Gnanalaya+10Gnanalaya+Krishnamurthi+with+his+wife_dorathy

ஞானாலயா

 

புதுக்கோட்டையில் ஓர் அறிவாலயம் – ஞானாலயா: கரந்தை செயக்குமார்

 

கிருட்டிணமூர்த்தி நூல்களின் காதலர்ஆகி ஞானாலயா அமைக்கக் காரணமாக இருந்தவர் அவர் தந்தையே!

 

“மூல நூல்களைப் படி” என்ற இவர் தந்தை அறிவுரை வழங்கியதோடு விட்டுவிடாமல், ஒரு கள்ளிப் பெட்டியில் இருந்த, தன் பழைய புத்தகங்களில் இருந்து, நூறு புத்தகங்களை 19 அகவயைிலிருந்த இவரிடம் கொடுத்தார்; இவற்றையெல்லாம் நீ, பாதுகாத்துப் படி. என்றார்.

 

இவர் மனம் மகிழ்ச்சியால் விம்முகிறது. நூறு புத்தகங்களையும், ஒவ்வொன்றாய்த் தொட்டுப் பார்க்கிறார்.

 

நூறு கோடி உரூபாய் சொத்துக்களைப் பெற்றதைப் போன்ற ஓர் உணர்வு, ஒவ்வொரு நூலாய்ப் படிக்கிறார்.

 

ஒவ்வொரு பக்கமாக, நூலைப் புரட்டப் புரட்ட, ஒவ்வொரு நூலாகப் படிக்கப் படிக்க, மனத்தில் ஓர் எண்ணம், மெல்ல மெல்ல தலை நீட்டி, வாழ்வின் இலட்சியமாய் உருவெடுத்தது. “இனி நூல்களே என் வாழ்வு” என்னும் முடிவிற்கு வந்தார்;  நூல்களைத்திரட்டிப் பிறருக்கு உதவத் தொடங்கினார்.

 

நூல்களின் காதலர்கள் ஆன கிருட்டிணமூர்த்தி – டோரதி ஆகிய இருவரும், வாழ்விலும் இணையர்களாய் இணைந்த போது,   உலகிற்கு உதவும் நூலகம் உருவானது.

   ஒருவர் ஊதியம் என்பது போய், இருவர் ஊதியமும், நூல்களாய் மாறி, இவர்களது வீட்டினை நிரப்பத் தொடங்கின.

      வீட்டையே நூலகமாக ஆக்கியிருந்த இருவரும் ஓய்விற்குப் பின்னர்த் தங்களின் ஓய்வூதியப் பணம் முழுவதையும் செலவிட்டு, பல இலட்ச உரூபாய் செலவில், புத்தகங்களுக்காகவே, ஓர் ஆலயம் எழுப்பினர். அதன் பயனே ஞானாலயா என்னும் அறிவுக் கோயில்

 

     சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை, சட்ட நூல்கள், சித்த வைத்தியம், பைபிள், இசுலாமிய மொழிபெயர்ப்புகள், காகிதத் துணியினால் ஆக பகவத் கீதை உள்ளிட்ட பல புத்தகங்களும், இலக்கியத் தரமும், தொன்மையும் கொண்ட சிற்றிதழ்கள் எனக் கிடைத்தற்கரியநூல்கள், இங்கே ஒவ்வொரு நூலடுக்கிலும் மெருகு குலையாமல் அமர்ந்திருக்கின்றன.

    இவர்களது திரட்டலில் உள்ள அற்புதமான செய்தி என்னவென்றால், இவர்களது நூல்கள் பெரும்பாலானவை முதற் பதிப்பு நூல்களாகும்.

    1938 இல் வெளிவந்த பாரதிதாசன் கவிதைகள் முதற் பதிப்பைப் பார்த்தேன். வெளியிட்டோர் ‘குஞ்சிதம், பி.ஏ.,எல்.டி., கடலூர்’ என்று போட்டிருந்தது. உள்ளே புரட்டினால், ஒரு சமர்ப்பணக் கவிதை, அடுத்து கனம் இராமநாதனுடைய பாராட்டுரை, பெரியாரினுடைய அணிந்துரை. வ.ரா.வினுடைய சிறப்புரையெல்லாம் இருந்தது.

    இவையெல்லாம் 1950 க்குப் பிறகு வந்த பதிப்புகளில் இல்லை. இதையெல்லாம் பார்த்த பிறகுதான், முதற் பதிப்புகளைத் தேட ஆரம்பித்தேன்.

 

நண்பர்களே, இன்று இவரது ஆலயத்தில் – ஞானாலயாவில் – கொலுவீற்றிருக்கும் நூல்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

 

ஓராயிரம், ஈராயிரம் அல்ல, முழுதாய் இலட்சத்திற்கும் மேல்.

 

ஒவ்வொரு நாளும் புத்தகங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.

 

இவரது பெருமை அறிந்த பல பதிப்பகத்தார், தங்களது வெளியீடுகளை, இவருக்கு, இலவசமாகவே வழங்கி வருகின்றனர்.

 

கடந்த 14.4.2015 சித்திரைத் திங்களின் முதல் நாள்,

ஞானாலயா

என்னும், இந்நூல் ஆலயத்தை, அறிவாலயத்தைக் காணும்

வாய்ப்பு எங்களுக்குக் கிட்டியது.

 

      எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன், உதவித் தலைமையாசிரியர் திரு அ.சதாசிவம், ஆசிரியர்களான திரு சி.விசயக்குமார், திரு வி.பாலசுப்பிரமணியன், திரு எசு.தனபாலன், திரு வி.பிரகாசம், நண்பர்கள் திரு க.பால்ராசு, திரு எசு.டி.செளந்தரராசன், திரு எசு.சேகர் மற்றும் நான் எனப் பத்து பேர், ஞானாலயாவில் நுழைந்து, புத்தக அடுக்குகளுக்கு இடைய மூச்சுத் திணறித்தான் போனோம்.

    ஞானாலயா திரு கிருட்டினமூர்த்தி அவர்கள் பேசப் பேச, இவ்வுலகில் இருப்பதையே மறந்து, புதியதோர் உலகில் உலாவத் தொடங்கினோம்.

      ஆயிரம், இரண்டாயிரம் புதுக்கல்(கி.மீ) தொலையில் இருந்தால் கூட, யாராவது இவரை அழைத்து, ஞானாலயாவில் இருக்கும் ஒரு புத்தகத்தைப் பற்றிக் கேட்டால், அந்தப் புத்தகம், இத்தனாவது நூலடுக்கில், இத்தனாவது வரிசையில், இத்தனாவது புத்தகமாய் இருக்கிறது, எடுத்துப் பாருங்கள், என்று சொல்லக் கூடிய அளவில், ஞானாலயா கிருட்டிணமூர்த்தி அவர்களின் உதிரத்தில் ஒன்றெனக் கலந்து விட்ட நூலகம் இது.

   ஆய்வு மாணவர்கள் யார் வேண்டுமானாலும், எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும், இவரது நூலகத்திலேயே தங்கி, ஆய்வு செய்யலாம். தங்குமிடம் இலவசம், ஏன் உணவும் கூட இலவசம்.

      நண்பர்களே, உங்கள் இல்லங்களில், பழங் காலத்திய நூல்கள் இருக்குமானால், இவர்களை அலைபேசியிலோ, தொலைபேசியிலோ அழையுங்கள், அடுத்த நாளே உங்கள் வீட்டிற்கு வருவார்கள்.

 

நூலகத்தை அறிவியல் முறைப்படி மேம்படுத்தி, விரிவுபடுத்தி, பாதுகாக்க வேண்டும் என்பதே இவர்களது, தற்போதைய கவலை, கனவு, இலட்சியம் எல்லாம்.

 

நூல்களை அட்டவணைப் படுத்தி கணினியில் பதிவு செய்து, இணையத்தில் ஏற்ற விரும்புகிறார். நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த நூல்களை, நுண்படம், படப்பதிவு முறைகளில் மாற்றம் செய்ய விரும்புகிறார்.

 

இதற்குத் தேவை நிதி ஆதாரம்.

 

    தங்கள் வாழ்நாளில், உழைத்து, உழைத்துச் சம்பாதித்த, ஒவ்வொரு காசையும், இவர்கள் ஞானாலயாவிற்காக மட்டுமே செலவிட்டிருக்கிறார்கள்.

 

ஆனாலும் போதவில்லை. யானையின் பசிக்குச் சோளப் பொறி போலத்தான் இவர்களது வருவாய் உள்ளது.

 

விரும்புவோர் தாராளமாய் நன்கொடையினை வாரி வாரி வழங்கலாம். நன்கொடைகளுக்கு முற்றிலும் தகுதியான இடம். அதுமட்டுமல்ல!  நன்கொடைகளுக்கு வரி விலக்கும் உண்டு.

 

நூல்களுக்கென்றே

தம் வாழ்நாளை ஈந்து வாழும்

ஞானாலயா இணையரைப்

போற்றுவோம்

வாழ்த்துவோம், வணங்குவோம்.

முகவரி

பா.கிருட்டிணமூர்த்தி,

ஞானாலயா ஆய்வு

6, பழனியப்பா நகர்,

திருக்கோகர்ணம்,

புதுக்கோட்டை – 622 002

தொலைபேசி  04322 2221059

அலைபேசி 99 65 63 31 40

மின்னஞ்சல் gnanalayapdk@gmail.com

வலைப் பூ   http://www.gnanalayaresearchlibrary.blogspot.com

 

– கரந்தை செயக்குமார்

http://karanthaijayakumar.blogspot.com/2015/06/blog-post.html