வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16). துயி லொழித்தல்
[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15) – தொடர்ச்சி]
மெய்யறம்
இல்வாழ்வியல்
46. துயி லொழித்தல்
- உடம்புள வயர்வினை யொழிப்ப துறக்கம்.
உடலில் உள்ள களைப்பை நீக்குவது உறக்கம் ஆகும்.
- அவ்வயர் வளவிற் கதிகமா வதுதுயில்.
அளவிற்கு அதிகமான உறக்கம் களைப்பை ஏற்படுத்தும்.
- சுழுத்தியா முறக்கஞ் சுகத்தை வளர்க்கும்.
கனவுகள் அற்ற உறக்கம் ஆரோக்கியமான வாழ்வைத் தரும்.
- கனவுக ளாந்துயில் கவலையை வளர்க்கும்.
கனவுகள் உடைய உறக்கம் நோயை ஏற்படுத்தும்
455.துயில்கொள வழிவாந் துயில்விட வாக்கமாம்.
அதிகமான உறக்கம் அழிவை ஏற்படுத்தும். அளவான உறக்கம் செல்வத்தைத் தரும்.
- அயர்விற் கமையு மைம்மூன்று நாழிகை.
களைப்பினை நீக்க ஆறுமணி நேரத்தூக்கம் போதுமானது ஆகும்.
- மற்றைய பொழுதெலா மாண்டொழில் புரிக.
விழித்திருக்கும் நேரத்தில் சிறப்பான தொழில் செய்திடல் வேண்டும்.
- தொழில்செயும் பொழுது துயில்வரி னுலாவுக;
தொழில் செய்யும் பொழுது துயில் வந்தால் உலாவுதல்;
- கைத்தொழின் முதலிய மெய்த்தொழில் செய்க;
மேலும் கைத்தொழில் போன்ற உடலைப் பயன்படுத்திச் செய்யும் தொழில்களைச் செய்தல்;
- அவசிய மெனினுண வரையினுஞ் சுருக்குக.
மேலும் அதிக உறக்கம் வந்தால் உணவின் அளவைக் குறைத்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
– அறிஞர், செம்மல் வ.உ.சிதம்பரனார்
Leave a Reply