தலைப்பு-இனிப்புத்தோப்பே, ஆரூர்தமிழ்நாடன் : thalaippu_inpputhoappu_aarurthamizhnaadan

 இனிப்புத் தோப்பே

னவுகளின் தாயகமே…
கவிதைகளின் புன்னகையே
வைரத் தேரே!..

கண்வளரும் பேரழகே…
கால்முளைத்த சித்திரமே
இனிப்புத் தோப்பே..

.
நினைவுகளை அசைக்கின்றாய்…
நெஞ்சுக்குள் நடக்கின்றாய்…
தேவ தேவி…
நின்றாடும் பூச்செடியே…
உன்பார்வை போதுமடி
அருகே வாடி.

பார்வைகளால் தீவைத்தாய்;
பரவசத்தில் விழவைத்தாய்;
தவிக்க வைத்தாய்!

ஊர்வலமாய் என்னுள்ளே
கனவுகளைத் தருவித்தாய்
சிலிர்க்க வைத்தாய்.

நேர்வந்த தேவதையே
நிகரில்லா என்நிகரே
உயிர்க்க வைத்தாய்.

யார்செய்த சிற்பம்நீ?
எவர்தந்த திருநாள்நீ?
மலைக்க வைத்தாய்.

உன்பிறப்பை உணர்ந்ததனால்
நீ பிறக்கும் முன்பாக
நான் பிறந்தேன்;
என் நோக்கம் அறிந்ததனால்
எனக்குப்பின் நீ பிறந்தாய்
இயற்கை வாழ்க!

ஒன்றுக்குள் ஒன்றாக
உயிர்கலந்து வாழத்தான்
வந்தோம் இங்கே;
இன்னுமேன் தயங்குகிறாய்
இருக்கின்ற வாழ்க்கையினை
வாழலாம் வா!

அரூர் தமிழ்நாடன்02 " aarurthamizhnaadan02
ஆரூர் தமிழ்நாடன்

http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=68