தலைப்பு-இன்பத்தமிழினிற்பாடு : thalaippu_thamizhinirpaadu

யாழெடு யாழெடு கண்ணே! – யாழில்

இங்கே இசைத்திடோர் பண்ணே!

ஊழிடு துன்பம் பறக்க – நெஞ்சில்

ஓங்கியே இன்பம் சிறக்க –             (யாழெடு)

வேயின் குழலிசை யோடு – இள

வேனிற் குயிலெனப் பாடு!

நோயின் துயரெலாம் ஓட – உயர்

நோக்கமும் ஆக்கமும் கூட –           (யாழெடு)

இன்பத் தமிழினிற் பாடு! – இனம்

ஏற்ற முறத்தினம் நாடு!

அன்னைத் தமிழ்த்திரு நாடு – நலம்

ஆர்ந்திடவே வழி தேடு! –         (யாழெடு)

நற்றமிழ் கற்றுநீ தேய்வாய்! – பாரில்

நம்மினத் தாருடன் சேர்வாய்!

வெற்றிமேல் வெற்றியே கொள்வாய்! – மூ

வேந்தர் பெருமையை விள்வாய்! –     (யாழெடு)

இன்பந் தருந்தமிழ்ப் பாட்டு! – அதற்(கு)

ஈடில்லை என்றுநீ காட்டு!

துன்பத் தெலுங்கிசை கேட்டு – நொந்த

தொல்லை தனைவிரைந் தோட்டு! –       (யாழெடு)

வள்ளுவர் மாட்சியைப் பாடு! – குறள்

வாய்மை நெறிதனிற் கூறு!

தெள்ளுதமிழ்ப்புகழ் ஓங்கத் தடை

செய்யும் பகையெலாம் நீங்க –               (யாழெடு)

செந்தமிழ்ப் பெண்மையின் மாட்சி – தனைச்

செப்பிட வேண்டுமுன் காட்சி!

விந்தைச் சிலம்பென்றன் கண்ணே – என்று

விள்ளுவாய் எந்தமிழ்ப் பெண்ணே –           (யாழெடு)

புலவர் பொதிகைச்செல்வன்

தேனமுதம்   : சித்திரை 2018 / மே 1997