இத்தகையோர்  இருப்பதைவிட இறப்பது நன்றே!

 

வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ? அரசியல்சீர் வாய்க்கப் பெற்றோர்

ஆணிகர்த்த பேடிகளோ? அரும்புலவர் ஊமைகளோ? இல்ல றத்தைப்

பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ? பெருவாழ் வுக்கோர்

ஏணிபெற்றும் ஏறாத தமிழர்உயிர் வாழ்வதிலும் இறத்தல் நன்றே. 6

 

மிகுகோவில் அறத்தலைவர், அறநிலையக் காப்பாளர், விழாவெ டுப்போர்,

தகுமாறு மணம்புரிவோர், கல்விதரும் கணக்காயர், தம்மா ணாக்கர்,

நகுமாறு நந்தமிழை நலிவுசெய்யும் தீயர்களோ? நல்வாழ் வுக்கோர்

புகும்ஆறு புறக்கணித்தும் தமிழர்உயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 7

 

மகிழ்ச்சிசெய வருங்கூத்தர், மாத்தமிழை மாய்ப்பதுண்டோ? வாய்ப்பாட் டாளர்,

இகழ்ச்சியுற நடப்பதுண்டோ? இசைப்பாடல் ஆக்குபவர் இழிவேன் ஏற்றார்?

நகச்சிலசொற் பொழிவாளர் நாணற்றுப் போயினரோ? வாழ்வுக் கான

புகழ்ச்சியினைப் போக்கடித்தும் தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 8

 

கூற்றமென வாழ்வதுவோ தமிழுக்கே ஏடெழுதும் கூட்டம்? தீமை

மாற்றவரும் அச்சகத்தார் வகைமறந்து போனாரோ? சொல்லாக் கத்தார்

தூற்றுமொழி ஏன்சுமந்தார்? துண்டறிக்கை யாளருமோ தீயர்? வாழ்வில்

ஏற்றமுற எண்ணாத தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 9

 

நல்லஅரும் பொருளுடையார் நந்தமிழ்க்கோ பகையாவார்? நாட்டில் ஆணை

சொல்லவரும் அரசியலார் செந்தமிழ்நா டிதுவென்றும் தெரியார் போலும்!

வல்லவரும் பெரியநிலை வாய்த்தவரும் என்செய்தார்? இன்ப வாழ்வின்

எல்லையறிந் தும்திருந்தாத் தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 10

– பாவேந்தர் பாரதிதாசன்