! எனவே, கடவுளின் தன்மைகளுக்கேற்ப பொதுநிலைப் பாடலாகக் கம்பர் எழுதி உள்ளார்.
இறைவனை உருவமாகவும் அருவமாகவும் உளதாகவும் இலதாகவும் கற்பிக்கும் பாடல்களுள் ஒன்றாகக் கம்பரின் பாடலும் அமைந்துள்ளது.
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply