முனைவர் அ. அறிவுநம்பி

முனைவர் அ. அறிவுநம்பி

பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு!

  புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரும், எங்களின் உள்ளங் கவர்ந்த ஆசிரியருமான பேராசிரியர் அ. அறிவுநம்பி அவர்கள் உடல்நலம் குன்றிய நிலையில் இன்று (பங்குனி 27, 2048 / 09.04.2017) பகல்பொழுதில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். பேராசிரியர் அ. அறிவுநம்பி அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினர், மாணவர்கள், நண்பர்கள் என அனைவரின் துயரிலும் பங்கேற்கின்றேன்.

  முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் குடும்பம் மிகச்சிறந்த தமிழ்க் குடும்பம்.தமிழ் அவர்களின் பரம்பரைச் சொத்து என அழுத்தமாகக் குறிப்பிடலாம்.அறிவுநம்பி அவர்களின் முன்னோர் இராமநாதபுரம் அரண்மனையில் அரசவைப் புலவராக இருந்த பெருஞ்சிறப்பிற்கு உரியவர்கள்.சேதுபதி மன்னரின் மேல் பல சிற்றிலக்கியங்களை எழுதிய பெருமை மிக்க புலவர்களுள் இவரின் முன்னோர் குறிப்பிடத்தக்கவர்.

 அவர்தம் திருப்பெயர் சரவணப்பெருமாள் என்பதாகும்(இச் சரவணப் பெருமாள் என்ற பெயரின் அடிப்படையில் தம் மகனுக்குச் சரவணன் எனப் பேராசிரியர் அறிவுநம்பி பெயரிட்டுள்ளமை அவர்தம் மரபு பேணும் பழக்கத்தைக் காட்டும்).தனிப்பாடல் திரட்டில் இவர்தம் பல பாடல்கள் உள்ளன.சேதுபதி மன்னர் மேல் விறலிவிடு தூது பாடியமையும் கந்த வருக்கச் சந்த வெண்பா உள்ளிட்டவை பாடியமையும் புலமை நலம் மெய்ப்பிக்கும் சான்றுகளாகும்.

 புலவர் சரவணப்பெருமாள் அவர்களின் மகனார் பூவார்சாமி என்பதாகும். அவர் மகன் பேராசிரியர் பூ. அமிர்தலிங்கனார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் பணிபுரிந்து ஒய்வுபெற்றவர். இவர்களும் வள்ளுவர் கண்ட உயிரினங்கள்,கம்பன் கவியரங்கில் மலரமுதன், கருத்தும் கற்பனையும் என்னும் தமிழ் நூல்களை வழங்கியவர். பேராசிரியர் பூ.அமிர்தலிங்கனார் அவர்களுக்கும், இராசலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர்தான் (10.11.1952) நம் மதிப்பிற்குரிய முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள்.பிறந்த ஊர் காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்.

  தொடக்கக் கல்வியைக் காரைக்குடி சுபாசுநகர் நகராட்சிப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை காரைக் குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர்.கவியரசு முடியரசனார், புலவர் ஆ.பழனி ஐயா உள்ளிட்டவர்கள் இங்கு இவருக்கு ஆசிரியப் பெருமக்களாக விளங்கியவர்கள் ஆவர்.புகுமுக வகுப்பை அழகப்பர் கல்லூரியிலும்,இளம் அறிவியல்(கணக்கு) பட்ட வகுப்பையும் நிறைவு செய்த பின்னர் முதுகைலத் தமிழ் இலக்கியம் பயின்றவர்(1976).

  பின்னர் முனைவர் பட்டத்திற்குத் தமிழகத்தில் நடைபெறும் தெருக்கூத்துகள் பற்றிய தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து பட்டம் பெற்றவர்(1980). மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர் பணியைத் தொடங்கி(1981-86),புதுவைப் பல்கலைக் கழகத்தில் இணைப்பேராசிரியர் பணியேற்று(1986-97),பேராசிரியராக மிளிர்ந்து(1997-98), துறைத்தலைவராக, இயக்குநராக, முதன்மையராக(Dean) பணியாற்றும் பெருமை பெற்றவர்.

  இதுவரை இவர் நெறிப்படுத்த 18 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இளம் முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 20 ஆகும். முதுகலையில் பாடம் பயிற்றுவித்த பட்டறிவு இவருக்கு 26 ஆண்டுகளாக உண்டு. தமிழக, புதுவை அரசுகளின் பல்வேறு அமைப்புகளிலும், பல்கலைக் கழகங்களிலும் உறுப்பினராக இருந்து பல பணிகளைச்செய்து வருபவர்.

 கல்விக்குழு, பாடத்திட்டக்குழு, ஆட்சிக்குழு என இப்பொறுப்புகள் அமையும். பல்வேறு கருத்தரங்குகளின் அமைப்பாளராக இருந்து நடத்திக் காட்டியவர். பயிற்சியரங்குகள் பலவற்றிற்குப் பொறுப்பேற்று நடத்திக் காட்டியவர்.

  உலக அளவில் நடைபெற்ற 13கருத்தரங்குகளில் கட்டுரை படித்த பெருமைக்கு உரியவர். தேசிய அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் 40 ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார். உலக நாடுகள் பலவற்றிற்குக் கல்விப் பயணம் மேற்கொண்டவர். இலங்கை, சிங்கப்பூர்,மலேசியா, உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

  நாட்டுப்புறவியல்,சங்க இலக்கியம், அரங்கக்கலை, சொற்பொழிவுக்கலைபற்றிய பல பயிலரங்குகளில் பயிற்றுநராக விளங்கியவர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்திய பெருமைக்கு உரியவர்.

  முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் பல்வேறு தமிழ்ப் பணிகளை, திறன்களை அறிந்த நிறுவனங்கள் இவருக்குப் பல சிறப்புகளைச் செய்துள்ளன.அவற்றுள் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றபொழுது முதல் வகுப்புப் பெற்றமைக்குத் தங்கப்பதக்கம் பெற்றதும். கம்பவாணர் பரிசில்,சிறந்த உலக மாந்தன் விருது(1999), தொல்காப்பியர் விருது(புதுச்சேரி அரசு) பெற்றமையும் குறிப்படத் தக்கனவாகும்.

பேராசிரியர் அ.அறிவுநம்பி அவர்கள் வழங்கிய தமிழ்க்கொடை

01.கூத்தும் சிலம்பும், 1977

02.தமிழகத்தில் தெருக்கூத்து, 1986

03.நாட்டுப்புறக் களங்கள், 1989

04.தமிழரின் வழிபாட்டுச் சிந்தனைகள், 1990

05.தமிழர் மறந்த தமிழர் மரபுகள், 1991

06.பாவேந்தரின் பன்முகங்கள். 1992

07.தமிழரின் தெய்வநெறிச் சிந்தனைகள், 1993

08.இலக்கிய வித்தகங்கள், 1994

09.தமிழ் வளர்ச்சி சிக்கல்களும் தீர்வுகளும்,1995

10.வளர்தமிழ்க் களங்கள், 1996

11.கம்பரின் அறவியல், 1997

12.பல்துறைத் தமிழ், 1998

13.கம்பர்காட்டும் மள்ளர் மாண்பு, 1999

14.புள்ளிகள்(கவிதை நூல்), 2000

15.இலக்கியங்களும் உத்திகளும், 2001

16.தமிழியல் சிந்தனைகள், 2002

17.செந்தமிழ்ச் செம்மல்கள், 2003

18.இலக்கிய நோக்குகள், 2004

19.சிலம்பின் எதிர்க்குரல், 2005

20.பொருள் புதிது, 2006

21.இலக்கியத் தளங்களில், 2007

பேராசிரியர் அ.அறிவுநம்பி அவர்களின் முகவரி:

முனைவர் அ.அறிவுநம்பி

15,கலைவாணி நகர், இலாசுப்பேட்டை,

புதுச்சேரி- 605 008

பேசி :

இல்லம் 0413- 2256699