எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 26. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -2: இலக்குவனார் திருவள்ளுவன்

(கொல்லும் சொல் : ‘மாடல்’ – எண்ணுவோம் தமிழில் : தொடர்ச்சி)
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்!
26. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -2
“ராமே ஆண்டாலும்.. ராவணன் ஆண்டாலும்…”
என்பது அண்மையச் செய்தியிதழ்களில் காணக்கிடக்கும் தொடராகும்.
“இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டால் என்ன?” என்பதுதான் வழக்கு மொழி.
“ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” எனத் தவறாகப் பெயரிட்டுத் திரைப்படம் ஒன்று வந்து விட்டது. இப்போது இந்தத் தப்பான தொடரையே எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறார்கள்.
“இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டால் என்ன?” என்று சலிப்பில் மக்கள் கூறுவதாகவும் தெரிவிப்பர். “யார் ஆண்டால் நமக்கென்ன?” என்று பொறுப்பற்றுப் பேசக் கூடாது என்றும் சொல்வர். உண்மையில் இது இராமாயணக் கதையில் இடம் பெற்ற தொடராகும். இலங்கையில் சுக்கிரீவன் தலைமையில் படையெடுத்து இலங்கை சென்ற வானரர்களால் இராவணனின் வலிமையான படையை எதிர்கொள்ள இயலவில்லை. எனவே, “அயலவர் நாட்டை இராமன் ஆண்டால் நமக்கென்ன? இராவணன் ஆண்டால் நமக்கென்ன? யார் ஆண்டாலும் நமக்கொன்றும் இல்லை” என்று வானரர்கள் கூறிப் பின்வாங்கினர். இதைத்தான் இப்போது தவறாகக் கூறி வருகின்றனர்.
“இதில்,… … ராசிபுரம், உள்ளிட்ட 17 தொகுதிகள்”
எனக் குறித்துள்ளனர்.
இச்செய்தியில் 17 தொகுதிகளின் பெயர்களும் இடம் பெற்று விட்டன. அப்பொழுது உள்ளிட்ட என்று குறிக்க வேண்டிய தேவை எங்கே வந்தது? ஆகிய தொகுதிகள் என்றுதானே குறித்திருக்க வேண்டும்.
உள்ளிட்ட என்பது தவறாகும். உட்பட என்றுதான் குறிக்க வேண்டும்.
ஆகிய, போல, முதலிய எனச் சொற்களின் பொருள் அறிந்து சரியான சொல்லைத் தெரிந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும்.
உலகிலேயே டாப் சிட்டி இதுதான்… இங்க போனா மாஸா என்ஜாய் பண்ணலாம்;
லிஸ்டில் இந்தியாவிற்கு இடம் இருக்கா?
இரு வரித் தொடரில் ஐந்து அயற் சொற்கள்; நான்கு கொச்சைச் சொற்கள்; நான்கு சொற்கள்தாம் சரியானவை. இவற்றிற்குத் தமிழ் தெரியவில்லை என்றால் இத்தகையோருக்கு ஏன் வேலை கொடுக்க வேண்டும்? அல்லது இவ்வாறு தமிழில் ஏன் செய்தி யிதழ் வெளியிட வேண்டும்? அல்லது தெரிந்தே இதுதான் தேவை எனத் தமிழ்க்கொலை புரிகின்றார்கள் எனில் இவர்களுக்கெல்லாம் தண்டனை கொடுத்தாவது திருத்தவேண்டுமே!
top என்னும் சொல், உயர்வு, உச்சி, முகடு, மேல், பம்பரம் முதலான பல பொருள்களைக் குறிக்கும். சிட்டி என்றால் நகரம். எனவே, டாப் சிட்டி என்றால் உயர்வான நகரம். இருப்பினும் பட்டியலில் இடம் பெறும் வரிசை அடிப்படையில் குறிப்பதால் உச்சியில் – முதலிடத்தில் உள்ளதை முதன்மை நகரம் என்பதே சரியாகும்.
சுற்றுலாவிற்கு ஏற்ற சிறந்த நகரங்கள் பட்டியலில் இடம் உள்ளதா? எனக் கேட்கப்படுகிறது. இருக்கா என்று எழுதுபவருக்குக் கிறுக்கா பிடித்திருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறதா? இருக்கிறதா எனச் சொல்லும் அறிவு இருக்கிறதா எனக் கேட்கத் தோன்றுகிறதா?
மேற்குறித்தசெய்தியைப் பின்வருமாறு தெரிவிக்கலாமே!
உலகிலேயே முதன்மை நகரம் இதுதான். இங்கே போனால் பெரிதும் மகிழலாம். பட்டியலில் இந்தியாவிற்கு இடம் இருக்கிறதா?
இச்செய்திக்கு முன்னர் இயற்கை அழகில், கண்டு மகிழ, பொழுதுபோக்க, இனிய பயணத்திற்கு என எந்தச் சிறப்பு குறிக்கப்படுகிறதோ அந்தச் சிறப்பில் முதன்மையான நகரம் எனக் குறித்துள்ளது.
பழைய பஃச்(ஸ்) நிலையம், புதிய பஃச்(ஸ்) நிலையம் பகுதியில் ரோடு ஃசோ(ஷோ)
சென்று வேனில் நின்றபடி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
ஊருக்கு ஊர் பேருந்துநிலையம் என அதன் முகப்பில் எழுதியுள்ளதை எழுதியவரின் கண்கள் காணவில்லை போலும்.
சில கட்சியினரின் சதியால் ரோடு சோ என்பது திடீரென்று பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருவர் மட்டும் தமிழில் குறிப்பிட்டுள்ளார். மன்னிக்கவும் யார் என்ற விவரம் நினைவில் இல்லை. இந்த ஆர்வம் பிறருக்கும் வேண்டும்.
ஊர்திகளில் ஊர்வலமாகச் சென்றால் ஊர்தி உலா எனலாம். அல்லது பரப்புரை உலா என்னும் பொருளில் சுருக்கமாகப் பரப்புலா எனப் புதுச்சொல்லை அறிமுகப்படுத்தலாம்.
பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் பகுதியில் சாலை வலம் / ஊர்தி வலம் சென்று மூடுந்தில் நின்றபடி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை யாற்றுகிறார். அல்லது மேற்கொள்கிறார் எனலாம். இரு வெவ்வேறிடங்களில் உள்ள பேருந்து நிலையங்களைக் குறிப்பதால் பகுதி என ஒருமையில் குறிப்பதை விடப் பகுதிகளில் என்பதே பொருத்தமாக இருக்கும்.
வேன்(van) என்பதை மூடுந்து என்பர். சிலர் கூண்டுந்து என்றும் குறிப்பிடுவர். மூடிய ஊர்தியில் இருந்து யாரைப் பார்க்க முடியும்? அல்லது யார்தான் இவரைப் பார்கக் முடியும்? மூடுந்தில் நின்றபடி எங்ஙனம் பரப்புரை மேற்கொள்ள இயலும்? குறுசுமையுந்தாக இருப்பின் நின்றுகொள்ள வாய்ப்பு இருக்கும். பொதுவாகத் திறவை உந்து எனலாம்
“முன்னதாக தமிழ்நாடு உள்துறை அமைச்சர் தீரஜ் குமார், தலைமைச் செயலாளர்
முருகானந்தம், தமிழக டிஜிபி, போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள்
மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.”
இவ்வாறு கவனமின்றித் தவறான தகவலுடன் செய்தி வருவதை நாளும் காணலாம். செய்தியாளர் உள்துறைச் செயலரை உள்துறைஅமைச்சர் ஆக்கி விட்டார்.
முன்னதாக அடுத்து வல்லினம் மிக வேண்டும். எனவே, முன்னதாகத் . . . என இருக்க வேண்டும்
DGP – காவல்துறைத் தலைமை இயக்குநர். தலைமைக் காவல் இயக்குநர் எனலாம். எனினும் தலைமை இயக்குநர் எனக் குறிப்பிடாமல் பொதுவாகக் காவல் துறையிலேயே காவல்துறை இயக்குநர் என்று தவறாகவே குறிப்பிட்டுள்ளனர். நான் அவர்களிடம் தெரிவித்த பொழுது சிலர் மாற்றி எழுதி வருகின்றனர்.
போலீசு கமிசனர்கள் – காவல் ஆணையர்கள்
மாவட்ட எசுபிக்கள் – மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் > மாவட்டக் கண்காணிப்பாளர்கள்
எனப் பதவிப்பெயர்களையும் பதவிச்சுருக்கங்களையும் தமிழிலேயே குறிப்பிட வேண்டும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்


Leave a Reply